வெளியில் தெரியாத வேர்கள்.
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.❗
♣ வெள்ளோட்டம் காணாத தேர்கள்.❗
♣ தலைவன் துணைநின்ற தோள்கள்.❗
♣ தமிழ்வானில் வலம்வந்த கோள்கள்.❗
♣ வணக்கத்துக்கு உரிய பூக்கள்.❗
♣ வரியில் வடிக்கமுடியா பாக்கள்.❗
♣ பகையை திணறவைத்த பொறிகள்.❗
♣ பலரும் அறிந்திடாத நெறிகள். ❗
♣ எதற்கும் துணிந்த எரிமலைகள்.❗
♣ இலக்கு தவறாத தலைகள்.❗
♣ தேசம் படிக்கவேண்டிய பாயிரங்கள்.❗
♣ தேகம் பிச்செறிந்த உயிராயுதங்கள்.❗

-பிறேமா(எழில்)-

சேரன் குளிர்களி
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

சேரன் குளிர்களி

சேரன் குளிர்களி

பாட்டுச் சத்தம் கேட்டாலே
நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்கும்.
பாட்டி, குழந்தைகள் எல்லாம்
பறந்தோடி வாங்கிக் குடிக்கும்.

ராஜா, லிங்கம், றியோ
தராத சுவையை
சேரன் குளிர்களி தந்தது.
ரோஜாப்பூ வாசமாய்
அவர்கள் சேவையிருந்தது.

றோலுக்க கம்பில்லை
பாலுக்க தண்ணியில்லை
பானுக்க மண்ணில்லை
ஆனால்,
வாழ்வுக்க வசந்தமிருந்தது.

கலப்படமில்லாத வியாபாரம்
களிப்புடன் வாழ்ந்தது சமுதாயம்.
நிழல்படமாய் இதன் நினைவுகள்
நிலையாக எங்கள் நெஞ்சோரம்.

சேரன் பாண்டியன் சுவையூற்று
பேரைக்கேட்கவே பெருகுது
நினைவூற்று அந்த
நேரம் எங்களுக்கு இவையும்
ஆனந்தப் பூங்காற்று.❗

-பிறேமா(எழில்)-

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

அடுக்களையில் குந்தியவள்.
அடுத்தவருக்காய் ரத்தம் சிந்தியவள்.

✍️ பாத்திரங்கள் மினுக்கியவள்.
பாத்திருக்க பகையை நொறுக்கியவள்.

✍️விடுதலையின்றி ஏங்கியவள்.
சுடுகலனை கையில் ஏந்தியவள்.

✍️கவலையில் விழி வாடியவள்.
கடலில் சுழி ஓடியவள்.

✍️இயந்திரமாய் இருந்தவள்.
சுதந்திரமாய்ப் பறந்தவள்.

✍️கடும் சட்டங்களால் துடித்தவள்.
கரும்புலியாக வெடித்தவள்.

✍️புறநானூற்றை மேவியவள்.
பிறநாட்டுடன் மோதியவள்.

✍️புலிவடிவாக சீறியவள்.
புயல் மழையாக மாறியவள்.

🍁பூவாக மலர்ந்தவள்.
👍புது வரலாறாக நிமிர்ந்தவள்.❗

-பிறேமா(எழில்)-28-05-2024

பாதுகாப்பு வலயமென்று
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

பாதுகாப்பு வலயமென்று

பாதுகாப்பு வலயமென்று

பாதுகாப்பு வலயமென்று
பாதை தேடி நகர்ந்தோமே!
பாதகரின் ஆப்பு என்று
பாதம் வைக்க உணர்ந்தோமே!

பாதி வாழ்வை தக்கவைக்க
பாரங்களைச் சுமந்தோமே!
பாரத்தோடு பகலிரவாய்
பாவிகளாய் அலைந்தோமே!

சோறு சுகம் குறைந்தபோதும்
சோர்வு இனறி நடந்தோமே!
சேறுதண்ணியில் புதைந்தபோதும்
தேசம் என்றே கடந்தோமே!

