Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்

வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித்தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனித்தொழிற்சாலை தொடர்பில் 4 வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் குத்திமுறிகிறார்கள். சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்

எம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலை இயங்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம். இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பல பேர் குத்தி முறிகிறார்கள். வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை. வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

ஆகவே, தயவு செய்து யாரும் கத்தி முறியவேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும். அதைவிடுத்து சும்மா குத்திமுறிவதால் அர்த்தமில்லை.

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடே ஒழிய பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல இருகின்றோம். வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

எங்களைப் பொறுத்தவரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேணாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் குத்தி முறிய வேண்டாம். நாமும் குத்தி முறியப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியில் உள்ள விகாரை நோக்கி நகரும் பௌத்த பிக்குகள்

பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியில் உள்ள விகாரை நோக்கி நகரும் பௌத்த பிக்குகள்

பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி வணக்கத்திற்குரிய கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30.06) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியில் உள்ள விகாரை நோக்கி நகரும் பௌத்த பிக்குகள்

அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது. குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் மறைந்த பௌத்த பிக்குகளின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

பௌத்த கலைகலாசார பாரம்பரியத்துடன் குறித்த பாதயாத்திரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

விபத்தில் காயமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன், புத்தளம் – முந்தல் 107 ஆம் கட்டை பகுதியில் மரமொன்றில் மோதி இன்று(29) காலை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் வேனில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விஜயகலா மகேஸ்வரனின் உறவினர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினை அடுத்து இரு அரச உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுவினருக்காக கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரதேச செயலக உதவி முகாமையாளர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக எழுதுவினையர் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுவுடன் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற இவர்கள் உதவியதாக கூறப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (28.06) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அயந்தன் என்ற 23 வயது இளைஞரே சாவடைந்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (28.06) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை சுமார் ஒன்டரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

வவுனியா கணேசபுரத்தில் உதவித் திட்ட பதிவுகளில் மோசடி எனத் தெரிவித்து மக்கள் போராட்டம்

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை

வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா, ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (27.06) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் அலுவலகம் மக்களால் முற்றுகை

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னர் பேரணியாக சென்று வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிகுளம் கிராம சேவையாளர், சமுரத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, மேல் முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய உதவிகளை பெற்றுத்தருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் மேலும் இறுதிப்பட்டியல் வரும் வரை காத்திருக்குமாறும் ஆசிகுளம் கிராம சேவையாளர் தெரிவித்தமையினையடுத்து காலை 11.00 மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

மாகாணசபை விவகாரத்தில் ரணிலுக்கு இந்தியா கடும் அழுத்தம்

மாகாணசபை விவகாரத்தில் ரணிலுக்கு இந்தியா கடும் அழுத்தம்

யூலை மாதம் இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது விஜயத்துக்கு முன்னதாகவே மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கக் கூடும். இதனையே இந்தியா எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது.

அவரது விஜயத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல் உட்படப் பல நிபந்தனைகளுக்கு ரணில் உடன்பட வேண்டி வரும் என்று இந்தியத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவல் இந்தியத் தரப்பால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்சவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே, பஸில் ராஜபக்ச ‘மொட்டு’வின் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களை பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து இது தொடர்பில் பேசியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளது.

மாகாணசபை விவகாரத்தில் ரணிலுக்கு இந்தியா கடும் அழுத்தம்

அது தொடர்பான நிபந்தனைக்கு அவர் இந்தியா செல்லும் முன்பே உடன்பட வேண்டிவரும். இந்தியா இதையே எதிர்பார்க்கின்றது என்று பஸில் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை என்று கூறி வரும் ரணில் அரசு இதே காரணத்தை இந்தியாவிடம் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் முன் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளும் மக்களால் முடக்கப்பட்டன.

இன்று (26.06) காலை முதல் மதியம் வரை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே இவ் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி மக்களால் முடக்கம்

வவுனியா பிரதேச செயலக வளாகத்தினுள் காலை 9.30 மணியளவில் கள்ளிக்குளம், தேக்கவத்தை, நெளுக்குளம், தோணிக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் போராட்ட இடத்திற்கு சென்று கேட்டறிந்ததுடன், முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தாம் நியாயமான முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொது மக்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், வவுனியா பிரதேச செயலாளரின் தீர்வு தமக்கு திருப்தியில்லை என தெரிவித்து காலை 10.30 மணியளவில் பிரதேச செயலகம் முன்பாக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்த மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து 11.00 மணி வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அத்துடன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் வாயிலின் முன்பாக சிங்கள கிராமத்தினை சேர்ந்த மக்களும், வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பாக கூமாங்குளம் கிராமத்தினை சேர்ந்த மக்களும் காலை 10.00 மணி தொடக்கம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தரப்பினரும் காலை 11.30மணியளவில் ஏ9 வீதியில் பண்டாரவன்னியன் சதுக்கம் முன் ஒன்று கூடி வவுனியா – மன்னார் பிரதான வீதி மற்றும் ஏ9 வீதி ஆகிய இரு பிரதான வீதிகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல தடவைகள் கலந்துரையாடியும் தொடர்ந்தும் மக்கள் வீதியினை மறித்து போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து, கொக்குவெளி இராணுவ முகாம் கட்டளைத் தளபதியும் போராட்ட இடத்திற்கு வருகை தந்து வீதியை விட்டு மக்களை விலகுமாறும் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.

