கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

Spread the love

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 600 சீனிக் கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சுமார் 12,000 மெற்றிக் தொன் சீனியைக் கொண்டுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வணிக வங்கிகள் வழங்கிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டனர்.

இரண்டு மாதங்களாக 433 சீனிக் கொள்கலன்கள் வெளிவிடப்படாததால், இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ சீனிக்கு தாமதக் கட்டணமாக ரூ. 20 முதல் 25 வரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மற்றொரு சீனி இறக்குமதியாளரால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு தொகுதி கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இறக்குமதியாளரால் மியான்மாருக்கு அனுப்பப்பட்ட 130 சீனி கொள்கலன்கள் அந்த நாட்டின் பிரச்சனை காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இந்த 130 கொள்கலன்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்காததால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீனி இருப்பு பற்றி விசாரித்த போது, லங்கா சதொச குறிப்பிட்ட சீனி இருப்பைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளாக ​​துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், லங்கா சதொச நிறுவனத்திற்கு சீனியை வாங்கும் போது தாமதமான கட்டணத்திலிருந்து இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் சதொச மூலம் சலுகை விலையில் சீனி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *