ஈழச்சுடர்கள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழச்சுடர்கள்

ஈழச்சுடர்கள்

கொஞ்சு மன்னைத் தமிழீன்ற
ஒளிச் சுடர்கள்
மிஞ்சு கவி தந்தெமக்கு உயிரீன்ற விழிச் சுடர்கள்
மஞ்சு உளங் கொண்டு தமையீன்ற
ஈழச் சுடர்கள்

நஞ்சு மதை மஞ்சமென மமதையுடன் அணிந்திருந்த தனிச்சுடர்கள்
வெஞ் சமரில் வடுவேந்தி
வீறுடனே வாழ்ந்திருந்த
பெருஞ் சுடர்கள்

நெஞ்ச மதில் உறுதியுடன் ஈழமெங்கும் நடை புரிந்த
புயற் சுடர்கள்
தஞ்ச மென பெருந்தலைவன் அணி சேர்ந்து கைகோர்த்து பலம் சேர்த்த
கருஞ் சுடர்கள்

வஞ்ச மிலா அன்பு கொண்டு உறவாடி மகிழ்ந்திருந்த பூஞ்சுடர்கள்
துஞ்ச லிலே தூயதொரு வித்தான
தூய சுடர்கள்
எஞ்ச மிலா வார்த்தைகளுக்குள் அடக்க முடியா நெருப்புச் சுடர்கள்

கஞ்ச மிலா தீரங் கொண்டு வெடி சுமந்து பகை முடித்த உயிராயுத சுடர்கள்
பஞ்ச மிலா வாழ்வுதனை தம் மக்கள் வாழ வழி செய்து
காலத்தை வென்ற தியாகச் சுடர்கள்

காற்றுங் கூட புகா இடம் புகுந்த கரும்புலிகள்
மாற்றங் கொண்டு ஈழம் அமைக்க வழி சமைத்த அத்திவாரக் கற்கள்
சீற்றங் கொண்ட மாற்றானை வேரறுத்த கந்தகங்கள்
ஏற்றங் கொண்ட உம் ஈழக் கனவு பலித்திடும் ஓர் நாள்
அந்நாளே எமக்குத் திருநாள்!

-நிலாதமிழ்(ஒருத்தி)
05.07.2024.

மேஜர் திலகா வான்மதி
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

மேஜர் திலகா / வான்மதி

மேஜர் திலகா /வான்மதி

மேஜர் திலகா /வான்மதி , வீர மண்ணின் நாயகியின் நினைவு நாள் இன்றாகும் .மேஜர் திலகா / வான்மதி
வீரப்பிறப்பு: 11.10.1971 வீரச்சாவு: 12.06.1999
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை

முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார்.

நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான்.

திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம்.

முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1

சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சி

987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர்.

இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார்.

சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார்.

குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார்.

1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள்.

பெண் போராளிகள்

உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர்.

அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார்.

1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார்.

கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர்.

தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை

1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார்.

ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார்.

கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார்.

பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை என்றால் பிழை தான்” என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார்.

ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார்.

பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார்.

மனதளவில் அன்பாகப் பழகுவார்

ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”.

களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது.

1995 ஆம் ஆண்டு (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.

அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.

மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர்.

(ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்)

யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன.

சளைக்காத திலகா அக்கா

எதற்கும் சளைக்காது திலகா அக்காவும் சிறப்புற பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான்.

எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும்.

வழங்கல் சரியாக உரிய நேரத்தில் சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின்

வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம் திறந்து வைக்கப்பட்டது.

சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர்.

1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது

கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும் அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார்.

கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி

கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார்.

நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது.

தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார்.

இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார்.

தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார்.

ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்கா

ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர்.

ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர்.

விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை.

போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும்.

“எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள்.

1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள்.

திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார்.

பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார்.

திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம்

திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.

அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார்.

ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது.

அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார்.

அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது.

ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது.

இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்.

அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது.

காப்பரணுக்கு துணையாக தாக்குதல்

ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக் காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை நோக்கி பதிலடி கொடுத்தார்.

எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான்.

திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது.

நெஞ்சுரம் நிமிர்ந்த தோற்றம்

அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார்.

தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர்.

ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள்.

“போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார்.

திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது.

நெஞ்சிலும குண்டு

உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது.

எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக வீர வரலாறாகினார்.

தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம்.

-நிலா தமிழ்.

(இந் நினைவுப் பகிர்வுக்கு தகவல் குறிப்புகள் வழங்கியவர் -விண்ணிலா)

கப்டன் கலைமதி
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

கப்டன் கலைமதி

கப்டன் கலைமதி

கப்டன் கலைமதி ,அது 1995 காலப்பகுதி. வெள்ளை மேற்சட்டையும் (shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர்

வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம். எப்பொழுதும் எதற்கும் அணித்தமாக இருப்பது போல் அவருடைய எறும்பு

போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது.

கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற்பெயருடன் அக்காமார், அண்ணன்,

தங்கை, தம்பிகள் கொண்ட இயல்பான குடும்பத்தில் பிறந்தவர் தான். தந்தை ஒரு புகைப்படக்கலைஞராக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றை

நடத்திவந்தார். மற்றவர்கள் போலவே கல்வி, வாழ்க்கை என்று அவரின் வாழ்வும் நகர்ந்தது. கணக்கியல் உயர் தேசிய கல்வியையும் (HNDA) நிறைவுசெய்து, நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

காலத்தின் தேவைகருதி 1993 காலப் பகுதியில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர், புரட்டாதி மாதம் தனது ஆரம்பப் பயிற்சியை மகளிர் பயிற்சிப் பாசறையில் 27ஆம் அணியில் “சுகி” முகாமில் மேற்கொண்டார்.

பயிற்சியில் ஓடும் போது அவருடைய ஒரு காலில் சுழிவு ஏற்பட்டது. அப்படியிருந்தும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டதால் கால் எலும்பு முறிந்து விட்டது. அதனால் மிகுந்த இடர்ப்பட்டதுடன் துன்பத்தையும் அனுபவித்தார்.

அதன் பின் 1994 பங்குனி மாதமளவில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கு அனுப்பப்பட்டார். சிறிது காலம் சிகிச்சையில் அவர் இருந்தாலும் கணக்காய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

அங்கு தான் அவருடைய ஆளுமை வெளிப்பாடு தெரிய வந்தது. அத்துடன் வெளிவாரி வர்த்தக பட்டப் படிப்பையும் (first in commerce) அங்கிருந்தே தொடர்ந்தார்.

நிதித்துறை வழங்கல் பிரிவின் வாணிபங்களின் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய பணி நேர்த்தி அவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். தானும் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களையும் வீணடிக்க விடாமல் வேலை செய்வது அவரின் திறமை.

வழங்கல் பகுதியில் இரும்புத் தொழிலகம், புடவை வாணிபம், கோல்சர் வாணிபம், தையல் தொழிலகம், அடுக்கணி வாணிபம் என பல வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை திறம்பட மேற்கொண்டார்.

1995 ஐப்பசி மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தை வன்கவர்வதற்காக வான் தாக்குதல்கள்,

எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதானல் அங்கிருந்து வெளியேறி, சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுப் பணிகள்

தொடர்ந்தன. மீண்டும் தரை வழியாகவும் வான் வழியாகவும்bகரையோரத் தாக்குதல்கள் மூலமும் பகுதி பகுதியாக சிறிலங்கா இராணுவத்தினர் எமது ஊர்களை வன்கவர்ந்த வண்ணமிருந்தனர்.

1996 பங்குனி மாத நடுப் பகுதியில் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்றபோதும் வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணி ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.

ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் மனம் சோராமல் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நீண்ட தொலைவுக்குச் சென்றும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் பணிகள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டன.

அத் தருணத்தில் தான் இழந்த ஒன்றிற்காக இன்னொன்றைப் பெறுவதற்காக ஓயாத அலைகள்1 நடவடிக்கைக்காக மேலதிக தேவை கருதி நிதித்துறை மகளிர் அணியும் படையணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.

கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு

அதில் கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.பயிற்சியின் போது உடைந்து பொருந்திய காலுடன் மிகவும் சிரமப்பட்டார்.

இருந்தபோதும், ஒருநாளும் பயிற்சிக்குப் பின் நின்றதே இல்லை. குறிப்பிட்ட எண்ணிக்கை முழு வட்டமும் ஓடி முடித்தே ஆக வேண்டும். அவரால் ஓட முடியாத நிலையில் நடந்தேனும் ஓட்டத்தினை நிறைவுசெய்வார்.

இயலாவிட்டால் முகாமுக்குத் திரும்பச் செல்லுமாறு பணித்தாலும் போக மாட்டேன் எனக் கூறி பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வார்.

தனக்குக் கிடைத்த களமுனைக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட அவர் விரும்பவில்லை. சாப்பாடு எடுக்கும் முறை அணிக்குழுவில் அவருக்கு வரும்போது

அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் சாப்பாடு எடுக்கும் பெரிய சட்டியை (டாசர்) கீழே பிடித்துக்கொண்டு வர கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதனால் சட்டியை (டாசர்)

தலையில் சுமந்துகொண்டு தாண்டித் தாண்டி நடக்க வெளிக்கிட்டு விடுவார். ஓயாத அலைகள் 1 வெற்றியடைய சத்ஜெய 1 நடவடிக்கையும் நடந்து முடிந்தது.

மீண்டும் களமுனையிலிருந்து முகாம் திரும்பி தனது தொடர்ச்சியான பணியை மேற்கொண்டார். சிலவேளைகளில் நாங்கள் முகாமில் உணவு சமைத்தும் உண்பதுண்டு.

அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால்

அப்போது கலைமதி அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால் சவர்க்காரம் போட்டுக் கைகழுவ மாட்டார். ஏனென்றால் கையில் அடிக்கடி அதை மணந்து பார்த்து மகிழலாம் என்பார். அத்துடன் சமையற்கூடப் பகுதியில் சோறு கூட எடுத்து வரச் சொல்லிக்

கூறுவார். ஏனென்றால் அதில் நீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சம் புளி எல்லாம் விட்டு பழஞ் சோறு குழைத்துத் தருவதற்கு தான். அவர் அவ்வாறு தரும் பழஞ்சோற்றின் சுவையோ தனிதான்.

அவரை முகாமில் ஒரு மூத்த அக்கா போல் கருதுவார்கள். ஏனெனில் அறிவுரைகள் சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்தவர்.

சக போராளிகளாயினும் பணியாளர்களாயினும் யாரையும் இலகுவில் பகைத்துக்கொள்ள மாட்டார். கண்டிப்பாகவும் அதேநேரத்தில் உறவோடும் பழகக்கூடியவர்.

எனவே அவருக்கென்று ஒரு தனிமரியாதை எல்லோரிடத்திலும் இருந்தது. நீண்டகாலமாக வழங்கல் பகுதி வாணிபங்களின் கணக்காய்வை அவர் திறம்பட செய்து வந்தார். வழங்கல் பகுதிப் பொறுப்பாளராக அம்மா அண்ணை இருந்து வந்தார்.

இருப்பு எடுத்தல் தொடங்கி விட்டால் கலைமதி அக்காவை கேட்கவே தேவை இல்லை. “திருவெம்பாவை பாட வெளிக்கிட்டுட்டா” என எல்லோரும் கூறுவார்கள்.

இரவில் பெற்றோல் மக்ஸ் விளக்கையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு கொட்டிலாக பார்ப்பதற்கு கிளம்பி விடுவார்.

“இந்த மனிசியுடன் குடும்பம் நடத்த இயலாது” என இவருடன் பணி செய்பவர்கள் பகிடிக்கு கூறுவர். இதனையும் ஒரு நாள் அவர் கேட்டு விட்டார். ஆனால் கோபிக்காமல் சிரித்து சமாளித்து வேலை செய்விப்பார்.

வழங்கல் பகுதி புடவை வாணிபம் சுதந்திரபுரத்தில் தான் இருந்தது. கணக்காய்வுப் பணி நிமித்தம் அங்குள்ள முகாமில் கலைமதி அக்கா மற்றைய போராளிகளுடன் தங்கியிருந்து வந்தார்.

அதிகாலை புலர்ந்தது. அன்று புதுக்குடியிருப்புக்கு சென்று தனி நபர் வழங்கல் எடுக்கும் நாள்.

தன்னுடன் துணையாக பணி செய்த போராளியை அங்கு செல்ல அணியமாகுமாறு கூறிவிட்டு தேநீர் தயாரிக்க பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அந்தப் போராளி தயாராகி வந்து பார்த்த போது பாற் சட்டி கருகியிருந்தது. கலைமதி அக்கா அங்கு தான் நின்றவர்.

ஆனால் அவருக்கு அது தெரியவில்லை.

1998 ஆனி மாதம் பத்தாம் நாள் அன்று தான் சுதந்திரபுரத்தில் அந்தத் துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தது. திடீரென சிறிலங்கா இராணுவம் அப்பகுதி மீது வான், தரை மற்றும்கடலிலிருந்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடத்தியது.

அதில் பெருமளவு மக்கள் (33 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்), பல பணியாளர்கள் படுகாயமடைய, பலர் கொல்லப்பட்டனர்.