அதன் பின்னரும் தொடர்ந்தும் பொதுமக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன் மதியம் 12.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையினுள் போராட்டகாரர்கள் உள்நுழைந்திருந்தனர்.

மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் காரியாலயம் முன்பாக ஒன்று கூடியவர்களுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர கலந்துரையாடியதுடன், அவர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டார். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் ஆரம்ப பட்டியல் மாத்திரமே இது. இறுதிப்பட்டியல் இது வரை வெளியாகவில்லை. இது தொடர்பில் முறைப்பாடுகளை இணையம் மூலம் மேற்கொள்ள முடியும். அல்லது கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் வழங்குமாறும், கிராமத்திற்கு உத்தியோகத்தர்களின் விஜயம் தொடர்பான திகதியினை வெளியிடுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தடன், அதன் பின்னரே இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனவும் அரசாங்க அதிபர் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றிருந்தனர்.

குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதி மற்றும் வவுனியா- மன்னார் ஆகிய இரு பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் 2 மணித்தியாலயம் 30 நிமிடங்களாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையுடன் மாற்று வீதிகள் ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்

அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்

வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு தெரிவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இரு நேரம் மட்டும் உணவு உண்டு வாழும் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தோணிக்கல் ஐயா வாசியசாலை முன்பாக இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் இரு நேரம் உணவு உண்டு வாழும் குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பல பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர் மற்றும் வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.

அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன. இதனை கேட்க சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையீனமாக பதிலளிப்பதுடன் எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை.

மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பெரியவர்கள், முதியவர்கள் எனப் பாராது மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்கி தமது ஆதங்கத்தினை தெரிவித்ததுடன், தமக்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரினர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06) மாலை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ’ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும், ‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன.

இவ் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாக கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை

குறைந்த வருமானம் கொண்ட குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தை வெளிப்படை தன்மையின் முன்னெடுக்கவும், தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கவும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

சமுர்த்தி பயனாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் நிவாரண தொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பரசீலனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதியற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அரச நிவாரண வழங்கல் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அஸ்வெசும நிவாரண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விசேட ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நிவாரண திட்டத்தில் குடும்ப அடிப்படையிலான பயனாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை

தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பிரதேச சபை ஊடாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம். அத்துடன் தகுதியற்ற ஒருவரின் பெயர் நிவாரண திட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் எவரும் உரிய பிரதேச சபையில் முறைப்பாடு செய்வோம்.

குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும். அத்துடன் நீரழிவு நோயாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் தனிநபர் பயனாளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் இருவார காலப்பகுதிகளுக்குள் வெளியிடப்படும்.

அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோரப்படும். இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யாதவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணப்பிக்க முடியும்.

ஆகவே அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கபடுகிறது. ஒருதரப்பினரது கோரிக்கைக்கு அமைய செயற்திட்டத்தை இடைநிறுத்த முடியாது. குறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை ஆராய்ந்து தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை

வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை

வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

இன்று (21.06) கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகாவித்தியாலத்திற்கு மட்டுமான பிரச்சனை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாகும்.

வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை

வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.

இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் 01ம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்களால் அப்போது தெரிவித்தனர்.

எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் வாழ வைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுடன் இச்சமூகத்தை வாழவைக்கின்ற வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

இதேவேளை, சில விடயங்களின் புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இச்சமூகத்திலே விவாகரத்து அதிகரித்தல், குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது. அதேபோன்று சிறிய பணிகளோடு மட்டும் நின்று விடாது இச்சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளிற்கும் தீர்வு தேட வேண்டிய காலம் தற்போது நிலவுகிறது.

வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்லாமல் எங்களது பிரச்சனைகள் எது என உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், சிறுவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப்போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளிற்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் இன்று எங்களிடம் காணப்படுகின்றது.

