Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
லுணுகம்வெஹர பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று, புனித வெள்ளியை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு, காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர,
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஒரு நாடாக குறிப்பிடத்தக்களவு சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் சுமார் 05 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், நம் நாட்டில் 2.5% ஆக இருந்த தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கையை 3% ஆக அதிகரிக்க முடிந்துள்ளது. நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகிறது.
மேலும், ஆடை மற்றும் நெசவுத் தொழில் நிறுவனம் ஏறக்குறைய 500 பிள்ளைகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. IDB நிறுவனத்துடன் இணைந்து பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்களை உருவாக்கி மாணவர்களை பாராட்ட முடிந்துள்ளது.
பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சியாளர் சூழலை உருவாக்குவது மக்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கு பெரும் ஆதரவை அளிக்கிறது என்பதையும் கூற வேண்டும். இதன் மூலம் நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
குறைந்த வருமானம் பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான 17 இலட்சம் பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மதிய உணவு திட்டமும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், களிமண், பித்தளை, பிரம்பு ஆகிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், இத்தாலி, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இந்நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆசிய அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து, சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், பிரம்புகளை எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து 500 பிரம்புகள் வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், களிமண் போக்குவரத்தில் அதிகபட்சமாக 05 கியுப்களை அனுமதிப்பதற்கு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் கலந்தாலோசித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்திருந்தது.
இதன்படி 4 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனம்காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், குற்றவாளி என நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் மீது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், லஞ்சமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட 500 ரூபாவை பண அபராதமாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின்
மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் 27 ஆம் திகதி மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள்
ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
இலங்கையின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, இறைமையின் பாதுகாப்பிற்காக சீனா எப்போதும் முன்னிற்கும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவை பெய்ஜிங்கில் நேற்று சந்தித்த போதே சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் நட்புறவு, அமைதி, பரஸ்பர மரியாதை உள்ளிட்ட கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயற்பட இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானங்களின் விலைகள் குறைக்கப்படும் என தற்போது பரவலாகப் பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கலால் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
மதுபானங்களின் விலையை குறைக்கும் நோக்கில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மதுபான விலைகள் குறைக்கப்படும் என ஊடகங்களில் தற்போது செய்திகள் வெளியாகி வருவதாக கலால் திணைக்கள பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மதுபானங்கள் மீதான கலால் வரியை திருத்தியமைக்க கலால் திணைக்களம் அதன் தகுதியான அதிகாரமான நிதியமைச்சகத்திடம் இருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் பெறவில்லை, எனவே மதுபானங்களின் விலை குறைக்கப்படாது என்றார்.
எனவே மதுபானங்களின் விலை குறைப்பு குறித்த செய்திகள் பொய்யானதும், அடிப்படை ஆதாரமற்றதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கலால் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி டெய்லி மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில், விலைவாசி உயர்வினால் நாட்டில் மதுபான பாவனை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திணைக்களத்திற்கு ரூ.232 பில்லியன் புதிய வருடாந்த இலக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
2023 ஜனவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் மதுபான உற்பத்தி 650,000 லீற்றர் குறைந்துள்ளதால் இந்த எண்ணிக்கையை அடைவது கேள்விக்குறியாக உள்ளது என குணசிறி கூறினார்.
கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை
கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை
கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
கடந்த 26 ஆம் திகதி சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டார்.
இந்த வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஆபாச காணொளி நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை
ஆபாச காணொளி நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை
சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள “internet watch foundation”க்கு தெரிவிக்கப்படுகின்றன.
அதன் பின்னர் அந்த நிறுவனம் ஊடாக குறித்த ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், முறைப்பாடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதை கண்டறிந்து, சர்வதேச பொலிஸ் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வௌியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி
மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன.
அந்த மசாஜ் நிலையங்களின் பணிப்பெண்களில் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறையான அனுமதியின்றி மசாஜ் நிலையங்கள் இயங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இயங்கும் 53 மசாஜ் நிலையங்கள் கடந்த வாரம் முதல் நீர்கொழும்பு பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தலைமையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும் “சவிய” நிகழ்ச்சியின் இடையே போதைக்கு அடிமையானவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையங்களுக்கு வழமையாக செல்பவர் என தெரியவந்ததை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையங்களில் அவசர பரிசோதனை ஆரம்பமானது.