யார் நினைத்தார் இப்படி நடக்கும் என்று. அந்தக் கோர நிகழ்வில் எமது கலைமதி அக்காவும் (கப்டன் கலைமதி) அம்மா அண்ணாவும் (லெப்.கேணல் அன்பு/அம்மா) வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

“புடவை வாணிபம் இல்லாவிடில் தான் இல்லை” எனக் கூறும் எங்கள் கலைமதி அக்கா என்றும் எம் தேச வரலாற்றில் நீங்காமல் நிறைந்திருப்பார்.

நிலா தமிழ்

(இந் நினைவுப் பகிர்வுக்குத் தகவல் குறிப்புகள் வழங்கியவர்- விண்ணிலா)

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்


எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல் அவள் சிதைக்கப்பட்ட சிலையாய் தூக்கி வீசப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்தாள்.
அச்சிலையைப் பற்றி அறியாதவர்கள் அதன்மேல் கழிவுகளைக் கொட்டி அதைக் காலால் மிதித்து மேலும் காயப்படுத்திக் கொண்டு இருந்தனர்.


வாழ்க்கையை வலியோடு நகர்த்த முயன்று கொண்டிருந்த அந்த சிலையின் அருகே வழிப்போக்கன் ஒருவன் வந்தமர்ந்தான்.

சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி


அந்தச் சிலையின் அருமையை ஆராய்ந்து அறிந்தவன், இப்பேர்ப்பட்ட சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி என்று கூறி, அச்சிலையை தூசி தட்டித் தூக்கி நிறுத்தினான்.


என்னை முதன்முறை சிலையாக மாற்றியவனே சிதைத்து தூக்கி வீசி விட்டான். இவனைப் பார்த்தால் சிற்பியாகவே தெரியவில்லை என்று சிதிலமடைந்த சிலை சிரித்தது.

காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி


காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி பிழையாகத்தானே இருக்கும் எனப் புரிந்து கொண்ட அவன், பிறந்த குழந்தையைப் போல அச்சிலையை கண்ணியமாய்க் கவனித்துக் கொண்டான்.


அரைகுறைச் சிற்பி எண்டாலும் அச்சிலையின் வலியை அழகாய்ப் புரிந்து கொண்டு மருந்திடத் தொடங்கியவன், அவ்வப்போது அச்சிலைக்கே தெரியாமல் அதன் போக்கில் அதை அழகாய்ப் புதுப்பிக்க ஆரம்பித்தான்.


வெயிலோ, மழையோ, புயலோ, பூகம்பமோ வந்தாலும் அச்சிலையை விட்டு அகலாமல் இருந்தவன், எப்படியோ அதன் கால்களை ஆவலுடன் தன்னுடன் சேர்ந்து நடப்பதற்கு தயார்ப்படுத்தி விட்டான்.

சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான்


காலப்போக்கில், காயமடைந்த சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான். வலியை முற்றிலுமாக மறந்த அச்சிலையின் கண்களை மீண்டும் காதலால் நிரப்பினான்.


இரண்டாம் முறை காதல் கண்ணாடியை கையில் எடுத்து அச்சிலை மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டிருப்பதை ஆசையாய் தயங்கியபடி பார்த்து இரசிக்கத் தொடங்கியது.


நடைப் பயணமாய்….பேருந்துப் பயணமாய்….ரயில் பயணமாய்….

அச்சிலை காண நினைத்த இடங்களெல்லாம் உடன் சென்றவனிடம், அவ்விடங்களுக்கும் அதிலிருக்கும் நினைவுகளையும் தன்னையறியாமல் கூறிக் காயப்படுத்தினாலும் அதை அவன் காட்டிக் கொள்ளாமல்,

அந்த நினைவுகளிலிருந்து நிதானமாய் அச்சிலையை வெளிக் கொண்டு வரத்தொடங்கினான்.


இரண்டாவதாக செதுக்கப்பட்ட காதல் என்றாலும் இயல்பை விட இன்றியமையாத ஒன்றாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே என்று நினைத்துக் கொண்ட அந்தச் சிலை அவனை அவமதிக்காமல் அரைகுறைச் சிற்பி என்றாலும் ஆசையாய் அணைத்துக் கொண்டது.


ஆறுதலும் ஆதரவும் அரவணைப்பும் அக்கறையும் அன்பும் மதிப்பும் காதலின் எண்ணத்தில் உண்மையாக இருக்கிறதா என்று எண்ண வேண்டுமே தவிர எண்ணிக்கையில் எத்தனையாவது என்று எண்ணத் தேவையில்லை.


02.06.2024. நிலா தமிழ்

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

லெப்ரினன்ட் புகழினி 24 ஆவது ஆண்டு நினைவு

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,வீரவணக்கங்கள் பேணி(புகழினி)என்றும் உன் நினைவுகளுடன்
லெப்ரினன்ட் புகழினி

யார் இந்த புகழினி


புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லுத் தெரியச் சிரிக்கும் கள்ளமில்லா வெண்சிரிப்பும் கல கல என்று எந்த நேரமும் வாயோயாமல் அலட்டும் வெகுளித்தனமான பேச்சும்.

கட்டைக் காலை வைத்துக்கொண்டு பாதத்தால் ஈருளியின் மிதிகட்டையை தொடமுடியாமல் அவதிப்பட்டு தெண்டித் தெண்டி ஈருருளி ஓட்டும் அழகு தான்.

அவளிடம் அணியும் ஆடை, செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,
எந்த நேரமும் “அயர்ன் ” பண்ணி (ironing) மடிப்புக் கலையாத ஆடைதான் அணிவாள்.

எந்த வேலையென்றாலும் நாளைக்கு செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.

எங்களின் நாவற் பழ நிறத்தழகி அவள். தெற்றுப்பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அவள் சராசரி உயரத்தை விட சற்று குறைவான குள்ளமான உருவத்தை உடையவள். இதனால் அவள் பல சிரமங்கள் சந்திக்க வேண்டி இருந்தது.

இவளது அழகிய சிறிய குடும்பம்

எடுத்துக்காட்டாக,சைக்கிள் ஓட்டுவதற்கு கூட எதாவது ஒரு உயரமான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.

இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள்
எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.

அம்மா, அப்பா, தம்பி, அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது. அவளது சொந்தப்பெயர் மேரி கொன்ஸ்ரலின். வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.

அவளது சொந்த இடம் யாழ்,வலிகாமப்பகுதியில் சில்லாலை என்ற கிராமம். அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.

வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதான் காரணத்தால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தி

1994 ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாள்.


1995 ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்சநிலையை அடைந்திருந்தது.

வலிகாமப்பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை வன்கவர முன்னேறி வந்துகொண்டிருந்த போது எமது போராட்டத்தின்உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.

அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் “வண்ணக்கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்…

இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்…

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்” என்று 1995 ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.

அங்கு அவள் மகளிரணியின் 30 வது பயிற்சிப் பாசறையில் புகழினி பெயருடன் போராளியாகப் புடம் போடப்பட்டாள்.


பின்பு 1995ம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.

கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம்

புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து,பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற்கொண்டாள்.

அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் அதே வேளை தேவைப்படும்போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.

அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக்கொண்டாள்.

தற்காப்புக் கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி


தற்காப்புக்கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றாள். அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம் (break dance) ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.

எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் (முறிப்பு ) நடனமாடி அவள்தான் கதாநாயகியாக திகழ்வாள்.

மேலும் அவள்
வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.

இயக்கத்துக்கு வரும் போது

இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு ஈருருளி கூட ஓட்டத்தெரியாது. ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக்கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது.


1996 ம் ஆண்டு ஆரம்பகாலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது .

பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.

அவளது நினைவாக

அதில் சிலவற்றை அவளது நினைவாகப் பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன்.


1996 ம் ஆண்டு வன்னிக்கு வன்னிக்கு வந்த புதிதில் எங்களுக்கு பணிக்கு செல்வதற்கு ஈருருளி கூட இல்லை.நானும் புகழினியும் ஈருருளி இல்லாத காரணத்தினால் நடராசாவில் (நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.

எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழமை.

புகழினிக்கு (பேணி) தான் பட்டப்பெயர். (எந்த நேரமும் “லொட லொட” என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு “பேணி” என்ற பட்டப்பெயர் உருவானது) என்னைப் பேணி “அரியத்தார்” என்று தான் கூப்பிடுவாள்.

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

பின்பு பணிக்கு செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு ஈருருளி என்று கொடுக்கப்பட்டது.

அதில் நானும் பேணியும் (புகழினி) தான் ஒன்றாகப் பணிக்குச் செல்வோம். வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் மருத்துவ மனைக்குச் செல்வேன்.

மதிய நேர உணவு இடைவேளை


நாங்கள் பணிமுடித்துவிட்டு மதிய நேர உணவு இடைவேளைக்கு முகாமில் சென்று தான் சாப்பிடுவோம்.

அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவுற சோம்பலில் நானும் புகழினியும் ஒரு தட்டில் தான் உணவு உண்போம்.

சாப்பிட்ட தட்டைக் கழுவோனும் என்ற கள்ளத்தில் நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளிவிட்டு ஓடி விடுவேன்.

அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப்போட்டு வருவாள்.

அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலேயே எனக்கு பெரியதொரு மகிழ்வு இருக்கும் .


1997 ம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகமை கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப்பட்டோம்.

எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள். அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச மனப்பாங்கும், இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள்.

அதனாலேயே அவளை எந்த நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுதுபோக்கு.

பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை


உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

எங்கள் முகாம் முற்றத்தில் பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.

அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தொலைவு வரைக்கும் என்ன நடந்தாலும் பார்க்க முடியும்.

அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து படிக்கிறம் என்று கதைவிட்டு மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து விடுப்பு பார்த்துக்கொண்டு படிப்பதுண்டு.

புகழினிக்கு மாமரத்திலேயே எங்களோடு சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க விருப்பம்… ஆனால் ஏறத்தெரியாது.

அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளிவிட்டு ஒரு மாதிரி ஏற்றிப்போடுவோம்.


மேலே இருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில் இருக்கிற மாம்பிஞ்சுகளால வீதியால் உந்துருளியில் பயணிக்கின்ற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.

அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று வீட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவார்கள்.


ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்குப் பார்த்து எறியத் தெரியாது. இப்படித் தான் ஒரு தடவை அவள் ஒரு உந்துருளிக்கு மாம்பிஞ்சால ஏறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால ஈருருளியில் வந்த அப்பு மேல பட்டு

அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால ஏறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நாலுபேரும் நூறு தோப்புக்கரணம் போட்டதை இப்பவும் மறக்கமுடியாது.

கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்


புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம். நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.

எங்களது முகாமிலிருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும்போது சாப்பிடுவதற்கு நிறைய உலருணவுப் பொருட்கள் கொண்டுவந்து தருவதுண்டு.

அதை தமா அன்ரா தான் (ஒரு அக்காவின் பட்டப்பெயர்தான் தமா அன்ரா) எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்.

அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் (இலாச்சி) பதுக்கி வைப்பார்.

அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது. மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.

தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.

புகழினியை இதுக்குக் கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்,

சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது

சாப்பிட்டால் பிறகு தமா அன்ரா விடம் பேச்சு/கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு (எங்களுக்கு எவ்வளவு பேச்சு/ கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது)
எங்களது முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரங்கள் உண்டு.

அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில்தான் இருக்கிறவர்.

அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழங்கள் காய்ந்திருக்கிறது என்று கண்காணிச்சுக்கொண்டு தான் இருப்பார்.

பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்

எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும். ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவி விட்டு அந்தப் பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சுவைப்பது உண்டு.

இந்தப் பலாப்பழம் பறிக்கின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட நேரக் காவற்கடமை நேரத்தில் தான் நிகழும்.


மற்றக் குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில் இருக்கிற விருப்பத்தில் இதுக்கு மட்டும் எங்களோடு கூட்டுச் சேருவாள்.

பலாப்பழம் ஏறிப் பறிக்கவோ வெட்டவோ வரமாட்டாள். நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுச் களவாணிகளை (முகாமில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்தப் நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை…

பல விசுவாசக் குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்ற பயம்) உறக்கத்தில் இருந்து எழுப்பிக் கூட்டிக் வந்து அவர்களுக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள்.


இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டுப் பலாச் சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால் பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தகார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து

பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை

அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளித்து அனுப்பின கதையை இப்பவும் எங்களால மறக்க முடியாது.

(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விடயங்களில் எங்களுக்குத் தண்டனை தருவதில்லை) இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.


புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.

அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது
சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள்.

வன்னி இடம் பெயர்வு

பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவுக்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குத் கூட அவதிப்பட்டார்கள்.

புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததால் அவளது பிரிவினையைத் தாங்க முடியாமல் கவலைப்பட்டு இருதய நோய் மற்றும் சுவாச நோய் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு மிகவும் அவதியுற்றார்.

அப்பா தான் ஓலைப்பாய், பெட்டி இழைத்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். புகழினியின் தம்பியோ மிகவும் இளையவன்.

அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தான். இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்கு செல்லும்போது புகலினியின் அம்மா “என்ர மகள் வீட்ட இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களின் பார்த்திருக்கலாம் தானே” என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.