வேறுபடை வந்தபோதும்
வேங்கையாக நிமிர்ந்தோமே!
ஆறமனம் அமைதியின்றி
அடிக்கடி இடம்பெயர்ந்தோமே!

காலம் பதில் சொல்லுமென்று
கனவோடு வாழ்கிறோமே!
காயங்களைச் சுமந்துகொண்டே
காலங்களைக் கடக்கிறோமே!

-பிறேமா(எழில்)-

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

பதினெட்டாம் நாளில்
படாத பெரும்பாடுபட்டு
பிணம் தொட்டு அளைஞ்ச
பெரும்துயரைச் சுமந்துசென்று

பனங்கொட்டு நிறமுடைய
படையினர் ஆட்சிக்குள்ள
உயிர்விட்ட உடல்பிணமாய்
உள்ளுக்குள்ள கால்வைத்தோம்.

கொட்டி கொட்டியாவென ஆமி
கிட்டவரப் பயந்து, பேரூந்தில்
முட்டமுட்ட அடைஞ்சு
மூச்சுவிடேலாம அவிஞ்சு

செட்டையுரிச்ச கோழிபோல
செட்டிகுளம் போனகதை
ஐயோ!

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

செத்திருந்தாலும் பரவாயில்ல.
ஏனம் அரக்கி அரக்கி
எலும்பு நாரிமுறிய
சாமம்வரை காத்திருந்து

சருவத்தில தண்ணியெடுத்து
ஓமம் வளர்ப்பதுபோல் உடம்பை
ஒவ்வொருக்கா ஒத்தியெடுத்த
பாவப்பட்ட எம் நிலையை
பாவில் வடிக்கேலுமோ?

காலைக் கடன்முடிக்க
காப்போத்தில் தண்ணியோட
மாலைவரை அடக்கி அடுத்த
மத்தியானம் போய்க்குந்த

ஆளைக் கண்டவுடன்
அரைகுறையா எழும்பி நாம்
அவஸ்தைப்பட்ட நிலையை
ஆரிடம் போய்ச்சொல்ல..

கியூவில உறவுகள் வந்து
கிட்டவரேலாமல் எட்டிநின்று
சூவிலுள்ள புலிபோல
சூம்பண்ணி எமைப் பாத்து

மாவில்செய்த பலகாரத்தை
மாத்தையாவிடம் அனுப்பியதை
சாவிலும் மறக்கேலுமோ?
சரித்திரம் நிறைய உண்டு.

வனாந்தர காட்டுக்குள்ள
வளைக்கப்பட்ட ரென்ருக்குள்ள
பனங்கிழங்கு அடுக்கியதுபோல்
பதினைந்து பேர் கிடந்து

சினந்து, சிரங்குவந்து
சீழ்வடிந்து சீரழிஞ்சு
இணைந்து வாழ்ந்ததை
இன்றைய சந்ததி அறியுமோ?

கொன்னைத் தமிழ் கதைப்போர்
கூர்ந்து எமைப்பார்க்க
இன்னஇவர் இயக்கமெண்டு
எங்கடையள் காட்டிக்கொடுக்க

உண்ணஏதும் தருவினமோவென்று
ஒவ்வொருநாளும் ஓடிப்பாத்து
என்னயிது வாழ்க்கையென்று
ஏதிலியாய் எத்தனை நாட்கள்.

வெய்யிலில் வாடிவதங்க
விழுப்புண் புழுப்பிடிக்க
கையினில் எதுவுமின்றி
காண்பவரைக் கடன்கேட்க

செய்ய ஏதும் வழியின்றி
செத்தபாம்பாய் சூழ்ந்திருந்ததை
சீ..சீ ..செட்டிகுளமும் மறக்காது
சீவியத்திலும் இது மறையாது❗

-பிறேமா(எழில்)-19-05-2024

தனியாகப் போறவளே
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

தனியாகப் போறவளே

தனியாகப் போறவளே

தண்டவாளப் பாதையிலே
தனியாகப் போறவளே!
மண்டகுழம்பித் தவிக்கிறன்
மனமுருகிப் பாராயோ?

