Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID

சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம்

பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எதிர்க்கட்சித்

தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் தொலைபேசி

உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறப்பு

தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறப்பு

தற்பொழுது தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள

அனைத்து பிரதேசங்களிலும் உணவுப் பொருட்களை விற்பனை


செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் (16) காலை 8 மணி தொடக்கம் இரவு


10 மணி வரை திறந்திருக்கும் என்று COVID 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கை

காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கை

எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில்

ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்கு வாய்ப்பு உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட

செயலாளர்கள் ஃ அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், ‘நில விவகாரத்தில், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பாதுகாப்பு செயலர் வலியுறுத்தினார்.

எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொய்யான பரப்புரைகளை

பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக எமது பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளோம் என மேஜர் ஜெனரல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்.

நாரெஹென்பிட்டவில் உள்ள உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்று (ஒக்,15) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள்,

அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், ‘கம்பஹா மாவட்டத்தில் கொரோனா

வைரஸ் பரவும் நிலைமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்ததன் விளைவாக, உரிய அதிகாரிகளுடன் எங்களால்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக ஒருங்கிணைக்க முடிந்தது’ என தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகள், சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில்

காணப்பட்ட முன்னைய கொரோனா வைரஸ் மூன்று அலைகளையும் எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்குறித்து விளக்கம்

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்குறித்து விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக்

கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயரூபன் பண்டார கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக

சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இந்த தொற்று சமூகத்தின் மத்தியில் பரவில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகிரிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட

தானியங்கி பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களில் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்படவுள்ளது. இது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

நாட்டில் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் முன்னரிலும் பார்க்க

அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயரூபன் பண்டார மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே

மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே

இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் மீசாலை புதூர் சாந்தி பகுதியில்

மிதிவண்டியில் பயணித்த பெண் ஒருவரை அவ்வழியே பயணித்த அரச பேரூந்து மோதி தள்ளியது

அதில் அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார் ,உயிருக்கு ஆபத்தான

நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சாரதிகள் அலட்சிய போக்கே

இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து

போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய
மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் காலை 5.00 மணிக்கு அமுலுக்கு வந்ததாக

கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவரும்

இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலானபோதிலும்,

கட்டுநாயக்க சுதந்திர வலயத்திலுள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும்.

இவற்றின் பணியாளர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை

ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

40 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் நிதி உதவி

40 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் நிதி உதவி

நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட

40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2020.10.15) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கொவிட்-19 கொடிய தொற்றினால் முழு உலகமும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் இந்து மதத்தின்

விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும் என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் குறியீட்டு ரீதியாக 10 ஆலய பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.

இதன்போது அங்கு உரையாற்றிய பிரதமர், இவ்வாறானதொரு நெருக்கடியான காலப்பகுதியில் நாம் இந்து ஆலயங்களுக்கு தலா

50,000 ரூபாய் நிதியை பெற்றுக் கொடுத்து சமய விழுமியங்களை பாதுகாப்பதுடன், நாட்டின் நலத்திற்காக பிரார்த்திப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்.

சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் இந்து மதத்தையும், இந்து மதத்தின் விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்.

ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் நற்காரியங்களைத் தொடங்கும் இந்த நவராத்திரி காலப்பகுதியில் இந்த புண்ணிய நிகழ்வை ஆரம்பித்திருக்கின்றோம்.

கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது அனைவரும் சுகாதார

அமைச்சின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என பிரதமர் குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு

வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன்,

பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்த சாசன,மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ எதிரொலி -அனைத்து திரையரங்குகளும் 31 ஆம் திகதி வரை அடித்து பூட்டு

கொரனோ எதிரொலி -அனைத்து திரையரங்குகளும் 31 ஆம் திகதி வரை அடித்து பூட்டு

அனைத்து திரையரங்குகளும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில்

தற்காலிகமாக மூடப்படும் என்று இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் கொவிட் – 19 வைரஸ் தொற்று நிலைமையின்

காரணமாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு

அமைய 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அனைத்து

திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை தேசிய

திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஷ அவர்கள்

அறிவித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவில்லை- திடீர் அறிவிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவில்லை- திடீர் அறிவிப்பு

மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையில் கடமைபுரிந்தத தாதி உத்தியோகத்தர் ஒருவருக்கு கம்பஹா மாவட்டத்தில் வைத்து

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடமைபுரிந்த வைத்தியசாலை பிரிவு மூடப்பட்டதாக

ஊடகங்களில்வந்த செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என போதனா

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் ஊடகங்களுக்குக் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 13 ஆம் திகதி குறித்த தாதியருக்கு

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவரினால் இவ்வைத்தியசாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை கொவிட் செயலணிக் குழுமம், தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின்

நிபுணர்களுடன் ஆலோசித்தபோது நோய்த் தொற்றுக்கான ஆபத்து மதிப்பீடு சாத்தியம் மிகக்குறைவாக இருந்த போதிலும் மக்கள்

நலன்கருதி குறித் தாதிய உத்தியோகத்தர் கடமைபுரிந்த பிரிவில் பணியாற்றும், பணியாற்றச் செல்லும் அனைத்து

உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென உத்தியோக பூர்வ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மேலும் எந்தவெரு வைத்தியசாலை உத்தியோகத்தரும் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்பி அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து வைத்திய சேவைகளும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், பொதுமக்கள் சுகாதார

அமைச்சின் அறிவுறுத்தல்களைப் தொடர்ச்சியாகப் பின்பற்றி நடப்பதுடன் நோயளர்களைப் பார்வையிட வைத்தியசாலைக்கு

வருபவர்கள் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், அத்தியவசிய மருத்துவத்

தேவைகளுக்கு தமது வதிவிடத்திற்கு அண்மையிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் கேட்டுக் கொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட் டுவென்டி”..! மனோ கணேசன் எம்பி

அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட் டுவென்டி”..! மனோ கணேசன் எம்பி


நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும்

நோய் “கோவிட்- 20” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசின் உள்ளே இப்போது 20 திருத்தம் தொடர்பில் பெரும் கலகம் நடைபெறுகிறது. எதிரணியில் நாம் இதை எதிர்ப்பதை போன்று அரசுக்குள் இருந்து பலர் எதிர்குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள்.

அமைச்சர்கள் விதுர விக்கிரமநாயக்க, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

ஜனாதிபதிக்கு நெருக்கமான விதமாக எம்பி கேவிந்து குமாரதுங்க எதிர்க்கிறார். விஜயதாச ராஜபக்ச எம்பி இப்போது இரண்டாவது

முறை 20 தி தொடர்பில் ஜனாதிபதிக்கு “காதல்” கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் இல்லை. அது ஒருதலைபட்ச காதல்

போலிருக்கிறது. அரசுக்கு ஆதரவு அளித்த பல தேரர்கள், சமூக தலைவர்கள் எதிர்குரல் எழுப்புகிறார்கள். இதுதான் இன்று அரசை பிடித்துள்ள கோவிட்- 20 நோயாகும்.

இதை மறைக்கவே இன்று இந்த அரசு, வழமைபோல் இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. அதனாலேயே நண்பர் ரிசாத் பதுதீன் மீது

கைது முயற்சி நடைபெறுகிறது. அவரை கைது செய்து விட்டு, நாட்டில் “ரிசாத் கைது” என செய்தி தலைப்பை உருவாக்க அரசு

முயல்கிறது. இன்று சிங்கள மொழி தேசிய பத்திரிகைகளில், தலைப்பு செய்தி என்ன?