ஆனால் புகழினியோ “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு தேவை தானே. உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே” என்று சொல்லிச் சிரித்துச் சமாளித்து விடுவாள்.


புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.

இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.

எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக (album) சேகரித்து வைத்து இருந்தாள்.

சில போராளிகள் வீட்டில் “அம்மாவாணை” என்று சத்தியம் செய்வது போல இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.

அது புகழினிக்குப் பிடிக்காது. சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதீங்கோ என்பாள்.


எங்களின் பொறுப்பாளார் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவளைப் போர்க்களங்களுக்கு அனுப்புவதில்லை.

1999 ம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப்பகுதிக்கு போர்க்களத்துக்கு சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்க வில்லை.

ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து பொறுப்பாளரோடு சண்டை பிடித்து சண்டைக்களத்துக்கு சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்குத் திரும்பினாள்.


பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக விழுப்புண்ணடைந்து மாற்றுத்திறனாளிகளானோர்

நிருவாக நடவடிக்கை

மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்கு மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.


எங்களுக்கும் களப்பணியில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப்பணிகளுக்குச் சென்று வருவோம்.

எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளிநிருவாக்கப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.


அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச்சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்
பயிற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தோம்.

பளை போர் முன்னரங்ககப் பகுதி

அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபடியால் அவர்களுடன் இணைந்து பளை போர் முன்னரங்ககப் பகுதியில் எம் மக்களின் காவற் தெய்வமாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள்.


29.05.2000 அன்று எங்களுக்கு “புகழினி வீரச்சாவாம்” என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.

எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம். பளைப்பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது

எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டாள்.


பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி பெற்று புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்கு சென்றோம்.

எங்கள் புகழினியின் வித்துடல்

அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை இறுதியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.

அதை விட புகழினியின் அப்பா என்னைப்பார்த்து “பிள்ளை உன்னோட தானே என்ர மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய்

என்ரை மகள் எங்கே” என்று என்னைக் கட்டிப்பிடித்து கதறி அழுத்ததும் நானும் குற்றஉணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.

பின்பு 2002 ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் மருத்துவ மனையில் நான் கணக்காய்வு பணியை மேற்கொண்டிருந்தபோது

என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்துக்கு (சில்லாலைக்கு) செல்லப்போகிறோம் என்று சொல்லி விட்டு “என்ர பிள்ளையில்லாமல் போகப்போகிறேன்” என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது.


எங்களின் அன்புத் தோழி புகழினியே…

உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க என் நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.

உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள், தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன்

நடைபிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக்கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் பிணமாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுதும் நீ என்னை “அ ரியத்தார்” என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன்கதை எழுதி வைக்கப்படும்.
வரலாற்று பதிப்பு போராளி எழுத்தாளர் -நிலாதமிழ்.

மெழுகுவர்த்திகள்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகள் , வெள்ளைப் பறவைகள் அன்னநடை போடும் அந்தக் கல்லூரி வாசலில் தினமும் அவளுக்காகக் காத்திருப்பான் அவன்.

யாழ் நகரின் பிரபல பெண்கள் கல்லூரியில் அவளும் பிரபல ஆண்கள் கல்லூரியில் அவனும் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள்.

அவள் பெயர் நிலா. அவன் பெயர் நித்யன். தினமும் நிலாவின் வீட்டு வீதியில் இருந்து அவளது பாடசாலை வரை அவளைப் பாதுகாப்பாக பின்தொடர்ந்து விட்டுச் செல்வான் நித்யன்.

நிலாவும் நித்யனும் ஒரு நாளும் நேரடியாகக் கதைத்தது இல்லை. ஆனால் நிலாவுக்குத் தெரியும் நித்யன் அவளுக்காகத் தான் தினமும் காத்திருக்கிறான் என்று.

    நிலாவின் குடும்பத்தில் நிலா தான் மூத்தவள். அவளுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் என்று அளவான குடும்பம். 

அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. 
அவளது அப்பா நல்ல சம்பளத்தில் அரசாங்க வேலையில் இருந்தார். 

நிலாவினது அப்பா நாட்டுப்பற்று மிகுந்தவர். தினமும் வீட்டில் போராட்டம் பற்றியும் போராளிகளின் தியாகங்கள் பற்றியும் கதைப்பார். 

அதைக்கேட்டுக் கேட்டு நிலாவுக்கும் ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஒரு பற்றும் பாசமும் வந்தது. 

தினமும் தனக்கு அடுத்த தங்கையுடனும் பக்கத்து வீட்டு அக்காவுடனும் இயக்கத்துக்குப் போறதைப் பற்றிக் கதைப்பார்.

  1995 காலப்பகுதி, எமது ஈழ விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற காலப்பகுதி அது. 
வலிகாமப் பகுதியினை எதிரியானவன் கைப்பற்றி வந்தபோது எமது போராளிகள் முன்னேறிப் பாய்ச்சலூடாக சமரிட்ட காலம். 

விமானக் குண்டுவீச்சு

எதிரியானவன் எம் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.

    காலவோட்டத்தில் எதிரி எம் மக்களுக்கு அளித்த இன்னல்களைக் கண்டு அவற்றைக் களைய நிலாவும் போராளியாகினாள். 

அடிப்படைப் பயிற்சி முகாமில் புடம்போடப்பட்டு, நஞ்சுமாலை அணிந்த வரிப்புலியாகினாள். 

 திறமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எமது இயக்கத்தில் அவளது திறமையும் இனங்காணப்பட்டு போராளிகளின் உயிர் காக்கும் மருத்துவப் போராளியாக உள்வாங்கப்பட்டாள்.

    அன்றும் வழமை போல காயப்பட்ட போராளிகளுக்கு தாயாக அவள் தனது பணியினை மேற்கொண்டு இருந்தபோது, சக தோழி ஒருத்தி, “வயிற்றுக் காய கேஸ் ஒன்று வந்திருக்கு அவசரமாக தியேட்டருக்கு வரட்டாம்” என்று அறிவிப்பு வந்திருக்கு என்று கூறினாள். 

நிலாவும் அவசரமாக தனக்கிடப்பட்ட பணிக்கு விரைந்து சென்றாள்.

    அங்கே அவளது நித்யன் மயக்க நிலையில் இருந்தான். நிலாவுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது போல இருந்தது. 

அவன் காயப்பட்டு வெகு நேரமாகி, கொண்டு வர நீண்ட நேரமாகி விட்டமையினால் உள்ளக குருதிப்பெருக்கம் ஏற்பட்டு மிகவும் கடுமையான நிலையில் இருந்தான். இவனைக் காப்பாற்றுவதே கடினம் போல இருந்தது.

 அவளும் சக மருத்துவ போராளிகளும் நித்யனைக் காப்பாற்ற கடுமையாக பல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்தார்கள். 

அது பலனளிக்காமல் போய்விட்டது. நாட்டுக்காக தம்முயிரை ஈய்ந்த ஆயிரமாயிரம் மாவீரச் செல்வங்களின் வரிசையில் நித்யனும் மீளாத் துயில் கொண்டு விட்டான்.

     நிலாவின் பள்ளிக் காதலும் முளையிலேயே கருகிவிட்டது.
 
அவளும் நித்யன் விட்டுச்சென்ற பாதையில் போராட்டத்தின் தேவை கருதி களத்திற்குச் சென்று இப்போது இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில், உறவுகளும் கைவிட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்நாளைக் கழித்துக்கொண்டு இருக்கிறாள்.

“மக்களுக்காக தங்களை உருக்கிய இந்த மெழுகுவர்த்திகளுக்கு விடிவு காலம் இனி எப்போது?”

-நிலா தமிழ்.

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை ,ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள்.

இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது.

இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது.

எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது.

ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள்.

கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது.

அவ்வாறாகப் போற்றப்பட வேண்டிய ஈழத்துக் கொற்றவைத் தெய்வங்களில் ஒருத்திதான் “சாதனா”.

பெயருக்கேற்ற வகையில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்து வரலாறாகிப் போவாள் என்று அவளின் பெற்றோர்கள் அன்று அவளுக்குப் பெயர் சூட்டும்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.

தமிழர் தலைநகரான திருகோணமலையில் தான் இவள் வீரப்பிறப்பெடுத்தாள். சாதனாவின் தந்தையார் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

தாயார் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

அவளது இரண்டு வயது வரைக்குமான வாழ்க்கைப் பராயம் திருகோணமலையில் தான் இனிதே கழிந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் வன்கவரப்பட்டுக் கொண்டிருந்த இவளது தந்தையின் சொந்த ஊரிலே தான் இவளது குழந்தைப் பருவத்தின் முதலிரண்டு ஆண்டுகள் கழிந்தன.

இவளது குடும்பத்தினர் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள், காடையர்கள்,

இராணுவத்தினரின் கொடும் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள்.

இதனால் இவர்கள் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாதனாவின் தாயாரின் பிறப்பிடமான முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்று குடியேறினார்கள்.

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

அங்கு பெயர் சொல்லக்கூடிய மிகவும் செல்வாக்கான வசதிமிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் தான் அவளின் தாயின் குடும்பத்தினர்.

பல ஏக்கர் கணக்கான விளைநிலங்களும் மாட்டுப் பண்ணையுமென செல்வம் படைத்த, பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பத்தினராகவும் அவ்வூரிலேயுள்ள

ஏழை எளியவர்கள் இல்லை என்று வந்து நிற்கும் போது அள்ளிக் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள்.

சாதனா சிறுவயதிலிருந்தே மற்றச் சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேறுபட்ட சிந்தனையுடைய ஒரு அசாதாரணகுழந்தையாகவே காணப்பட்டாள்.

வீட்டிலே அதிகாலையிலே எழும்பி தாயாருக்கு உதவியாகப் பால் கறப்பது. தந்தையாருக்கு உதவியாக வயல் வேலைகளுக்குச் செல்வது.

அவ்வேலைகளை முடித்துவிட்டு வந்து பாடசாலை செல்வது என்று வீட்டிலே பொறுப்புமிக்க மனமுதிர்ச்சி கொண்ட ஒரு குழந்தையாகவே வளர்ந்து வந்தாள்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயுள்ள மிகவும் பிரபல்யமான ஒரு பாடசாலையிலேயே சாதனா தனது கல்வியினை சிறுவயது முதல் கற்று வந்தாள்.

கல்வி, விளையாட்டு, ஓவியம் வரைதல், சிறுகதைகள், கவிதைகள் எழுதுதல் போன்ற பல்துறைகளிலும் ஆற்றல்மிக்கவளாக விளங்கியதோடு மட்டுமன்றி ஆசிரியரை மதித்து நடத்தல்,

சகமாணவரை அனுசரித்துப் போதல், அவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படும்போது முதல் ஆளாக நின்று உதவி செய்தல் போன்ற

காரணங்களினால் கல்லூரியிலேயே அனைவராலும் விரும்பப்படும் ஒரு மாணவியாகத் திகழ்ந்தாள்.

பொதுவாகவே அவளிடம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்கு காணப்பட்டது.

அதாவது வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் ஓடிப்போய் உதவி செய்தல், உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு தனது வீட்டிலிருந்து உணவு

எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து உதவுதல் போன்ற இரக்கமான மனப்பாங்கு கொண்டவளாகக் காணப்பட்டாள்.

இந்திய இராணுவத்தினரால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், உயிர்க்கொலைகள்,

மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட எறிகணை வீச்சுகள், விமானக்குண்டு வீச்சுகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற காரணங்களினால் உளத்தாக்கமடைந்து “கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா…?

அவர் இருக்கிறார் என்றால் இவ்வளவு அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறார்” என்று அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாள்.

இதன் காரணத்தினால் தாயார் கோவிலுக்குச் சென்றுவரக் கூப்பிட்டால் “இராணுவம் இத்தனை அப்பாவி மக்களைக் கொல்லும் போது உந்தக் கடவுள் சும்மா தானே பார்த்துக் கொண்டிருந்தவர்….

அதனைவிட தன்னின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தன் மண்ணிற்காக மக்களிற்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களைக் கும்பிடலாம்”

என்று மறுத்துக் கூறி இறைவழிபாட்டை வெறுத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கே சென்று கல்லறைகளுக்கு மலர் வைத்து வழிபடுவாள்.

பாடசாலைகளில் தமிழீழ மாணவர் அமைப்பினால் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்படும் முதலுதவி வகுப்புகள் மற்றும் சிரமதானப்பணிகள் போன்றவற்றிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தாள்.

இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதுதான் சாதனாவுக்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவு ஆரம்பித்தது.

போராளிகளின் தன்னலமற்ற உதவிபுரியும்
மனப்பாங்கு, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பு, நீதி,

நேர்மை, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடுகள் போன்றனவற்றின்பால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற விருப்பு அவள் மனதில் ஏற்பட்டது.

அதன் காரணத்தினால் தனது 15 ஆவது அகவையில் 9 ஆவது வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்காகச் சென்றாள்.

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

அவளது வயதினையும் கற்றலின் முக்கியத்துவத்தினையும் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு க.பொ.த சாதாரணம் படித்து முடித்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்பியது.

