அண்ணா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

அண்ணா

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.

எப்படி ஆறும் இத்துயர்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி ஆறும் இத்துயர்

எப்படி ஆறும் இத்துயர்

வீரம் விளைந்த மண் எங்கே
விதையான வேர் எங்கே
ஆழ கடலோடிய கலமெங்கே
ஆகாய வான் எங்கே

ஓயாது ஒலித்த குரல் எங்கே
ஓயாத அலை களமெங்கே
இரவெல்லாம் விழித்த
இன காவல் எங்கே

எல்லாம் இழந்து எங்கள் தேசம்
ஏனோ இப்படி கிடக்கிறது
எவர் என்ன கேட்பார்
எவர் என்ன சொல்வார்

சொல்ல மறந்த கதைகள்
சொல்லாமல் உறங்க
சொல்லி அழ முடியா
சொந்தங்கள் தவிக்க

நடை பிணமாய் உடல்
நாதியற்று நடக்கிறது
அழுவதால் பயனில்லை
ஆனாலும் வலிக்கிறது

எழுத முடியா பேனைகளும்
எடுத்துரைக்க முடியா வாய்களும்
மவுனம் ஆனதால்
மாயங்கள் நடக்கிறது …..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024

கிழவருக்கு ஒரு மடல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கிழவருக்கு ஒரு மடல்

கிழவருக்கு ஒரு மடல்

மண்டையில முடி விழுந்தும்
மாண்பு இன்னும் தெரியவில்லை
மக்களது அரசியலை
மன்றில் பேச தெரியவில்லை

நரை விழுந்த கிழவருக்கு
நாற்காலி இன்றெதுக்கு
பாப்பா பாட்டு பாடுகின்ற
பர தேசிக்கு வாழ்வெதற்கு

உயிரெழுத்தில் பெயர் வைத்து
உலவுகின்ற கிழவருக்கு
அலரிக்கா மாளிகையில்
அடி கழுவி திரிந்தாருக்கு

பேச்சு மேசைக்கு
பெரும் இடரை கொடுத்தார்க்கு
வால் பிடிக்கும் கூட்டங்களே
வையத்தில் தொல்லைகளே

இல்லாத அவர் காலம்
இருக்கின்றாய் நீ இக் காலம்
என் செய்தாய் தமிழுக்கு
ஏ தொன்று சொல் எனக்கு

மளிகை வீடு கட்டி
மல்லாக்காய் படுத்திருந்து
கொறட்டை தினம் விட்டால்
கொடை வள்ளல் நீ ஆகாய்

இக் கலாம் வாழ்கின்ற
இடர் செய்த பெரு மகனே
உன் வாழ்வே வீனாகும்
உன் இறப்பே தப்பாகும்

கோபத்தில் உனை வரைந்து
கொழுத்தி விட வரவில்லை
ஏக்கத்தில் மனம் தவிக்க
எழுதி வைத்து நீட்டுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-03-2024

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

உன் நிலை என்ன
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன் நிலை என்ன

உன் நிலை என்ன

சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக

மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா

கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ

மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023