அதை இங்கே கூடியிருக்கின்ற புலம்பெயர் சமூகங்களும், உள்ளூர் சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் வன்னி மன்னன் பண்டாரவன்னியன் ஆகியோரின் சிலைகளும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நூழைவாயிலினை திறந்து வைத்ததுடன், கௌரவ விருந்தினர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் த.இராசரத்தினம் ஆகியோரால் திருவள்ளுவர், பண்டாரவன்னியன் மற்றும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கலாநிதி அப்துல்கலாம் ஆகியோரின் சிலைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு

இதன்போது சாதாரண தரம், உயர்தரம் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களிற்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.

பாடசாலை அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா இல்லாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

இந்தியா இல்லாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

இந்தியா இல்லாமல் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது என வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

பத்மநாபாவின் 33 ஆவது நினைவுதினம் இன்று (19.06) வவுனியா நகர மத்தியில் உள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தீர்வொன்றினையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஏனைய பிரச்சனைகளோ தீர்க்கமுடியாத நிலையிலேயே தமிழ் மக்களின் நிலை உள்ளது.

இதற்கு அப்பால் ஒரு சில கட்சிகளை தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இந்தியாவை நாடி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா இல்லாமல் இந்த பிரச்சனையை தீர்க்கமுடியாது என சொல்லியே நாடியிருக்கின்றது.

இந்தியா இல்லாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

இந்திய பிரதமர் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகம் கூடியபோதும் முக்கியமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, 21 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை காணவேண்டும் அதற்கும் அப்பால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைக்குள்ள முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும், போரினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளான நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தத்தை பிரயோகித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளும் இணைந்து குறித்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய பிரதமருக்கு ஒரு கடிதத்தை கையெழுத்திட்டு அனுப்பவேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (18.06) காலை முதல் பிற்பகல் வரை இடம்பெற்றது.

இதன்போது, கட்சிக்கான நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த (புளொட் ) ஆர். ஆர். எனப்படும் ஆர்.ராகவன், ஊடகப் பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா எனப்படும் கருணாகரமும் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க. சுரேஸ் பிறேமச்சந்திரன், என். சிறிகாந்தா, வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டனிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா, இராண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.06) இடம்பெற்றது.

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

குறித்த கலந்துரையாடலில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என அங்கு வருகை தந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் யோசனையை முன்வைத்த போது அதனை கடுமையாக எதிர்ந்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, தலைவர் வேண்டாம் எனவும் இணைத்தலைவர்களாக தொழிற்பட வேண்டும் என வாதிட்டு தனது கருத்தை முன்வைத்தார். இது தொடர்பில் கலந்து கொண்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று இறுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டனிக் கட்சிகளின் தலைவர்கள் கட்சியின் இணைத்தலைவர்களாக செயற்படுவர் எனவும் நிறைவேற்றுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் இணைத் தலைவர்களாக செயற்படுவர் என முடிவு எட்டப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்

யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தது.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.

யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்

இந்த அதிசய நிகழ்வை அங்கிருந்த பக்தர்கள் பார்வையிட்டதுடன், தமது தொலைபேசிகளிலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

நாகபூஷணி அம்மனே வந்து காட்சி கொடுத்ததாகவும், திருவிழாவை முன்னிட்டு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும் பக்த அடியார்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது எல்லாம் புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை காணி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கூட்டங்களிலும், ஜனாதிபதி வவுனியா வந்த போதும் நாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று 400 ஏக்கர் விவசாய நிலத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.

ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

தற்போது பௌத்த பிக்குகள் எல்லா விடயங்களிலும் தலையிடுகிறார்கள். எங்களது பிரதேசத்தில் எங்களுக்கு சொந்தமான வயல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்ட பின்பு பௌத்த பிக்குகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.

மூளைக்கு மூளை புத்த கோவில்களை கட்ட முனைகிறார்கள். அதை ஒரு பிரச்சனையாக தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க முயல்கிறார்கள். இனப்பிரச்சனையில் கூட புத்த பிக்குகளின் இனத் துவேசத்தை கக்குபவர்களாக தான் இருக்கிறார்கள்.

புத்தர் அந்தப் போதனையை செய்யவில்லை. ஆனால் இங்கு ரவுடித் தனம் செய்வதெல்லாம் புத்த பிக்குகள். என்னைப் பொறுத்தவரை இந்த காணி விடயத்தில் புத்த பிக்குகள் தலையிடக் கூடாது. ஜனாதிபதி உத்ததரவிட்ட விடயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அது தான் எமது கோரிக்கை. இந்த புத்த பிக்குகளின் குரல்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்வது எங்களை மலினப்படுத்தும் என்பது தான் எனது கருத்தாகும் எனத் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேரூந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிசார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர்.அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் அவரை நீதிமன்றில் முற்ப்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.