சாதனாவும் இடைப்பட்ட ஒன்றரை வருட காலப்பகுதியில் தான் கொண்ட உறுதியில் தவறாது தொடர்ந்து

க.பொ.த சாதாரணம் பயின்று பொதுத்தேர்வில் தோற்றி தேர்வுகள் முடிந்த மறுநாள் மீண்டும் வந்து அமைப்பில் இணைந்துகொள்கின்றாள்.

எமது அமைப்பில் இணைந்த பிறகு அவளது க.பொ.த சாதாரண பரீட்சை தேர்வு முடிவுகள் வெளிவருகின்றது.

அந்த மிகவும் பிரபல்யமான பாடசாலையிலேயே அதிகூடிய பெறுபேறு கள் பெற்றவர்களின் பட்டியலில் அவளின் பெயரும் இடம்பெற்றது.

அடிப்படைப் பயிற்சி முகாமில் அடிப்படைப்பயிற்சிகளை மேற்கொண்டு புடம் போடப்பட்டு ஒரு உறுதியான போராளியாக உருவாக்கப்படுகின்றாள்.

எந்தக் கடின பயிற்சிகளிலும் பின்வாங்காத உறுதி, இராணுவக்கல்விக் கற்கைநெறிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கும் விதம்,

சகிப்புத்தன்மை, இரகசியம் காத்தல் போன்ற ஒவ்வொரு திறமைகளும் அடிப்படைப் பயிற்சிமுகாமில் அவதானிக்கப்பட்டு பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்படுகின்றாள்.

அங்கு மறைமுகக் கரும்புலிகள் தொடர்பான நிருவாகப்பணிகளை மேற்கொள்ளும் போராளி ஒருவருக்கு உதவியாளராக சாதனா செயற்படுகின்றாள்.

முகாமில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவளாகவும் அறிவுத்தனமான உரையாடல்களில் மட்டுமே பங்கு கொள்பவளாகவும் தனது குடும்பம்,

அன்பு, பாசப்பிணைப்புகள் பற்றி எவரிடமும் கதைக்காத தன்மை கொண்டவளாகவும் தேசியத்தலைவர் சிந்திப்பது போலவே ஒவ்வொரு

விடயத்தையும் ஆராய்ந்து நிதானமாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பவளாகவும் ஒரு மனமுதிர்ச்சியடைந்த போராளியாக அவள் காணப்பட்டாள்.

அவளிடம் ஓவியம் வரைதல், உருவப்பொம்மைகள் செய்தல் போன்ற தனித்திறமைகளும் காணப்பட்டன.

தான் ஓய்வாக இருக்கும் போது எமது மக்களின் இன்னல்கள் போராட்டங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவாள்.

உபயோகித்து முடித்த பிளாஸ்ரிக்காலான வெற்று பொன்ட்ஸ் பவுடர் (ponds powder) போத்தல்களை பிளேட்டினால் (blade) வெட்டி பெண் முதல் மாவீர வித்தான 2ம் லெப்ரினன்ட் மாலதி,

தியாகச் செம்மல்லெப்.கேணல் திலீபன், முதலாவது கரும்புலி மாவீரரான கப்டன் மில்லர் போன்றவர்களின் உருவங்களை மிக அழகாகச் செதுக்கி உருவப்பொம்மைகளாக்கி

தனது பணியிடம் முழுவதும் ஓவியங்களாலும் உருவப்பொம்மைகளாலும் அலங்கரித்து வைத்து அவர்களின் நினைவிலேயே தானும் மனதில் உறுதியேற்றியபடி வாழ்ந்திருந்தாள்.

அதைவிட சிறுகதைகள்,கவிதைகளாலும் தனது நாளாந்தக் குறிப்பேடுகளை நிரப்பி வைத்திருந்தாள்.

அங்கே பணிமுடித்து ஓய்வான நேரங்களில் சாதனா உலக புலனாய்வு அமைப்புகள் தொடர்பான நூல்களை விரும்பி வாசிக்கின்றாள்.

மேலும் அவ்வமைப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள், கேள்விகள், சந்தேகங்களை மிகவும் ஈடுபாட்டுடன் தனது பொறுப்பாளரிடம் துருவித் துருவிக் கேட்டுத் தெளிந்து கொள்கின்றாள்.

இதன் காரணத்தினால் அவளுக்கு மறைமுகக் கரும்புலிகள் அணியில் தானும் சேரவேண்டும் என்ற ஈடுபாடு வருகின்றது.

அதனைத் தனது பொறுப்பாளரிடம் தெரிவிக்கின்றாள்.

இது தொடர்பில் அவளது தேடல், அதீத ஈடுபாட்டினைக் கண்ட பொறுப்பாளரும் துறைசார் முதன்மைப் பொறுப்பாளருக்கு அதனைத் தெரிவிக்கின்றார்.

அவரும் அவளை ஒருமுறை நேரில் சந்தித்துக் கதைத்துப் பார்த்து அவளது சுயதேடல், மனவுறுதி,

விடுதலைப்போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று என்பனவற்றை இனங்கண்டு மறைமுகக் கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட அனுமதியளிக்கின்றார்.

பின்பு சாதனா மறைமுகக் கரும்புலிகள் அணியின் சிறப்புப் பயிற்சிகள், கற்கைநெறிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றாள்.

அங்கு இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பற்றி இன்னொருவருக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால் வழங்கப்படும் தனிக் கொட்டில் வாழ்வு,

உருமறைப்பிற்கான மூடிய ஆடைகள் எனச் சென்ற அந்தப் பயிற்சிக் காலம் என்பது அவளுக்குள் தன்னை மறைத்து, தன்னை ஒறுத்து,

தமிழீழ விடுதலைக்காய் வெளியே தெரியாத வெளிச்சமாகிப் போகும் வாழ்விற்கு அவளை அணியப்படுத்தியது.

மறைமுகக் கரும்புலிகள் அணியில் சாதனாவின் பயிற்சிகள் நிறைவுற்றதும் மொழிகள் (ஆங்கிலமொழி, சிங்களமொழி) தொடர்பான அறிவு பெறுவதற்கு அனுப்பப்படுகின்றாள்.

அங்கு சிங்களமொழி கற்பிப்பதற்கு ஆசிரியரை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மாதம் தாமதமாகின்றது.

அந்தக் காலத்தை வீணடிக்காது, ஒரு மாதத்திலேயே சிங்களமொழி நூல்களை படிப்பகத்திலிருந்து பெற்று சுயமாகவே கற்றுத் தேர்ச்சியடைகின்றாள்.

பின்பு சிங்களமொழி ஆசிரியரால் மொழி கற்பிக்கப்படும்போது ஏற்கனவே சிங்களமொழி நன்றாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரைப்போல அவளது மொழி தொடர்பான அதீத திறமையைக் கண்டு அவர் திகைப்படைகின்றார்.

இப்படியாக எதனையும் சுயமாகவே முயன்று கற்றுக் கொள்ளும் ஆற்றல்அவளிடம் காணப்பட்டது.

பின்பு அவளுக்குரிய இலக்கு வழங்கப்பட்டு வெளிநடவடிக்கை ஒன்றிற்காக சிங்களமொழி பேசும் ஒரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றாள்.

அங்கே அவள் மறைப்பில் இருந்தகாலத்தில் தொழினுட்பக் கல்லூரியொன்றில் கல்விகற்று சான்றிதழும் பெற்றுக் கொள்கின்றாள்.

மக்களோடு மக்களாக எதிரிக்கு சந்தேகம் வராத மாதிரி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தனது இலக்கிற்குத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றாள்.

க.பொ.த சாதாரணதர சிறந்த பெறுபேறு, தொழில்நுட்பக்கல்லூரியில் கிடைக்கப் பெற்ற தகைமைச் சான்றிதழ் என்பனவற்றைக் கொண்டு

கொழும்பில் மிகப்பிரபல்யமான மேல்தட்டுவர்க்கத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இணைந்து கல்வியைத்

தொடர்ந்துகொண்டு இலக்கினை நோக்கி அணியப்படுத்திக்கொள்ளுமாறு அவளை அவளின் பொறுப்பாளர் பணிக்கிறார். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

சாதனாவின் ஆங்கில மொழிப் புலமை, சிங்கள மொழிப் புலமை, அமைதியுடன் கூடிய அழகிய தோற்றம் போன்றவற்றினால் அவளில் எவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

அங்கே கற்கைநெறியினை மேற்கொள்ளும்போது சாதனாவுக்கு நிறைய மேல்தட்டுவர்க்க சிங்கள நட்புகள் கிடைக்கின்றன.

எவருமே போகமுடியாத முக்கிய நகரப்பகுதிகளில் உள்ள பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லும் இடங்களுக்கு தனது சிங்கள நண்பர்களுடன் சென்று தனது இலக்கிற்கான தகவல்களை மிகவும் திறமையாகச் சேகரிக்கின்றாள்.

பாதுகாப்புக் காரணங்களினால் வெளிநாடு ஒன்றிலிருந்து மிகச் சுருக்கமாகப் பரிமாறப்படும் தகவல்களின் மூலமாக மட்டும் தன்னுடைய

பொறுப்பாளருடனும் துறைசார் பொறுப்பாளருடனும் தொடர்பினைப் பேணியவாறு தனது இலக்கினை நோக்கிச் செயற்பட்டு வந்தாள்.

அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கிற்கான தகவல்கள் வாய்ப்புகள் மட்டுமல்லாது வேறு இலக்குகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் வெற்றியளித்த பல நடவடிக்கைகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் சாதனாவின் அதீத திறமையினால் அவள் சார்ந்த துறை மேலாளருக்கு அவளால் வழங்கப்பட்டன.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சாதனா வெறும் 20 அகவையினையே அடைந்திருந்தாள்.

அவள் கல்வி கற்குமிடத்தில் அவளுடன் கூடப் படிக்கும் வகுப்புத் தோழன் ஒருவன் இவளது அழகு, உதவும் மனப்பாங்கு , கற்றலில் உள்ள திறமை இவற்றைக்கண்டு சாதனாவின் மேல் காதல் வயப்படுகின்றான்.

அவள் அதனை முதிர்ச்சியுடன் கையாண்டு அவனைத் தனது இனிய
நண்பனாகவும் சகோதரனாகவும் ஏற்றுப் பழகிக்கொண்டு அவனின் உதவியாலும்,

அவனின் அறிவுக்கு எட்டாத வகையிலும், சந்தேகம்வராத வகையிலும் தனது இலக்கிற்கு தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொள்கின்றாள்.

பருவகால இளவயது, மனதை மாற்றக் கூடிய சூழல்கள், காதல் போன்றவற்றினைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாது,

சிறப்புப் பயிற்சிகளின் முடிவில் அவள் உறுதிமொழியேற்கும் போதிருந்த அதே உறுதியுடன் மிகத்தெளிவாக தனது சரியான இலக்கை நோக்கி செயற்பட்டுக்கொண்டிருந்தாள்.

சிங்களமொழி பேசும் இடங்களில் வசித்ததால் சாதனாவிடம் சிங்கள நாளிதழ்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் காணப்பட்டது.

அப்போது தான் சிங்கள மக்கள் அப்பாவிகள் இல்லை என்பதும் அவர்கள் தமிழ்மக்களுக்கெதிராக கடும் மனவெழுச்சி கொண்டிருந்ததும் கருத்தியல் ரீதியாக அவளுக்குப் புரிந்தது.

மற்றும் வன்னியில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களால் தனது மக்களும் போராளிகளும் கொல்லப்படுவதைக் கண்டு அவளது உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது.

அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வெறி அவளது உள்ளத்திலே ஆழ வேரூன்றியது. அதற்குச் சரியான வழி சிங்கள

இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் பயிற்சி முகாமிலேயே வைத்து அவர்களை அழிப்பது என்று உணர்ந்து அந்த இலக்குத் தொடர்பான

தகவல்களையும் தானே முன்னின்று சேகரித்துத் தலைமைக்கு கொடுத்து அது தொடர்பான வெற்றித் தாக்குதல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்தாள்.

அவளுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த மேல்தட்டுவர்க்க சிங்கள நண்பி ஒருவரின் விருந்துபசார விழா ஒன்றிற்கு சென்றபோது அங்கே ஒரு இராணுவ அதிகாரியை அவள் தெற்செயலாகக் காணக் கிடைத்தது.

தென்தமிழீழத்தில் படுகொலைகளை முன்னின்று நடாத்தி எமது மக்களை நேரில் நின்று கொன்றுகுவித்த சிங்கள இராணுவ அதிகாரி தான் அவன் என

தான் முன்னர் வாசித்துத் துன்பப்பட்ட தென்தமிழீழப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை மீள்நினைவூட்டி உறுதிப்படுத்திக்கொண்டாள்.

அவனைப் பற்றிய நெருக்கமான தகவல்களைத் திரட்டியதோடு அவனை அணுகக் கூடிய வாய்ப்பும் அவளுக்குத் தற்செயலாகக் கிடைத்தது.

அவளது மனதில் ஈவிரக்கமற்றுப் பொது மக்களைக் கொன்று குவித்த அந்த இராணுவ அதிகாரியை அழிக்க வேண்டும் என்ற வன்மம் உருவாகுகின்றது.

அந்த இராணுவ அதிகாரியை தானே சுட்டுக் கொல்ல தலைமையிடம் அனுமதி கோருகின்றாள்.

ஆனால் தலைமை அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கு வேறு என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது பாதிக்கப்படும் என்று விளக்கங்கூறி அதற்கான அனுமதி அவளுக்கு மறுக்கப்படுகின்றது.