“ரிசாத் பதுதீனை கைது செய்ய சட்ட மாஅதிபர் அறிவுறுத்தல். ரிசாத்தை தேடி ஆறு பொலிஸ் குழுக்கள் வலை விரிப்பு”, என்பதே

இன்றைய சிங்கள பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகள். இது அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில், பிழையான கருத்தை கொண்டு

செல்கிறது. விபரம் அறியாத பாமர கிராமத்து சிங்கள மக்கள் மத்தியில், இன்று ரிசாத், உயிர்த்த ஞாயிறு தொடர்பில்,

கைதாகிறார் என்ற மாதிரியான செய்தி மயக்கத்தை அரசு பரப்புகிறது.

புத்தளம் மாவட்டத்தில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்களை, மன்னாரில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளுக்கு, இபோச பேரூந்து வண்டிகளில் கொண்டு சென்றது தொடர்பில், செலவான அரசு

பணம் தொண்ணூறு இலட்சம். இது அப்போதே மீள செலுத்தப்பட்டு விட்டது. மேலும் இது தனிப்பட்ட தேவைகளுக்காக

பயன்படுத்தப்பட்ட அரச நிதி அல்ல. இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மக்களின்

வாக்குரிமை தொடர்பில், மக்கள் பிரதிநிதிகளுக்கு கடப்பாடு இருக்கிறது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் கடப்பாடு இருக்கிறது. அவர் இது பற்றி என்ன சொல்கிறார்?

இந்த உண்மைகளை மூடி மறைத்து, அரச வளங்களை தவறாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தி, பிணை வழங்க முடியாத,

வழக்கில் ரிசாத்தை மாட்டி விட்டு, அரசு, தான் எதிர்கொள்ளும் “கோவிட்- 20” பிரச்சினைகளை மூடி மறைக்க முயல்கிறது.

2019ம் வருட ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற இடம்பெற்றதாக சொல்லப்படும் இந்த விவகாரம் தொடர்பில், சட்ட மாஅதிபர்

இதுவரை தூங்கி கொண்டு இருந்தாரா? இல்லை, அவரும், இப்போது அரசியல் செய்கிறாரா?

அப்படியானால், இதே ராஜபக்ச அரசு, 2015ம் வருட தேர்தலில், தங்கள் தேர்தல் கூட்டங்களுக்காக பயன்படுத்திய அரச

வளங்களுக்கான கட்டணங்களை மீள செலுத்தி விட்டதா? வாக்களிக்க அல்ல, தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மக்களை

அழைத்து செல்ல பயன்படுத்திய இபோச பேரூந்து கட்டணங்கள், விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்,

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்த விமானபடை நிறுவன ஹெலிகொப்டர் வாடகை

என பல கோடி ரூபாய்கள் நிலுவையில் இருக்கின்றன. ஆகவே இவர்களை எல்லாம், சட்ட மாஅதிபரால், கைது செய்ய உத்தரவு இட முடியாதா?

அரசாங்கம் என்ன செய்வது என தெரியாமல், சந்தைக்கு வந்து அன்றன்று வருமானம் தேடும் நாள்சம்பள தொழிலாளர்களை

போல், ஒவ்வொரு நாளும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கிறது.

முதல்நாள், ரிசாத்தின் சகோதரர் ரியாத்தை குற்றமற்றவர் என விடுவிக்கிறது. மறுநாள், பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மீது பழி சுமத்தி அவரை காங்கேசன்துறைக்கு இடமாற்றம்

செய்கிறது. அடுத்த நாள், ஜாலியவை மீண்டும் கொழும்புக்கு கொண்டு வருகிறது. அடுத்தநாள், அரச எம்பீகளை கொண்டு

ரியாத்தை கைது செய்யுங்கள் என கடிதம் எழுத வைக்கிறது. அப்புறம், இப்போது அரச வளங்களை தவறாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தி ரிசாத்தை கைது செய்ய முயல்கிறது.