கொளுத்தும் வெயிலில்
கோபமாய் நடப்பவளே!
கெழுத்து மீனைப்போல
குறும்பார்வை குத்துதடி

பளையில் பிறந்தவளோ
பதுளையில் வளந்தவளோ
கலையில் சிறந்தவளோ
மழையில் நனைந்தவளோ

யுனி முடிச்சவளோ
யூனியனில் படிச்சவளோ
பனி பிடிச்சவனாய்
பரிதவித்து அலையிறனே

ஆற்ற மகளெண்டு
அறிந்த நாள்முதலாய்
மீற்றர் வண்டிபோல் மனசு
மேட்டர் ஆனதடி

அம்மாடி உன் அழகில்
பூஞ்சாடி தோற்குதடி
சிம்கார்ட்டு சிறுத்ததுபோல்
என்கார்ட்டு குறுகுதடி

கண்ணால கண்டதனால்
கனவெல்லாம் நீதான்டி
சுன்னாகம் வந்தபின்னும்
உன்னால தவிக்கிறன்டி

ஓமெண்டு நீ உரைத்தால்
ஓடியோடி நான் உழைப்பேன்
நோவெண்டு நீ மறுத்தால்
நொதேனில போய்க்கிடப்பேன்

வல்வை மண்ணெடுத்து
வடிவான பொட்டுவைப்பேன்
நல்லைக் கந்தனுக்கு
நமஸ்காரம் செய்துகொள்வேன்

வாகைப் பூப்பறித்து
தோகையே சூட்டிடுவேன்
தாகம் உனக்கெடுத்தால்
தண்ணிரூற்று காட்டிடுவேன்

மாவடிக்கு வாடிபெண்ணே
காவடிபோல் தூக்கிடுவேன்
தாவடியில் வீடுகட்டி
தாலிகட்டிக் கூட்டிப்போறன்

சும்மா நான் கத்தேல்ல
வேல இன்றி சுத்தல்ல என்ர
அம்மாமேல சத்தியம், உன்ர
அப்பா வாறார் பத்திரம்.

  • பிறேமா(எழில்)-
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

இரவல் வாங்கி ஓடிய காலம்
இரவு பகலா இதே மோகம். அதில்
இடையால நுழைந்து ஓடிய யோகம்
இனிக்கிடைக்காது இந்தப் போகம்.

கிரவல் வீதிகளாய் கிடந்த நேரம்
கிபிர்போல் பறந்துபோன வேகம்.
பரவல் மண்ணும் உரஞ்சிய காலம்
பட்டுமாறியதே எத்தனை காயம்.

இருமல் தடிமன் வந்தபோதும்
இருந்து ஆறாமல் குதித்த காலம்.
குருமன் குஞ்சுகள் ஓடுவதைப் பார்த்து
குடும்பமே ரசித்த அழகிய காலம்.

பிளசர்கள் பல்சர்கள் பிறக்காத காலம்
பெரிதா வசதிகள் சிறக்காத காலம்.
இளசுகள் பெரிசுகள் இருந்துகதைக்க
எடுத்துக்கொண்டு மெதுவா ஓடியகாலம்.

கைப்பேசி கணனி காணாத காலம்.
கண்முன் தெரியாப் போகாத காலம்.
அப்பாச்சி அக்ரிவா அறியாத காலம்
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்.

-பிறேமா(எழில்)-

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே!
இருப்பவர்களையாவது
இறக்கவிடாமல் பறக்கவிடு!
விழிமேல் விழிவைத்து
வேண்டாத நேர்த்தி வைத்து
வழியெங்கும் காத்திருந்த
வயதான தாய்மைக்கு
பழிதீர்த்த பாரதமே
பாரினில் உன்செயல் பாதகமே!

சத்துமா வாங்கிவைத்து
சாந்தன் மகனுக்கொரு
முத்தம் கொடுக்கும்வரை
முகம்காணும் மகிழ்வுவர
சுத்துமாத்து செய்து எப்படியே
செத்துப்போக விட்டுட்டியே!