ஆனால் சாதனா தனது இலக்கினைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்று உறுதியளித்து அனுமதி வாங்கி அதற்கான ஆயுதத்தினை வாங்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கின்றாள்.

அவனது நாளாந்த நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள் என்பவற்றினை அவதானித்து தெளிவான இலக்கிற்காக காத்திருக்கின்றாள்.

ஒருநாள் அந்த அதிகாரி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நாளிதழ் கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லக்கூடிய தெளிவான இலக்கு அமைகின்றது.

மிகத் திறமையாக இலக்குப் பிசகாது அந்த இராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடுகின்றாள்.

அன்று அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தது அவளுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது.

அந்தக் கொலைக்கான சூத்திரதாரியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தார்கள்.

அவர்களால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது.

அவளின் பாதுகாப்பு கருதியும் அவளைப் போன்ற திறமையுடைய அனுபவமுடைய

போராளியால் மட்டுமே இன்னும் பல போராளிகளை உருவாக்கலாம் என்பதைக் கருதியும் இந்தத் தாக்குதல் வெற்றியடைந்ததே போதும் அவளது இலக்கை வேறொரு மறைமுகக் கரும்புலியிடம் கையளிக்கலாம் என்று

கருதியும் சாதனாவைத் திரும்பி வன்னிக்கு வருமாறு தலைமையிடமிருந்து பணிப்பு வந்தது.

ஆனால் அவளோ தனது இலக்கை அடையாமல் திரும்பி வரமாட்டேன் என்று தனது இலக்கிற்காகக்

காத்திருந்தாள். கடைசியில் அவளது உறுதியின் முன்னால் தலைமையால் ஒன்றும் செய்ய முடியாமல் அவளது இலக்கை அவள் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதியளித்தது.

அவள் காத்திருந்த இலக்கும் ஓர்நாள் வந்தது. வெகுமகிழ்வுடன் அதற்குரிய ஆயத்தங்களுடன் இலக்கை நோக்கிச் செல்கின்றாள்.

ஆனால் அவளால் அதனை நெருங்க முடியவில்லை.

திரும்பியும் செல்ல முடியாத நிலையில் தன்னையே உயிராயுதமாக்கி வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவி வீரவரலாறாகின்றாள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் எவருமே செய்ய முடியாத சாதனை படைத்து வரலாறான சாதனாவின் வரலாற்றைப் படிக்கும் ஏனைய போராளிகள்

இன்னும் புடம் போடப்பட்டு உத்வேகத்துடன் உருவாகுவார்கள்.

சாதனா மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியமான புலனாய்வுப் போராளியாக என்றும் எல்லோரின் மனங்களிலும் வாழுகின்றாள்.

“உயிர் மின்னல் கீறும்

ஒரு ஓவியம்…

அது வரைகின்ற நேரம்

பெரும் காவியம்…

திரை மூடி வாழும்

ஒரு ஜீவிதம்…

வெளி தெரியாமல் ஆடும்

உயிர் நாடகம்….

புரியாத புதிராக

ஒரு தென்றல் போகும்…

புயலாகும் நேரத்தில்

இடியாக மாறும்…

அழியாத கதையாகி

வரலாறு மீளும்…

அவர் நாமம் ஒரு காலம்

தமிழீழம் பேசும்!”

யாவும் கற்பனை அல்ல…

-நிலாதமிழ். சிறுகதைகள்

தாயுமானவள்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

தாயுமானவள்

தாயுமானவள்

தாயுமானவள் “அண்ணா…அப்பாட்டைப் போப்போறேன்” “அம்மாட்டைப் போப்போறன் “… என்று உடலில் சத்திர சிகிச்சைக்காக ஏற்றப்பட்டு பின்னர் வலுவிழந்து கொண்டிருக்கும் அனஸ்தீசியா மருந்தின் தாக்கத்தினால் அரைகுறை மயக்கத்தில் புசத்திக் கொண்டிருந்தாள் அகல்.

அகலுக்கு கனவுலகில் எங்கோ வெண் பஞ்சுக் கூட்டத்தின் நடுவே தேவதூதர்களுடன் பறப்பது போலிருந்தது…

அவளுக்குத் தேவதூதர்களாக மலர்ந்த முகத்துடனும் கனிந்த பார்வுயுடனும் கண் முன்னே தென்படும் எல்லா மருத்துவப் போராளிகளும் தோன்றினார்கள்.

அருகிலே கலங்கல் உருவமாகத் தெரிந்த stethoscope ஐ கழுத்தில மாலையாக அணிந்தவாறு blood pressure ஐயும் pulse ஐயும் check பண்ணிக் கொண்டிருந்த

போராளி வைத்தியரான இனியன் ரொக்டரைப் பார்த்துத் தான் அகல் அனஸ்தீசியா மருத்தின் தாக்கத்தினால் கையைக் காலையடித்து திமிறிக் கொண்டு இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தாள்.

அவனும் சகோதர பாசத்துடனும் தாயைப் போன்ற பரிவுடனும் அவளது தலையைத் தடவியவாறு “ஓமம்மா அம்மா அப்பாட்டை போகலாம்…

பிள்ளைக்கு காயம் எல்லாம் மாறினவுடன எல்லோரையும் பார்க்கப் போகலாம்” என்று கூறிச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்…

அரைகுறை மயக்க நிலையில் அகலின் ஆழ் மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் கேள்விக் கணைகளாக இனியன் டொக்டரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன.

அவனும் அலுக்காமல் சலிக்காமல் அவளது எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தவாறு இருந்தான்.

அழகிய பூவொன்று வாடினாற் போலிருந்த அவளது முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

போர் முன்னரங்கப் பகுதி ஒன்றில் களமருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில்

பி.கே இன ஆயுத ரவை ஒன்று அவளது இடுப்பு பகுதிக்குள்ளால் நுழைந்து நெஞ்சுப் பகுதியால் வெளியேறி இருந்தது.

இதனால் அவளது சிறு குடலில் பாதிப்பு ஏற்பட்டதனால் அதனின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்தது.

இனியன் டொக்டரின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன…அவனுக்கு அகலைச் சிறுவயது முதலே தெரியும்.

அவனின் சித்தியின் பக்கத்து வீட்டில் தான் அவள் வீடு இருந்தது. அவனின் சித்தியின் மகள் மதுவின் சிறு வயதுத் தோழியும் பாடசாலை நண்பியும் தான் அவள்.

யாழ்ப்பாணம் திண்ணைவேலியில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் அவர்களது வீடு அமைந்திருந்தது.

அவன் அமைப்பில் போராளியாக இணைய முதல் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இரண்டு ஆண்டுகள் கல்விகற்ற காலத்தில்
சித்தி வீட்டில் தான் தங்கி நின்று கல்வி கற்றான்.

அப்போதுதான் அகல் அவனுக்கு அறிமுகம் ஆனாள்.அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும்.

அவனின் சித்தியின் மகளும் அவளும் ஆண்டு ஐந்து புலமைப்பரிசுப் பரீட்சையில் அதிஉயர் புள்ளிகள் பெற்று யாழ்நகரில் பிரபல்யமான பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.

அகலின் அப்பா யாழ் நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர்.

அம்மா வங்கி ஒன்றின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.

அம்மா, அப்பா, அவளைவிட இரண்டு வயது குறைந்த தம்பி என அழகிய அவளது சிறு குடும்பம் இருந்தது.

நல்ல சிவந்த நிறமும் கருந்திராட்சை போன்ற துரு துரு விழிகளும் செப்பு வாயும் சுருட்டை முடியும் கொழு கொழு கன்னங்களுமாக பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சிறுமியாக அவள் தோற்றம் அமைந்திருந்தது.

படிப்பிலும் விளையாட்டிலும் வலு கெட்டிக்காரி. மதுவுடன் விளையாட வரும்போது இனியனுடனும் அண்ணா…

அண்ணா என்று மிகவும் அன்பாக அழைத்துப் பழகுவாள்.

அவன் படிக்கும் புத்தகங்களை ஆர்வத்துடன் தானும் எடுத்து வாசித்துப் பார்த்து விட்டு அவற்றினைப்பற்றி எதுவும் நன்றாகப் புரியாத போதும் “அண்ணா…

நானும் கெட்டிக்காரியாகப் படித்து வளர்ந்ததும் ஒரு டொக்டராக வருவேன் ” என்று அழகிய அவளது கண்களில் கனவு மிதக்கக் கூறுவாள்.

மகிழ்வாகப் போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் அவர்களது குடும்பத்தில் முதலாவதாக ஒரு பேரிழப்பு ஏற்பட்டது.

கொழும்பில் அவளது மாமா பிரபல சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் குடும்பத்துடன் தான் கொழும்பில் வைத்தியர்களுக்கான குவாட்டர்சில் அகலின் அம்மம்மா, தாத்தாவும் வசித்து வந்தனர்.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மீது சிங்களக் காடையரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட இனவழிப்பில் கொழும்பில் பிரபல சத்திர சிகிச்சை நிபுணராக அவளது மாமா இருந்த போதும் தமிழர்கள் என்ற

காரணத்தினால் அவளது மாமா, மாமி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தையும் குவார்டர்சில் வைத்துக் கதறக் கதற வாளால் வெட்டப்பட்டு எரியூட்டிக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவளது அம்மம்மா, தாத்தா கொழும்பில் அவர்கள் இடத்திலிருந்து சிறிது தள்ளி வேறு ஒரு இடத்தில் வசித்து வந்த உறவினர் ஒருவரின் திருமண வீட்டிற்குச் சென்றபடியால் அந்தச் சம்பவத்தில் இருந்து தப்பியிருந்தனர்.

பின்னர் அந்த உறவினர் குடும்பத்துடன் சேர்ந்து அவளது அம்மம்மாவும், தாத்தாவும் உடுத்த உடையுடன் மாற்றுடை இல்லாது வவுனியா காட்டுப்பகுதியினூடாக நடையில் பல சிரமங்களுக்கு மத்தியில் தப்பி யாழ்ப்பாணம் வந்து அவளது குடும்பத்துடன் தங்கியிருந்தனர்.

அம்மம்மா, தாத்தாவிடமிருந்து ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை தூண்டித் துருவி அறிந்த அகலின் மனதில் அப்போதே இலங்கை அரசின் மீது ஆழமான ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்து. அம்மம்மா,

தாத்தாவிடம் அறிந்த ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை இனியவனுடனும் பகிர்ந்து “ஏன் அண்ணா சிங்களவர்கள் இப்படித் தமிழ் மக்களுக்குச் செய்யினம் ” என்று கவலையுடன் கேட்பாள்.

இனியவன் அந்தச் சிறுமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறுவான்.

பின்னர் காலவோட்ட மாற்றத்தில் காலத்தின் தேவை அறிந்து இனியவனும் தனது படிப்பை இடைநிறுத்தி விட்டு போராளியாக மாறி மருத்துவப்போராளியாக கடைமையாற்றிக் கொண்டிருந்தான்.


தமிழீழ மருத்துவப் பிரிவின் மருத்துவக் கல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்ட அணி ஒன்றிற்கான மருத்துவப் போராளிகளுக்கு வகுப்பு எடுப்பதற்காக இனியவன் ஒரு முகாமுக்குச் சென்றிருந்த போது

“ரமணன் அண்ணா” என்று இனியவனின் சொந்தப் பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரு பெண்ணின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

திருப்பிப் பார்த்தால் மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலுடன் வெள்ளை நிற சேட்டும் கறுப்புநிற ஜீன்சும் இடுப்பில் கறுப்புப் பட்டியும் அணிந்தபடி

மெல்லிய வெள்ளைநிறத் தோற்றத்துடன் அழகிய பெண் போராளி ஒருத்தி சிரித்த வண்ணம் நின்றிருந்தாள்.

இனியனுக்கு அவளைக் கண்டதும் முகம் எங்கோ கண்ட மாதிரி நினைவு வந்தது. யாரிது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது “ரமணன் அண்ணா…

என்னைத் தெரியவில்லையா…?நான் தான் மதுவின் பிரண்ட் ஜானு”…இப்ப என்ர பெயர் “அகல் ” என்றாள் சிரித்தபடி…

இனியவனுக்கு அவளைப் பார்க்க வியப்பாக இருந்தது.

கடைசியாக 12 வயதுச் சிறுமியாகக் கண்ட “ஜானுவை” இப்ப 20 வயது அழகிய இளம் பெண்போராளியான “அகல்” ஆகக் காணுகின்றான்.

அவளது தோற்றத்தில் முந்தி இருந்த குழந்தைத்தனம் மாறி இப்ப ஒரு “போராளிக்குரிய உறுதியும் வீரமும் மிடுக்கும்” காணப்பட்டது.

எனினும் கண்களில் ஏதோ ஒரு சோகம் இழையோடியிருந்ததை இனியவன் இனங்கண்டு கொண்டான்.

இனியவன் மேற்படிப்புக்காக மேற்கத்தைய நாடு ஒன்றிற்கு அமைப்பினால் அனுப்பப்பட்டு ஐந்து ஆண்டுகள் கற்கைநெறி நிறைவடைந்தவுடன்

ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்கான தகுதிச் சான்றிதழுடன் தாயகம் திரும்பி வன்னிப்பகுதியில் மக்களுக்கும் போராளிகளுக்கான முழுமையான மருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தான்.