ரிசாத், ரியாத் சகோதர்கள் மீது அரசுக்கு குற்றம் சுமத்த முடியவில்லையே. குற்றம் சுமத்திய அரசாங்கமே குற்றமற்றவர் என

விடுவிக்கிறதே. ஆகவே உண்மையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள், இவர்கள் அல்ல.

கடந்த காலங்களில், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில், தம்மிடம் முழுமையான சாட்சியங்கள், தகவல்கள் இருக்கின்றன

என்று பகிரங்கமாக பலமுறை கூக்குரல் இட்ட விமல் வீரவன்ச போன்றோரைதான் அரசு கைது செய்ய வேண்டும். பொய் சாட்சியம் கூறினார்கள் அல்லது இன்னமும் தங்களிடம் இருக்கின்ற

தகவல்களை மறைக்கின்றர்கள் என விமல் வீரவன்ச மற்றும் அன்று வரிசையாக சிஐடி தலைமையகம் சென்ற அனைவரையும் அரசு

கைது செய்து, உடன் விசாரித்து, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும்.

அதை விடுத்து, தன்னை பிடித்துள்ள இந்த “கோவிட்- 20” நோய்க்கு மருந்து தேடக்கூடாது. ஏனெனில் கோவிட்-19னை போல் இந்த நோய்க்கும் மருந்தில்லை.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் பயணித்த 06 பஸ்கள் கண்டு பிடிப்பு

கொரோனா தொற்றாளர்கள் பயணித்த 06 பஸ்கள் கண்டு பிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்பட்ட

நபர்கள் பயணித்த 06 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்

போக்குவரத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சொகுசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளை பஸ்ஸில் ஏற்றுவதற்கு

முன்னர் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை

குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மாளிகாவத்தை பகுதியில் 30 பேர் தனிமை படுத்தல்

மாளிகாவத்தை பகுதியில் 30 பேர் தனிமை படுத்தல்

மாளிகாவத்தையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28

பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே,

அந்த 30 பேரும் கல்லூரிக்குள்​ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

திவுலப்பிட்டிய கொவிட் கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக அதிகரிப்பு

திவுலப்பிட்டிய கொவிட் கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக அதிகரிப்பு

திவுலப்பிட்டிய கொவிட் கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.

திவுலப்பிட்டிய கொவிட்-19 கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 113 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஐந்து பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.

எஞ்சிய 108 பேர், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று இனங்காணப்பட்ட நோய் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 130 ஆகும்.

இதன் பிரகாரம், திவுலப்பிட்டி கொத்தணி சார்ந்த

தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது.

COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-10-15 05:40:55
5170
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

1800
சிகிச்சை பெறும் நோயாளிகள்

132
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

3357
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

13
இறப்பு எண்ணிக்கை

Posted in இலங்கை செய்திகள்

காணி எல்லைகளை ’இன அடிப்படையில் வரையறுக்க முடியாது-கிழக்கு மாகாண ஆளுநர்

காணி எல்லைகளை ’இன அடிப்படையில் வரையறுக்க முடியாது-கிழக்கு மாகாண ஆளுநர்

ஹஸ்பர் ஏ ஹலீம்_

இனத்தின் அடிப்படையில், காணி எல்லைகளை வரையறுப்பது, அரசாங்கத்தினதோ அல்லது தனதோ கொள்கையல்லவெனத்

தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சிங்களவர்களுக்கோ தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ என,

காணிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

என்று ஆளுநர் சுட்டிக்காட்டியதோடு, அரசியல் நோக்கங்களுக்காக இதுபோன்ற ஒதுக்கீடுகள் செய்யக்கூடாது என்றும், தமிழ்த் தேசிய

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், நேற்று (14) இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொடர்ந்துரைத்துள்ள அவர், காணி ஒதுக்கீடு மற்றும் கையகப்படுத்தல் என்பது, தனது சொந்த விடயமல்ல என்றும்

அவ்வாறான செயற்பாடுகளில் தான் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

கால்நடைகளின் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களை, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு எதிராகச் சட்ட