இளமை கருக கருக
இளகாத உன்குணம்
வழமைக்கு மாறுமென்று
வாசல்வழி பார்த்திருக்க
தனிமைக்கும் முதுமைக்கும்
தண்டனையை கொடுத்திட்டியே!

தப்புச் செய்யாதவரையும்
தண்டனையால் வதைத்து
எப்படித்தான் மனம்வருகுது
எங்கள் வலியில் விளையாட
இப்படித்தான் இனியும் நடக்கும்
இருப்பவர்களையாவது பறக்கவிடு!

-பிறேமா(எழில்)-

டெங்கொழிக்க எங்களின் பங்கு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

டெங்கொழிக்க எங்களின் பங்கு

டெங்கொழிக்க எங்களின் பங்கு

சிரட்டை பேணி கோம்பைகளை
நீர் தேங்காமல் வை!
குறட்டை விட்டுத் தூங்க வீட்டைக்
கூட்டிப் பெருக்கனும் உன் கை!

பொலித்தீன் பைகள் யோக்கற் கப்பும்
சூழலுக்கு கேடு!
பொழுது சாய்ந்து தூங்கும்போதும்
நுளம்பு வலை போடு!

அரட்டையடிச்சு அலட்சியமா யிருந்தா
அழிச்சிடும் நுளம்பு!
விரட்டியடிக்க செயற்படனு மென்று
வீட்டார்க்கு விளம்பு!

கிடைத்தற்கரிய உயரிய பிறப்பு
மானிடப் பிறப்பு!
இடத்தை தூய்மைப் படுத்தாவிட்டால்
கிடைப்பதே இறப்பு!

தேங்கும் நீர் தங்கி நின்றால்
டெங்கு ஊதும் சங்கு!
எங்கும் சுத்தம் பேணும் நலனே
எங்களின் பங்கு❗

-பிறேமா(எழில்)-

மழைக்காலத் துன்பங்கள்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

மழைக்காலத் துன்பங்கள்

மழைக்காலத் துன்பங்கள்

தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது

கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது

சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது

அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது

வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது

நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது

கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !

-பிறேமா(எழில்)-

நாங்கள் மலர்ந்துவிட்டோம்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.

மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.

சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.

தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.

மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.

காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗

-பிறேமா(எழில்)-

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானென்று
கூர்ப்பு விளக்குது – திரை
அரங்கினில் நின்று
தொங்குவதைப் பார்க்க
அதுவும் விளங்குது.

வருசா வருசம்
விஜய்யும் அஜித்தும்
திரையில் வருவினம். – இங்கு
வலியோடு வாழும் ஈழத்
தமிழன் வாழ்வுக்கு
என்ன தருவினம்?

கலையை மதிப்பதும்
அதனை ரசிப்பதும்
அவரவர் உரிமைகள் – அதற்குன்
நிலையை அழிப்பதும்
நினைவை இழப்பதும்
வாழ்விலென்ன பெருமைகள்.

ரொக்கெட் செலுத்தியும்
விக்கற் வீழ்த்தியும்
பொக்கெற்றை நிரப்புறார்கள் – நீங்கள்
டிக்டொக்கை அமத்தியும்
சீக்ரட்டை பத்தியும் ஏன்
மாக்கெற்றை இழக்கிறீர்கள்.

திரிஷா பிறநடிகைகள்
பெரிதா செய்ததை யார்க்கும்
தெரிந்தால் சொல்லுங்கள் – அல்லது
ஒரிசா பாலுவையும்
தெரேசா அன்னையையும் முடிந்தால்
உசிரா வணங்குங்கள்❗

-பிறேமா(எழில்)-

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

குண்டு மழை நடுவிலும்
கொள்கையோடு கற்றோம் – உலகம்
கண்டு கொள்ளா நிலையிலும்
கல்வியினைப் பெற்றோம்.