இதனால் அவனுக்கு தனது சித்தி குடும்பம், ஜானு பற்றிய விபரங்கள் தெரியாதிருந்தது.

அகலுடன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு போகும்போது தான் சித்தி குடும்பம் பற்றிய அவளது குடும்பம் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டான் இனியவன்.

இடிமேல் இடியாக அகலின் குடும்பத்திற்கு அடுத்த இரண்டாவது இழப்பும் ஏற்பட்டிருந்தது.

இலங்கை இராணுவத்தின் விமானத்தாக்குதலின் குண்டு வீச்சில் அவளது சிறிய தம்பியையும் அவள் இழந்திருந்தாள்.

இனியவனுக்குத் தெரியும் அகல் தனது தம்பி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் என்பது.

தம்பியின் இழப்பு பற்றி அவள் கூறும் போது கண்கள் சிறிது கலங்கினாலும் போராளிக்குரிய மனவுரத்துடன் கவலையை மறைத்து அவள் காட்டிய முகமாற்றத்தை பார்த்த இனியவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளது தம்பியின் இழப்புக்குப் பின்னர் அவளது அம்மா, அப்பா, அம்மம்மா , தாத்தா எல்லோருக்கும் எல்லாமுமாக அவள் தான் இருந்திருக்கிறாள்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அவ்வளவு இழப்புகள் போர்ச்சூழலுக்கு மத்தியிலும் மனவுறுதியுடன் கற்று மிகச்சிறந்த அதி பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் உயிரியல்துறையில் எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவுடன் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஆனால் நாட்டின் போர்ச்சூழல் அவளைத் தொடர்ந்து கல்வி கற்க விடவில்லை. இராணுவத்தின் நிலப்பறிப்புகள், விமானக் குண்டு வீச்சுகள் ,

எறிகணை வீச்சுகள் இதனால் தொடர் இடப்பெயர்வுகள் எனத் தொடர்ந்த இராணுவ அட்டூழியங்களினால் காலத்தின் தேவை கருதி தன்னையும் போராளியாக இணைத்துக் கொண்டாள்.

அவள் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்றபடியினால் மருத்துப்பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டாள்.

அவளின் மிகச்சிறந்த க.பொ.த சாதாரண தரப் பெறுபேற்றின் அடிப்படையில் தமிழீழ மருத்துப் பிரிவில் போராளி மருத்துவர்களுக்கான மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்க நியமிக்கப்பட்டிருந்தாள்.

அங்கே போராளி மருத்துவ மாணவர்களுக்கான விரிவுரையாளராக இனியவன் வந்திருந்த போதே அகலை அவன் சந்தித்தான்.

அந்த மருத்துக் கல்லூரியில் அகல் தான் சிறிய வயதுப் போராளி .

ஆனாலும் அறிவில் முதிர்ந்த மற்றைய மருத்துவப் போராளிகளுக்கு நிகராக மிகவும் ஆர்வத்துடன் கற்கைநெறியைத் தொடர்ந்தாள்.

அங்கே மருத்துவப் போராளிகள் கற்கைநெறியையும் மேற்கொள்ளும் நேரத்தில் தேவைப்பட்டால் களமருத்துவப் பணிகள்,

காயப்பட்ட போராளிகளைப் பராமரித்தல், வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து காயப்பட்டு வரும் போராளிகளுக்கான சத்திரசிகிச்சைகளில் உதவியாகச் செயற்படுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுவார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மருத்தவப் போராளிகளின் பங்களிப்பானது தலையாயதும் காத்திரமானதுமாகும்.

களத்திலே காயப்பட்டு வரும் போராளிகளுக்கு அவர்களே அம்மாவாகவும் அப்பாவாகவும் அனைத்துமாகவும் இருந்து களத்திலும் சரி மருத்துவ முகாம்களிலும் சரி தங்களது பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளுவார்கள்.

தங்கள் தூக்கத்தை பசியை ஒறுத்து ஒரு தாய் தனது குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பாளோ அவ்வாறே காயப்பட்டு வரும் போராளிகளை அன்புடன்

அரவணைத்து ஆறுதல் கூறி குளிப்பாட்டி உணவூட்டி உடைமாற்றி எந்த அருவருப்போ முகச்சுளிப்போ அற்று எந்நேரமும் இன்முகத்துடன் கடமையாற்றுவார்கள்.

அவ்வாறே மருத்துவ முகாமிலே அகலும் அனைவருக்கும் தாயுமானவளாக விளங்கினாள்.

பாரிய விழுப்புண்களுக்குள்ளான போராளிகளுக்கு venflon மூலம் அடிக்கடி (injection) ஊசி மருந்து ஏற்றும் போது கை வீங்கி injection ஏற்ற முடியாதவாறு கடும் வேதனையாக இருக்கும்.

அதனால் மருத்துவப் போராளிகள் injection போட வரும்போது காயப்பட்ட போராளிகள் வலிவேதனையில் கத்தியவாறு போட மறுப்பதுண்டு.

ஆனால் அகல் injection போட வந்தால் அவர்கள் அமைதியாகப் போட விடுவார்கள்.

அவர்களுக்கு வலி தெரியாதவாறு நகைச்சுவைக் கதைகள் கூறி மென்மையாக பக்குவமாகச் சிரித்தபடியே injection ஐ ஏற்றிவிடுவாள் அவள்.

அதனால் காயப்பட்ட போராளிகள் எல்லோரும் “அகல் டொக்டர் வந்தால் தான் injection போடுவேன் ” என்று அடம் பிடிப்பதுண்டு.

அதைவிட வலிவேதனைகளால் சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் போராளிகளையும் அன்பாக கதைத்து மிரட்டி தனது குழந்தைகளுக்குத் தாய் உணவூட்டுவது போன்ற பரிவுடனும் பக்குவத்துடனும் ஊட்டி விடுவாள்.

அவர்களும் அவளது அன்பான அணுகுதலைக் கண்டு எதிர்ப்புக் காட்டாமல் உண்ணுவார்கள்.

மருத்துவப் போராளியாக இருந்த போதும் அகலின் மனதிலும் எல்லாப் போராளிகளைப் போலவும் தானும் சண்டைக் களத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவா நீண்ட காலமாகக் குடிகொண்டிருந்தது.

தனது பொறுப்பாளரிடம் அடிக்கடி “என்னை ஒரு தடவை என்றாலும் சண்டைக்கு விடுங்கோ அக்கா” என்று நச்சரிப்பாள்.

மருத்துவத்துறையில் கற்று நன்றாகத் தேர்ச்சியடைந்த போராளியான அவளைச் சண்டைக்கு விட்டு இழந்தால் அவளை மாதிரி இன்னொரு

மருத்துவப் போராளியை கற்பித்து பயிற்றுவித்து உருவாக்குவது கடினம் என்ற படியால் அவளது பொறுப்பாளர்

“இயக்கம் சொன்னதைத் தான் நீர் செய்ய வேண்டும்…

நீர் சொன்னதை இயக்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது…

இயக்கத்திற்கு எங்க எங்க யார் யாரை எப்போது எந்த நேரத்தில விடவேண்டும் எண்டு தெரியும்…

அதுவரை இயக்கம் தந்த உம்மட வேலையைப் பாரும் ” என்று அகலின் கோரிக்கையைத் தட்டிக் கழித்தவாறே வந்தார்.

ஆனால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற மாதிரி அகலின் தொடர் நச்சரிப்பால் அவளின் கோரிக்கையை ஏற்றுச் சிறிது காலம் போர் முன்னரங்குகளில் களமருத்துவப் பணியை மேற்கொள்ள அனுமதித்தார்.

அவளும் பெருமகிழ்வுடன் தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்வுடன் தனது மருத்துவ முகாம் போராளிகளிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றாள்.

காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த போராளிகளுக்கே தாயைப் போன்று பரிவு காட்டிய அவளது பிரிவு மிகவும் தாங்க முடியாதிருந்தது.

ஆனால் போராளிகள் என்றால் வலியும் பிரிவும் இழப்பும் சாதாரணம் தானே. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு கண்ணீருடன் அவளுக்கு விடை கொடுத்தார்கள்.

படையணிப் போராளிகளுடன் இணைந்து கடுமையான போர்ப் பயிற்சியினை எடுத்து நிறைவு செய்ததும் அவளும் போர் முன்னரங்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டாள்.

களத்திலேயும் அகலின் பணி காத்திரமானதாக அமைந்தது. பச்சைநிறச் சீருடையில் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை

முதுகிலும் நெஞ்சில் கோல்சரும் குறுக்கே துப்பாக்கியையும் கொழுவியபடி வோக்கிடோக்கியையும் கையில் வைத்துக் கொண்டு மிடுக்கான நடையுடன் இன்முகத்துடனும் நேர் கொண்ட பார்வையுடனும் போர் முன்னரங்கப்

பகுதிகளில் காவலரண்களுக்கு அவள் சென்று வரும் போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நேரே கண்ட மாதிரி பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், கிளைமோர் தாக்குதல்கள், கண்ணிவெடிகள்,

ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல்கள் அனைத்திற்குள்ளாலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது முன்னரங்குகளில் நிற்கும் போராளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கச் சென்று வருவாள்.

அப்படித்தான் ஓர்நாள் போர் முன்னரங்கிலே நிற்கும் ஒரு போராளிக்கு கடும் காய்ச்சல் அடிக்க மெயினில் நின்ற அவளுக்கு வோக்கி டோக்கியில் அழைப்பு வந்தது.

அகலும் அவளது உதவியாளரான இன்னொரு பெண் போராளியும் போர் முன்னரங்கப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஏற்கனவே அந்தப் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என அறிவுறுத்தல் வந்திருந்தது.

மெயினில் நின்ற பொறுப்பாளர் அகலுக்கும் அவளுக்கு உதவியாகச் சென்ற மற்றைய போராளிக்கும் பாதுகாப்பாகச் சென்று வரக் கூறி ஏதும் உதவி

தேவைப்பட்டால் உடனே வோக்கி டோக்கியில் அறிவிக்கும்படியும் உடனே தயாராக நிற்கும் முறியடிப்பு அணியைத் தாம் அனுப்புவதாகவும் சொல்லி அனுப்பினார்.

காய்ச்சல் வந்த போராளிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து விட்டு அகலும் அவளது உதவியாளரும் மெயினை நோக்கித் திருப்பிச் சென்றுகொண்டிருந்தனர்.

வரும் போது பொறுப்பாளரினால் எச்சரிக்கை செய்யப்படிருந்ததனால் இருவரும் சுற்று முற்றும் அவதானமாகப் பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தனர்.

அகலுக்கு வரும் போது இல்லாத ஏதோவொரு வித்தியாசம் தென்பட்டது. அதனைத் தனது உதவியாளராக வந்த போராளியிடம்

“கயல் எனக்கு வரும் போது இருந்ததை விட இப்போது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது என்று கூறினாள்.

அவளும் “ஓம் அக்கா எனக்கும் வித்தியாசம் தெரிகிறது என்றாள்” . ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று அகலின் உள் மனம் உணர்த்தியது.

அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து அண்ணளவாக 200m தூரத்தில் திடீரென்று ஆட்காட்டிக் குருவிகள் கீச்சிட்டவாறு சிறகடித்துப் பறந்தன.

உடனே அகலும் மற்றைய போராளியும் எச்சரிக்கையாகி அருகில் நின்ற மரத்திற்குப் பின்னால் காப்பெடுத்தவாறு நிலமையினை அவதானித்தனர்.

சிறிது தூரத்தில் இலைகுழைகளால் உருமறைப்புச் செய்த தொப்பியணிந்த ஆறேழு இராணுவத்தினரின் தலைகள் தென்பட்டன.

அகல் தனது துப்பாக்கியைத் தயார்நிலையில் வைத்தபடி கயலுக்கும் துப்பாக்கியைத் தயார்நிலையில் வைக்கும்படி கூறிவிட்டு உடனே வோக்கியில்

மெயினிலுள்ள பொறுப்பாளருக்கு அருகில் உள்ள இராணுவத்தினருக்கு கேட்காத வகையில் நிலமையைத் தெரியப்படுத்தினாள்.

அவரும் அவர்கள் நிற்கும் இடத்தை தெளிவாகக் கேட்டு விட்டு இயன்றவரை சண்டையைத் தவிர்த்து தமது உதவி முறியடிப்பு அணி வரும்வரை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.


அகலும் “சரியக்கா அப்படியே செய்கிறோம் ” என்று கூறிவிட்டுத் திரும்பும் போது அகலின் அசைவினை ஒரு ஆழ ஊடுருவும் இராணுவத்தினன் அவதானித்து விட்டு அவளை நோக்கிச் சுடத் தொடங்கி விட்டான்.

மிகவும் பாரமான மருத்துவப்பையினைத் தோளில் சுமந்தவாறு அகலும் மற்றைய போராளியான கயலும் மரங்களுக்கிடையே காப்பெடுத்தவாறு காப்புச்சூட்டை வழங்கியவண்ணம் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

இராணுவ அணியிலோ ஏழு பேர் இருந்தார்கள்.

ஆனால் இங்கு அகலும் கயலும் மட்டும் தான். ஆனால் இருவருக்கும் எடுத்த கடும் பயிற்சி கைகொடுத்தது.