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் எம்.பிக்கள், ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள அவர், இனக் குழுக்களை இலக்காகக் கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஒருபோதும் தான் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் மாகாணத்திலுள்ள

அனைத்துக் குடிமக்களுக்கும் சமமாகச் சேவை செய்வதில், தான் உறுதியாக இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அனைத்துத் தரப்பினருடனும் ஒரு சிறப்புக் கலந்துரையாடலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், முன்னாள்

நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராஜ், மட்டக்களப்பு மேயர் டி.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்திற்கு நெல் வழங்க நடவடிக்கை- கோட்டா அதிரடி

இராணுவத்திற்கு நெல் வழங்க நடவடிக்கை- கோட்டா அதிரடி

துரு மிதுரு – என்ற புதிய நாட்டுக்கான பசுமை திட்டத்தின் கீழ் அறுவடை

செய்யப்பட்ட ஒரு தொகை நெல் இராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு கையளிப்பு.

இராணுவத்தளபதியின் தொலைநோக்கிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட துரு மிதுரு என்ற புதிய நாட்டுக்கான பசுமை

திட்டத்திற்கு அமைவாக கைவிடப்பட்டிருந்த வயல் நிலங்களில் உற்பத்தியை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை வெற்றி பெறச்

செய்வதற்கு இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பாளர் சபையினால்

இராணுவ விவசாய பண்ணை நிலங்களில் மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் கீழ் பெறப்பட்ட அறுவடை நியாயமான விலையின் கீழ் இராணுவ வீரர்களுக்கு வழங்கும் நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019 பெரும்போகம் மற்றும் 2020

சிறுபோகத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்திற்கு அருகில்

உள்ள கைவிடப்பட்ட வயல் காணிகள் மற்றும் இராணுவத்திற்கு சொந்தமான

விவசாய பண்ணை வயல் காணிகளில் இரசாயன பொருட்களை பயன்படுத்தாது

பெறப்பட்ட அறுவடை இராணுவ வீரர்களுக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலி

மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலி

பலாங்கொடை பின்னவல, வலவேவத்த பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து

வீழ்ந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வலவேவத்த அரச தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறத்து கொண்டிருந்த

பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த அவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

பரீட்சைக்கு தோற்றிய மாணவனுக்கும் கொரோனா

பரீட்சைக்கு தோற்றிய மாணவனுக்கும் கொரோனா

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்த, திவுலப்பிட்டிய

பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்

பரிசோதனையின்போதே, தொற்று இருப்பது

உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, திவுலப்பட்டிய பொதுச் சுகாதாரப் பரி​சோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

இரத்மலான வைத்திய மத்திய நிலையமொன்றுக்கு பூட்டு

இரத்மலான வைத்திய மத்திய நிலையமொன்றுக்கு பூட்டு

இரத்மலான- கிரிவத்துடுவ பிரதேச வைத்திய மத்திய நிலையமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், அங்கு

கடமையாற்றிய வைத்தியர் உள்ளிட்ட மூவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி ​அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர், இந்த வைத்திய மத்திய

நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுள்ளதாலேயே குறித்த வைத்திய மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் ​தொழில்புரியும் நண்பரொருவரின் திருமணத்தில்

கலந்துகொண்டதுடன், 12ஆம் திகதி இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ரிஷாத் பதியுதீனை 6 பொலிஸ் குழுக்கள் தேடி வேட்டை

ரிஷாத் பதியுதீனை 6 பொலிஸ் குழுக்கள் தேடி வேட்டை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ் (சீ.​ஐ.டி)

குழுக்கள் விரைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ்

(சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் – மேலும் 11 பேர் கைது

ஊரடங்கு சட்டம் – மேலும் 11 பேர் கைது

சில இடங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்

ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில்

கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் இதுவரையில் கைது செய்யப்பட்டோர்

எண்ணிக்கை 135 ஆகும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகன தெரிவித்தார்