அந்தச் சோதனையின்போது, அந்த நிலையங்களில் மசாஜ் சேவையில் ஈடுபட்டிருந்த 120 இளம்பெண்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களில் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் இருந்து வௌியேறிய சிறுமியை இனந்தெரியாத நபரொருவர் மசாஜ் நிலையத்தில் விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த 15 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு மசாஜ் பணிப்பெண்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பிரதேசங்களில் உள்ள அனைத்து மசாஜ் நிலையங்களையும் மூடுவதற்கு நீர்கொழும்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த மசாஜ் நிலையங்களின் விளம்பர பலகைகளை அகற்றவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த மசாஜ் மையங்களின் சட்டபூர்வமான தன்மை குறித்து நீர்கொழும்பு மாநகர ஆணையாளரிடம் கேட்டறிந்தோம்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் சட்டரீதியாக எந்தவொரு மசாஜ் நிலையமும் நடத்தப்படவில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அதன்படி, மாநகர சபையின் அனுமதியின்றி இந்த நிலையங்கள் நடத்தப்படுவதால் இவற்றை ஒழுங்குபடுத்த முடியாது என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும், உரிமம் இல்லாமல் இயங்கி சமுதாயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மசாஜ் நிலையங்களை ஆய்வு செய்து, சட்டத்தை அமுல்படுத்தியதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்
தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்
குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதனையடுத்து, குருநாகல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தன
காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்
காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை புதன்கிழமை (27) முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முல்லைத்தீவு கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்
எனினும் இராணுவ தளபதியை தற்போது சந்திக்க முடியாதெனவும் புதன்கிழமை (27) மாலை 3 மணியளவில் 5 நபர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொண்டு தருவதாகவும் இராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த கவனயீர்ப்பினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (25) கேப்பாபுலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்திருந்தனர்.
கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது..
குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு
2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள 2 சொகுசு வீடுகள் அல்கொய்தா மற்றும் தௌஹீத் ஜமாத் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த 2 அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறும் கோரியுள்ளார்.
இந்த மனுக்கள் நேற்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் லுக்மான் தாலிஃப் என்ற நபர் இந்த வீடுகளின் உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்ததோடு, குறித்த வீடு தௌஹீத் ஜமாத் மற்றும் அல்கொய்தாவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட திருப்திகரமான தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வீடுகளை பொலிஸாருக்குக் காவலில் வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகள் இந்த உத்தரவின் மூலம் மீறப்படாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் குறித்த மனுக்களை நிராகரிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரிக்கை விடுத்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை பாதிக்கும் பாதாள உலக செயற்பாடுகள்
சுற்றுலாத்துறை பாதிக்கும் பாதாள உலக செயற்பாடுகள்
நாட்டில் நிலவும் சூழல்நிலை சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் நேரடியான தொடர்பை கொண்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
”பாதாள உலக செயற்பாடுகள் போன்ற பயங்கரமான சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பெந்தர, அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்றனர். இங்கு துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த மக்கள் இனி இங்கு வரமாட்டார்கள். எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் மிகவும் அவசியம்.” என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது
ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது
சென்னையில் நடைபெற்ற 16 வது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார்.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது.
ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது
பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
அங்கு, ஐயோ சாமி பாடலைப் பாடிய வின்டி குணதிலகவுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சிறந்த உணர்ச்சிப் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.
அவரை வரவேற்க ஏராளமான மக்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த வின்டி குணதிலக்க, “சர்வதேச விருதை நான் பெறுவது இதுவே முதல் முறை. இலங்கைக்கு சர்வதேச விருது ஒன்றை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என தெரிவித்தார்
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த விளம்பரத்திற்கு அமைய, ருவன்வெல்ல பிரதேசத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய சிலர் வந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடமொன்றுக்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் கூரிய ஆயுதங்களால் அவர்களது மோட்டார் வாகனத்தை தாக்கியுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸ் அதிகாரிகள் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

