இருவரும் மனவுறுதியுடனும் ஓர்மத்துடனும் பதில் தாக்குதலை வழங்கிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் உதவி முறியடிப்புத் தாக்குலணியினரின்

லீடர் அகலுடன் வோக்கியில் தொடர்பு கொண்டு தங்கள் அணி அருகில் வந்து விட்டது மனம் தளராது இருக்கும்படி தெரிவித்தார்.

மருத்துவப்பையுடன் மரத்துக்குப் பின்னே காப்பெடுத்து நின்று கொண்டிருந்த அகலினை இராணுவத்தினரின் பி.கே இன ரவை ஒன்று இடுப்பைத் துளைத்தவாறு உள்ளே புகுந்து நெஞ்சு வழியாக வெளி வந்தது..

இரத்தம் பெருக்கெடுத்தோட கீழே விழுந்தாள் அகல்.

அருகே இன்னொரு மரத்துக்குப் பின்னால் காப்பெடுத்து நின்றிருந்த கயல் இதனை அவதானித்து ஓடி வந்து அகலின் காயங்களுக்கு இரத்தம் வெளியேறாதவாறு பீல் கொம்பிரசை வைத்துக் கட்டினாள்.

இவர்கள் நின்ற இடத்தைக் குறிவைத்தபடி மூன்று இராணுவத்தினர் சுட்டவாறு முன்னேறி வந்து கொண்டிருந்தனர்.

இதனை அவதானித்த அகல் “என்னால முடியாமல் இருக்கு …

என்னைச் சுட்டுவிட்டு நீ தப்பிச் செல்” என்று கயலிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

ஆனால் கயல் அதனை ஏற்றுக் கொள்ளாது “அகல் அக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில எங்கட அணி வந்திடும்….

அதுவரை கொஞ்சம் தாக்குப் பிடியுங்கோ…நான் அவங்களுக்கு டைவர்ட் காட்டி எதிர்ப்பக்கம் ஓடுறன்…

எப்படியாவது நீங்கள் தப்பிச் செல்லுங்கோ அக்கா…

உங்கட சேவை இயக்கத்துக்கு முக்கியம் தேவை..உங்களால் நிறையப் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற முடியும்…

இயக்கம் உங்களை எவ்வளவு செலவளித்து படிப்பித்தது …அதற்கு பிரயோசனம் இருக்கோணும் ” என்று கூறியவாறு அகல் மறிக்க மறிக்க இராணுவத்தினரை நோக்கிச் சுட்டவாறு முன்னேறிச் சென்றாள்.

மூன்று இராணுவத்தினரின் கவனமும் கயலை நோக்கித் திரும்பியது. கயலின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி ஒரு இராணுவத்தினன் வீழ்ந்தான்.

மற்ற இரண்டு இராணுவத்தினரின் ரவைகளும் கயலின் உடலைத் துளைத்துச் செல்ல கயலின் உடல் அவள் நேசித்த மண்ணில் வீழ்ந்தது.

அவளின் இரத்தத்தால் அந்தமண் சிவந்தது.

இப்படித் தான் எத்தனையோ போராளிகள் தன்னலம் கருதாது நாட்டினதும் இயக்கத்தினதும் தேவையை உணர்ந்து தம்முயிரை ஈய்ந்துள்ளனர்.

பின்னர் போராளிகளின் உதவி முறியடிப்பு அணி அந்த இடத்தினை வந்தடைந்திருந்தது.

அவர்கள் இராணுவ ஆழ ஊடுருவும் அணிக்கு எதிரான தாக்குதலை நடாத்தி மிகுதி இராணுவத்தினரையும் கொன்றொழித்து அவர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி காயப்பட்ட அகலையும் பின்னகர்த்தினர்.

அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அனுப்பப்பட்ட போதுதான் அங்கு இனியன் அகலைக் கண்டான்.

மருத்துவப் போராளிகளின் சிறந்த மருத்துவ சிகிச்சையும் பராமரிப்பும் அவளின் மனவுறுதியும் சேர்ந்து அகலின் காயங்களை வெகு விரைவில் குணமடையச் செய்தது.


பின்னர் தன்னைக் காப்பாற்றிய கயலின் அகலா நினைவையும் கனவையும் நெஞ்சில் சுமந்தவாறு தனது கற்கை நெறியைத் தொடர்ந்து நிறைவு செய்து

ஒரு முழுமையான போராளி வைத்தியராகத் திரும்பவும் கழுத்தில் மாலையாக ரெதஸ்கோப் அணிந்தவாறு இன்முகத்துடன் போராளிகளுக்கும் மக்களுக்குமான தாயகத்தின் தாயுமானவளாக அகல் தனது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றாள்.

யாவும் கற்பனை அல்ல…

நிலாதமிழ்.சிறு கதைகள்

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
Posted in கவிதைகள் நிலா தமிழ்

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை
மங்குதிங்கே
மதியற்றோர் கொண்ட மடத்தாலே!

நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே
நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும்
நாடிங்கு எழுவதெந்நாள்
நாணுதிங்கே
நாணமற்றோர் கொண்ட நடப்பாலே!

நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே
நாடிய மக்கள் நலமெங்கே
நாம் நாடுகின்ற நாடொன்று
நாளாகத் தேய்வதிங்கே
நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே!

தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே
தடையை உடைத்தாலே
மனித்த பிறவி பயனறிந்த
மனிதநேய தமிழரங்கே
மடையை உடைத்தாலே
தனித்த நாடொன்று
தனியாயங்கே
அமைந்திடுமே
தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே!

நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே
சீரான உணர்வுகளை
சீர்மிகுந்த நற்செயலையிங்கே
நேரான வழிகளிலே
ஊரறிய உலகறிய
ஊர் மக்கள் உலக மக்கள்
உளமறிய செய்வதிங்கே
நேரான வழி கொண்ட
நேர் கொண்ட விழி கொண்ட
கூரறிவுடையோர் கொண்ட
கடமையதிலே!

-நிலாதமிழ். கவிதைகள்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

அறம் சிறக்க நெஞ்சில் மறம் பிறக்க
மானத் திறம் இருக்க
இரும்புத் தோள்கள் கொண்டு
தமிழர் துயர் துடைக்க
ஈழ மண் விடுதலையடைய
வியர்வை சிந்தி தங்கள்
அயர்வை மறந்து இளமைக் காலக்
கனவைத் துறந்து
கரிகாலன் படையில் இணைந்து
வெஞ்சமர் புரிந்து எதிரியை
வீழ்த்தி
தனித் தமிழீழம் பெற
வழிகாட்டியே
சந்தனப் பேழைகளில்
உறங்கும் மாவீரர்களே
மரணத்தை வென்று மீண்டும் பிறப்பீர்கள்
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது
என உணர்ந்து
வீறு கொண்டெழுந்து
ஆண்டுகொண்டிருக்கும்
சிங்களத்தின் பிடியினுள்
மாண்டு கொண்டிருந்த
எம் இனத்தினை
மீண்டு எழ உரிமை உணர்வினை தூண்டினீர்!
உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும்
எம் தமிழீழத்திற்கும் எம் தமிழ் மக்களுக்குமே என்று
ஆகுதியாகினீர்
மரணத்தை வென்று மகுடத்தை அமைத்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!

தமிழர் நிலம் காத்தீர்
தமிழ் மக்கள் உயிர் காத்தீர்
உம் உயிர் தான் மொழி,இனம்,நிலம் என வாழ்ந்தீர்
எம் இன அடிமை நிலை உடைத்தெறிந்தீர்
என்றும் எங்கள்
மனங்களில் உறவாக
உயிராக உணர்வாக இருப்பீர்
ஈழ மண்ணை நேசித்து
அதனால் மரணத்தை யாசித்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!
பலித்திடும் உங்கள் கனவு
மலர்ந்திடும் எம் தமிழீழம்!!!!

-நிலாதமிழ்.

தமிழேந்தியப்பா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

தமிழேந்தியப்பா

தமிழேந்தியப்பா

அன்பினிலே கனிந்தவரே
பண்பினிலே முதிர்ந்தவரே
பல்துறையும் கற்றவரே
செல்வச்சீர் பெற்றிருந்தும்
மலர்ப்படுக்கை வாழ்விருந்தும்
தன்நலம் கருதாமல்
இனமானம் பெரிதென்று
தனையீந்து போராடி
தமிழின விடுதலைக்கு
உரம் சேர்க்க வந்தவரே!!!

தமிழேந்தியப்பா

இனியேனும் எமக்கு
விடிவேதும் கிடைக்கும் என்று
எம் தலைவன் கைகோர்த்து
பனியென்றும் குளிரென்றும்
மழையென்றும் வெயிலென்றும் பாராமல்
தெருத்தெருவாய் ஊரூராய்
திரிந்து நிதி திரட்டி
எம்படை வளர்த்தவரே!!!

மொழியெனப்படுவது விழியெனக் கருதி
பழியெனப் பிறமொழி கலப்பது துறந்து
மொழி நலமும் இன நலமும் கொண்டு
அன்னைத் தமிழுக்கே அடி பணிந்து
தன்னைத் தமிழுக்கே தந்து தமிழ் காத்து
எம் தலைவன் மதிப்பினிலே மூத்தவராய்
அறப்போர் புரிந்து சிறப்பாந் தமிழில்
மறப்போர் புரிந்தவரே!!!

எம் ஈழ தேசத்தின் முதுகெலும்பாய்
நிதித்துறையின் ஆலமரமாய் இருந்தவரே
பிள்ளைகளாய் எங்களைப் பார்த்தவரே
உங்கள் பிரிவினிலால் எங்களை வதைத்தவரே
எம் நெஞ்சினிலும் நினைவினிலும்
தமிழேந்தி அப்பாவே நீங்கள் தான்
நெட்டுயிர்க்கின்ற எம் மூச்சினிலும் நீங்கள் தான்
உங்கள் பெயர் சொல்லி தடம் பதித்து
விழுதுகள் நாம்
தேசத்தின் பணி தொடர்வோம்!!!

-நிலாதமிழ்.

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே
எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே
வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே
நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே
பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே
தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே
ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே
இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே
உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே
என் மொழி என்னினம் என்நிலம் என வாழ்கையிலே
புன் மொழி கேட்பினும் புன்னகையுடன் சிந்தனை செய்து
எம் மொழியை எம்மினத்தை எம்நிலத்தை
சிறப்புடனே காத்திடற்கே என்றீரே

கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இனித் தமிழீழத்தையே எண்ணி வெடித்தீரே
இனித் தமிழீழத்தையே எண்ணி வெடிக்கையிலே
பனித்த கண்ணீரையும் பாங்கே மறைத்து
தனித்த எம் மக்கள் செழித்த வாழ்வுக்கே என்றீரே

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
இனித் தமிழீழ மக்கள் இழிவை
இம்மியும் பொறுக்கமாட்டார்
தனித் தமிழீழம் வாங்க
இனியும் பின்வாங்கமாட்டார்
தீக்குழம்புருக்கித் தெறிக்கும் எரிமலை போல்
கொதித்தெழுவர்
எம் தமிழீழம் எமக்கினி மலரும்
வீழாது உம்புகழ் விளைய மாளாது உம்வீரம்

கரும்புலி மறவரே கரும்புலி மறவரே
உலகமெலாம் உம் புகழ் செழிக்க
உலகிலுள்ள தமிழரெலாம் ஒன்று கூடி
பெரும் புரட்சி செய்து
யார் யாரோ அழித்த எம்மினத்தை
உம் நினைவால் திரண்டு கூடி
யாப்புறவே ஈழம் காண்போம்!.

-நிலாதமிழ்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்
எந்நாளும் விளக்கேற்றி அழுதிடுவோம்
எம் வாழ்வின் பெருமையென உணர்ந்திடுவோம்
மாவீரர் திருநாளை
தலை வணங்கி நினைத்திடுவோம்
மான மறவர்க்கு தினமும் மலர் தூவிப் போற்றிடுவோம்
தரணியெல்லாம் அவர் புகழை
தமுக்கு எடுத்து அறைந்திடுவோம்!

ஈழத்தின் விடியலுக்காய் யாகத் தீயில்
மாவீர முதல் வித்தாய்
ஆகுதியானார்
சங்கரண்ணா
உண்ணாமல் நோன்பிருந்து
உயிரீய்ந்தார் திலீபன் அண்ணா
எம்மின விடுதலைக்காய்
பெண் மாவீர விடுதலை முதற் தாயாய் தன்னுயிரை உவந்தளித்தாள்
ஈழத்துக் கொற்றவையாம் மாலதி அக்கா!

கருவேங்கை விடுதலை முதல் மாமுனிவனாக
சரித்திரம் படைத்தார்
மில்லர் அண்ணா
ஈழத்து மறத்திகளும் வீரத்தில் சளைத்தவர்கள்
அல்ல என்று
முதற் பெண் கடற் கரும்புலியாய்
கடலினிலே காவியம் படைத்தாள் அங்கயற்கண்ணி அக்கா
வானில் கூட வெடித்து உலகை வாய் திறக்க வைத்தார்கள்
ரூபனும் சித்திரனும்!

எம் நாடு எம் நிலம்
என்னுணவு என்னுணர்வு
எம்மொழியே எம்மறிவு
யாரவன் நீ எமைக் கேட்க
எம் வலிமை உணராமல்
எகத்தாளமுடன் வந்து
எள்ளி நகையாடி
எமையடிமையாக்க வந்த
எதிரிகளை
வீறுடனே வீழ்த்தியழித்து
அச்சம் தவிர்த்து அடங்க மறுத்து
வருங்காலம் உணர்வு பெற வழி வகுத்து
ஈழத்தின் இறையாண்மை
காத்தோர்கள்!

