மாவீரர்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

மாவீரர்

மாவீரர்

கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
கார்த்திகையின் நாயகர்களே
உமை நினைந்துருகி
கார்த்திகைப் பூவெடுத்து
கார்த்திகை 27 இல்
உம் பாதந் தொழுதிடுவோம்!

விழித்திரையில் நீர் வழிந்திட
எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
மொழியுரை ஏதுமற்று
நடைப் பிணமாக
உமைத் தேடி
நிரை நிரையாக வந்து
விம்மி யழுதிடுவோம்!

கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
தில்லாக நின்று
எமை யழித்த படையழித்து
ஈழவளின் மானம் காத்து
கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
உமை கணமும்
நினைந்து ருகிடுவோம்!

இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
எமதினத்தின்
வருங்கால சந்ததிக்காக
ஈழத்தின் யாகத் தீயில்
ஆகுதியாகிய உமை
நிதமும்
போற்றித் துதித்திடுவோம்!

ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
காலத்தின் தேவையை
ஈடேற்றி
ஞாலத்தில் வரலாறாகிய
தீரர்களே
உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
தாருமென்று இறைந்துருகி
நெய் விளக்கேற்றிடுவோம்!

நிலாதமிழ்.17.11.2023.