மண்டை பிளக்கும் வெயிலிலும்
மரநிழலில் கற்றோம் – கொடும்
சண்டை நடந்த நேரத்திலும்
சலிக்காமல் கற்றோம்.

பராலைற் வெளிச்சத்திலும்
படிப்பினைத் தொடர்ந்தோம் – வளம்
இராத காலங்களிலும்
வல்லோராய் வந்தோம்.

உயிர்காத்து கற்பித்தோர்க்கு
உயர் மதிப்பைக் கொடுத்தோம் – அன்று
உயிர் துறக்கும் வாழ்வினிலும்
உயர் மதிப்பெண்கள் எடுத்தோம்.

தந்தை தாயின் உதவியின்றித்
தனியாகச் சென்றோம் – நல்ல
சிந்தையுள்ள குருமாரைச்
சந்தித்ததால் வென்றோம்.

அண்டை நாட்டின் சதியினாலும்
அழுதழுது கற்றோம் – என்றும்
அன்றையநாள் கல்வி வாழ்வை
எப்படித் தான் மறப்போம்❗

-பிறேமா(எழில்)-

இளைஞரில்லா இலங்கை
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

இளைஞரில்லா இலங்கை

இளைஞரில்லா இலங்கை

யுத்தமொன்று வந்ததனால்
மொத்த உறவும் பறந்தன.
முத்தமிட்ட அன்னை மண்ணைச்
சத்த மின்றிப் பிரிந்தன.

சொத்துப்பத்து ஈட்டவென்றும்
சொந்த நாட்டைத் துறந்தனர்.
நித்திரையை மறந்தங்கே
நித்தம் உழைப்பில் இறந்தனர்.

புத்திஜீவி கல்விமான்கள்
பிற நாடுதேடி ஓடினம்.
பத்தியெரியும் வயிற்றுடனே
பலர் குத்தியிங்கு முறியினம்.

கலைஞர் இளைஞர் கன்னிகளும்
கனடாக் கனவில் மிதக்கினம்.
அலைகள்போல அள்ளுப்பட்டு
அங்கே போக நினைக்கினம்.

இக்கரைக்கு அக்கரையென்று
இருந்ததெல்லாம் பறக்குதாம்.
சக்கரையில்லாப் பொங்கல்போல
சேர்ந்தபிறகு வெறுக்குதாம்.

செத்த வீட்டில் பங்குகொள்ளச்
சொந்தங்களும் இருக்காது.
சுத்தியுள்ள சாமி தூக்கப்
பக்தர்களும் கிடைக்காது.

பெத்தவர்க்குக் கொள்ளிவைக்கப்
பிள்ளை ஒன்றும் இருக்காது.
புத்தருக்கு விகாரைகட்ட – இனி
இங்கு போராட்டமும் நடக்காது.

-பிறேமா(எழில்)-

தியாகத்துக்கான காவடி தமிழர்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

தியாகத்துக்கான காவடி தமிழர்

தியாகத்துக்கான காவடி தமிழர்

தியாகத்துக்கான காவடி தமிழர்
தாயகத்தின் காவடி.
மனக்காயத்தோடு உறங்கியவனின்
மரியாதைக்கான காவடி.

கடவுளுக்கான காவடி மக்கள்
கண்ணீரின் காவடி.
நினைவுகளைச் சுமந்தை செல்லும்
நெஞ்சங்களின் காவடி.

திலீபனுக்கான காவடி தேச
வீரனுக்கான காவடி.
வலியோடு நோன்பிருந்தவனுக்காக
வரலாற்றுக் காவடி.

அகிம்சைக்கான காவடி பெரும்
அநீதிக் கெதிரான காவடி.
வம்சங்கள் செடில் குத்தியாடும்
விடுதலைக்கான காவடி.

பருக நீர்மறுத்து பலநாள்
பசி இருந்தவனுக்கான காவடி.
முருகன் வாசலில் மூச்சுவிட்ட
புதல்வனுக்கான நாளடி❗

-பிறேமா(எழில்)-