தானுயர வாழாமல்
தம் சுற்றம் வாழ்வினிக்க
தமிழ் உயர தமிழன் புகழ் வான் சிறக்க
தொல் குடித் தமிழினம் தான் பெருமை கொள்ள
உண்மையுடன் வாழ்க்கை வாழ்ந்து
ஒப்பற்ற தலைவன் வழியில் நடந்து
தரணியிலே புதுப் பரணி
படைத்தவர்கள்!

கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
நாளெல்லாம் இவர்கள் புகழை
கொட்டட்டும் செண்டை மேளம்
முழங்கட்டும் பம்பை மேளம்
நித்தம் எம் எழுத்தாணியும் மாவீரர் புகழ் பாடியே சிறக்கட்டும்
ஊனு

-நிலா தமிழ் –

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

கற்றைக் கருங்குழலும் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும்
கொண்டிருந்தும்
அற்றை ஈழத்தாய் அருந்துயர்
நீக்கவென்று
மற்றைக் கிசையாமல் மறவர் ஆனவர்கள் !

எற்றைக் கெம் நிலை ஏற்றம் உறும் என
அற்றைக் கேங்கி நின்ற எம் மக்களைக் காக்க
ஒற்றைத் தலைவனாய் நின்ற
எம் தலை வனின்
நற்றைப் பெருமை முழுமையும்
உணர்ந்து தோள் கொடுத்தவர்கள்!

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

வல்லடிமை புரிந்த சிங்களத்தின்
மல்லடிமைச் சேற்றில் புதையாமல்
இல்லறத்தைத் தான் ஒதுக்கி
இளம் பருவச் சீரொதுக்கி
வல்ல மற நெஞ்சை வளையாத இரும்பாக்கி
ஒல்லைப் பெரும் போர் புரிந்து
எல்லை காத்து நின்றவர்கள் !

வெம் பகைவர் காலில் தலை தெறித்தோட
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப்படுத்தி
காலை முதற் கொண்டு கவின் மாலைப் பொழுது வரை
காவலரணில் சற்றும் விழி
சோர்தல் இல்லாது
வியன் றமிழ் ஈழத்தைக் காவல் செய்தவர்கள்!

கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
ஊனுருக உயிருருக உள்ளொளி பெருக அவர்கள் நினைவைக் கருக்கொண்டு
அவர்கள் கனவை நிறைவேற்றுவோம்!

-நிலாதமிழ்.

அண்ணா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

அண்ணா

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

மாவீரர்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

மாவீரர்

மாவீரர்

கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
கார்த்திகையின் நாயகர்களே
உமை நினைந்துருகி
கார்த்திகைப் பூவெடுத்து
கார்த்திகை 27 இல்
உம் பாதந் தொழுதிடுவோம்!

விழித்திரையில் நீர் வழிந்திட
எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
மொழியுரை ஏதுமற்று
நடைப் பிணமாக
உமைத் தேடி
நிரை நிரையாக வந்து
விம்மி யழுதிடுவோம்!

கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
தில்லாக நின்று
எமை யழித்த படையழித்து
ஈழவளின் மானம் காத்து
கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
உமை கணமும்
நினைந்து ருகிடுவோம்!

இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
எமதினத்தின்
வருங்கால சந்ததிக்காக
ஈழத்தின் யாகத் தீயில்
ஆகுதியாகிய உமை
நிதமும்
போற்றித் துதித்திடுவோம்!

ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
காலத்தின் தேவையை
ஈடேற்றி
ஞாலத்தில் வரலாறாகிய
தீரர்களே
உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
தாருமென்று இறைந்துருகி
நெய் விளக்கேற்றிடுவோம்!

நிலாதமிழ்.17.11.2023.

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா ,நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்’ நூல் பற்றிய ஓர் ஆய்வு.


நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே!

வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும் கூறுகின்றது. நூலின் தலைப்புப் போன்றே நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட மாவீரர்களின் நினைவுகளை நூறு பக்கங்களில் அடக்கிவிட முடியாது.

இங்கு இவர் பன்னிரு மாவீரர்களின் போராட்ட வாழ்வை, வரலாற்றை கற்பனைகளோ, பசப்பு வார்த்தைகளோ, பொய்களோ இன்றி கலப்படமற்ற உண்மைகளை உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார்.

இது ஒரு ஆவணம் என்பதால் காலம், இடங்கள் நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகச் சேகரித்துப் பதிவிட்டிருக்கின்றார்.

மாவீரர்களின் வரலாற்றை நினைவில் இருத்தி தமிழ்

பல்வேறு சிரமங்களின் மத்தியில் மாவீரர்களின் வரலாற்றை நினைவில் இருத்தி, நூலுருவில் தந்திருப்பது மிகச் சிறப்பே. வீர காவியங்களை சாயம் பூசாது உண்மைத் தன்மையுடன் எழுதுவது என்பது கடினமானதே.

நிலாதமிழ் பல இடங்களில் பழமொழிகளைக் கையாண்ட விதமும், தூய தமிழ் வார்த்தைகளை பிரயோகித்த விதமும் தமிழின் மீது இவர் கொண்ட பற்றையும், அறிவையும் காட்டி நிற்கிறது. கவித்திறன் வாய்ந்தவர் என்பதை தமிழேந்தியப்பாவின் கவிதை மூலம் உணர முடிகின்றது.

இந்நூலானது மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுவது மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அமைப்பையும், அமைப்பிற்கும் மக்களுக்குமிடையே உள்ள உறவை, மக்களுடன் இரண்டறக் கலந்ததே விடுதலைப் போராட்டம் என்று உணர்த்துகின்றது.

விடுதலை அமைப்பின் கட்டமைப்பை, கட்டுக்கோப்பை, பண்பை, பாசத்தை, அறிவை ஆற்றலை அறிய முடிகின்றது.

போராட்டக் காலத்தில்

போராட்டக் காலத்தில் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட வளர்ச்சியும், வடிவங்களும் போராட்டக் களங்களின் காலப்பகுதிகளும் இந்நூலில் குறிப்பிடப்பட்டமை சிறப்பாக அமைந்திருக்கிறது.

இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021 | Weekly Epaper
இந்நூலில் போராளிகளின் வாழ்விடங்களையும், தாயகத்தின் பல

பகுதிகளையும் வர்ணனையுடன் அழகாகக் குறிப்பிட்டுள்ளமை புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் போன்றவர்களின் ஊர்,தேசம் என்ற ஏக்கத்தை வலியுடன் ஏற்பட வைத்துள்ளது.

நிலா தமிழின் எழுத்தினூடாக ஒவ்வொரு போராளியும் உள்ளத்தால் மென்மை யானவராகவே காணப்படுகின்றனர். பின்பு அடக்குமுறைகளையும் அநீதிகளையும் கண்டு கொதித்தெழுந்தே போராளிகளாகின்றனர்.

வசதியான குடும்பங்களில் பிறந்தவர், செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள், கல்வியில் சிறந்தவர்களாகவே விளங்கி, விடுதலையுணர்வினால் உந்தப்பட்டுப் போராளியாகி மாவீரர்களாகி உன்னதமடைந்தவர்களே.

கல்வியை தொடராமல் போராட்டத்தில் இணைந்ததாலும் அமைப்பானது இவர்களை அப்படியே விடாது அவரவரின் திறமை, வயதிற்கேற்ப உயர் கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்தி இவர்களை கல்விமான்களாக உருவாக்கியிருப்பதை இந்நூல் மூலம் அறிந்து நெகிழ முடிகிறது.

ஏற்ற துறைகளில் அறிவைப் பெருக்கி

அவர்களுக்கு ஏற்ற துறைகளில் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக பல வசதிகள் வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப பொறுப்புக்கள் வழங்கப்படுவதும் தெரிகின்றது.

இந்த மாவீரர்களின் அறிவுத்திறன் கண்டு மெய்சிலிர்த்து நிற்கிறேன். எல்லாத் துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சிகள், உயர்வுகள், தோல்விக்காக

துவண்டு போகாமல் வெற்றியை நோக்கியே வீறு கொண்ட பயணங்கள், குடும்பத்தைப் பிரிந்து போராட்டத்தில் இணைந்தவர்கள் விட்டுக் கொடுத்தல்,

பகிர்ந்துண்ணல், பாதுகாத்தல், சகபோராளிகளின் குடும்பங்களையும் தன் குடும்பமாக நேசிக்கும் பண்பு, அன்பையும் வீரத்தையும் பண்பையுமு் வளர்த்து அறிவுடன் கூடிய கட்டுக்கோப்பானவர்களாக மிளிர்ந்து நிற்கின்றனர்.

இந்த வாழ்வை நாம் அனுபவிக்கத் தவறி விட்டோமே என்ற ஏக்கத்தையும் தருகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட தியாகக் குடும்பங்கள், தொடர்ந்தும் போராட்டத்திற்கும், அமைப்புக்கும் ஆதரவு கொடுக்கும் உறவுகள் என்ற உயர்ந்த நிலை.

போராளியின் குண இயல்பு

இங்கு நிலா தமிழ் ஒவ்வொரு போராளியின் குண இயல்புகளையுமு், ஆற்றலையுமு் ஆளுமையையும் அழகாக அனுபவித்து எழுதியுள்ளார்.

அவர்களிடையே காணப்பட்ட நகைச்சுவை உணர்வுகளையுமு் பட்டப் பெயர்களையும் குறிப்பிடத் தவறவில்லை. பேணி, பொக்கான், அரியத்தார்

போன்ற செல்லப் பெயர்களும், “துவைக்கிற கல்லில் தவளை“ என்ற நகைச்சுவை வரிகள், “குமார் குமார் லைட்டடி“ என்ற வரிகள் போராட்டத்தின்

மத்தியிலும் போராளிகள் திடமானவர்களாக, நகைச்சுவை உணர்வுள்ளவர்களாக, பல்திறன் மிக்கவர்களாக விளங்கினார்கள் என்றுணர முடிகிறது.

இங்கு ஆண் போராளிகள் பெண் போராளிகள் மீது காட்டும் பாசமும், மதிப்பும், அக்கறையும் சேரலாதன் சேரன், விமல் போன்ற மாவீரர்களின் செயல்களைக் கூறி நிலாத்தமிழ் உணர்த்தியுள்ளார்.

போராளிகள் தமக்கென சுயநலமாக வாழாது போராளிகளை மணந்து தமக்கென குடும்பங்கள், உறவுகள், பிள்ளைகள் இருந்தும் இறுதிவரை விடுதலைக்காய் பணி செய்து வீரச்சாவடையும் வேதனையை அனுபவித்து

வேதனையுடனும் பெருமையுடனும் எழுதியிருக்கின்றார் நிலா தமிழ்

வேதனையுடனும், பெருமையுடனும் எழுதியிருக்கின்றார். ஆதி என்ற போராளி அரவம் தீண்டி இறப்பதும், மேஜர் சேரலாதன் ஈரல் புற்றுநோயினால் உயிரை விடுவதும்வேதனைக்குரியவை.

இந்நூலின் மூலம் மாவீரர்களினதும் அமைப்பினதும் ஆளுமைகளை ஆக்கங்களை வெற்றிகளை வேதனைகளை உள்வாங்க முடிகின்றது

என்றாலும், தாயகத் தாகத்தை தீர்க்க முயன்றவர்களின் முழு அர்ப்பணிப்புக்களும் விதைக்கப்பட்டிருக்கின்றனவா? முளைவிட்டு, மீண்டும்

வளர்ந்து, மரமாகி, கிளை பரப்பி, மீண்டும் வளர்ந்து மரமாகி கிளை பரப்பி வேரூன்றுமா? என்ற எண்ணமும் என்னுள்ளே எழுகின்றது.

நிலாதமிழ் நிதித்துறையைச் சார்ந்தவர் என்பதால், நிதித்துறையைச் சேர்ந்த மாவீரர்களை மட்டுமே இங்கு அதிகளவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நிதித் துறையிலேயே இவ்வளவு ஆளுமை, திறமை மிகுந்தவர்கள் இருக்கும் போது மற்றத் துறைகளில் எவ்வளவு இருக்கும்? அவற்றையும் அறிய வேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது.

இந்நூலினை ஒரு ஆவண ஏடாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களில் பன்னிருவரே இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும்

மற்றைய துறைகளிலும் இது போன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். காவியமாகி விட்ட மாவீரர்களின் நினைவுகள் களங்கப்படாது, நிலைத்து

நீங்காது நிற்கவும், எதிர்கால சந்ததியினர் புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் கள் என்ற அனைவரும்

பேணிப் பாதுகாத்து நிற்பதற்காகவும் இதுபோன்ற நூல்கள் எழுதப்பட வேண்டும். இந்நூலை அடிப்படை ஆவணமாகக் கருதித் தொடர வேண்டும்.

நிலாத்தமிழ் போராளியாக, மாவீரனின் வாழ்க்கைத் துணையாக, தலைவரையும், அமைப்பையும் நினைவில் நிறுத்தி “நினைவழியா நினைவுகள்

என் நினைவில் மாவீரர்கள்” என்ற உன்னதமாக ஆவண நூலைத் தந்து தன் வரலாற்றுக் கடமையைச் சரிவரச் செய்துள்ளார்.