Tag: இலங்கை
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, கட்டுவான் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஒருவரை கைது செய்ததுடன்,
ஆயிரம் லீட்டர் கோடா மற்றும் 20 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய
தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை பொலிஸாருடன் இணைந்து நேற்று (22) முற்றுகையிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபரை, தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மீட்கப்பட்ட பொருள்களை சான்று
பொருள்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும், நான்கு பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு மிகவும் அவசியமாக இருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெற்ற விவசாயிகளுக்கு
நட்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கமைய அவர்களுகான நட்டஈட்டுத் தொகையை கட்டாயமாக வழங்க
அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
யாழில் சிசுக்களை வைத்து கூலிக்கு பிச்சை எடுத்த கும்பல் கைது
யாழ்., சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுகின்றார் என்று அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைதுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் டொலர் பற்றாக்குறையால் மூன்று நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இந்த கப்பல்களிலுள்ள எரிபொருளை உடனடி ஒழுங்கு முறையின் கீழ் அரசாங்கம் இறக்குமதி செய்த போதிலும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள்
கிடைக்காததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு டீசல் கப்பலும் பெற்றோல் கப்பலொன்றும் தொடர்ந்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டால், எரிபொருளுக்கான நிறுத்தக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது பத்து நாட்களுக்கு மாத்திரமே பெற்றோலும் 7 நாட்களுக்கும் மட்டுமே டீசலும் கையிருப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக்
கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள்.
இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.”
- இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி. பற்றி பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு படுகொலைகள், அட்டூழியங்கள் புரிந்தார் என்பதும் தெரியும்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி. குண்டர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா? என்பதற்குப்
பதில் கூறவேண்டும். இறுதிப் போரின்போது பிரபாகரனின் சடலம் எனக் காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள். இலங்கை முழுவதும் பவனியாகக் கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த விடயங்கள்
தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்துக்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது?
அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பிரபாகரன் ஒரு போர் வீரன்; கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதைக் கூறுகின்றார். படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர், பிரபாகரனின் கழுத்தில்
இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். ஆயுதங்கள் இல்லாமல்தான் எதிரியிடம் மண்டியிடுவதையே சரணடைதல் என்பார்கள்.
அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோம் என ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம்? யார் புதைத்தது? என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலைக் கரைத்துவிட்டோம், எறிந்துவிட்டோம் என்றார்கள்.
பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காகக் கருணாவையும், தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் இறப்பு விசாரணை நடைபெறவில்லை?
ஹெலி மூலம் கருணாவைக் கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட மருத்துவ அதிகாரியைக் கூட்டிச்சென்று இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை? இந்தியாவுக்கு ஒரு நீதிமன்றச் சான்றிதழை வழங்கியுள்ளீர்கள்.
அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால் ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை?
பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார், சடலத்தை எடுத்தோம், புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார்” – என்றார்
சிறுவனை கற்பழித்த பிக்கு கைது
சிறுவனை கற்பழித்த பிக்கு கைது
வட்டவளை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வந்த பிக்கு ஒருவர் 13 வயது
சிறுவன் ஒருவரை பாலியல் உறவு புரிந்துள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் பிக்கு கைது செய்ய பட்டுள்ளார்
ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் பணி புரிந்து வந்த இலங்கையை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்
,சம்பவ தினம் அன்று இரண்டு சிங்களவர்களும் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த
பொழுது வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்தது பாத சாரிகள் மீது மோதியது
இதன் போது சம்பவ இடத்தில இருவரும் பலியாகினர் ,குறித்த விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில்
உக்கிரேனில் தங்கியுள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அறிவித்துள்ளது
மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வர
அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறு வேண்ட பட்டுள்ளது
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் நேற்று (20) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொரட்டுவை கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளன.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை, சட்டத்தின் முன் நிறுத்த
நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின்
விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானச் செயல்பாடுகள் (ட்ரோன்) தண்டனைக்குறிய குற்றமாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்குள் நடத்தப்படும் அனைத்து ஆளில்லா விமான
நடவடிக்கைகளுக்கும் (ட்ரோன்) சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில்
ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட
ஓட்டோவும் இரத்தோட்டைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரத்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி
தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி
வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும்,
அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த மாநாட்டில் வைத்து ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் அனைவரும்
வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில்
யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.
அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்கமாட்டேன். வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்.
எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த மாவட்டத்தில் நல்லிணக்கம்,
சமாதான நிலைமையை முன்னெடுத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்” – என்றார்
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில்
ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை அறிவிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று
(20)ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பதாக யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
நேற்றுமாலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,
கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது
30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர்
விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பொலிசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்
மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்
கள்ள கணவருடன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் பெற்றோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் ஒன்று பாணமுரே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த கள்ள கணவர் என கூறப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவி தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர், பின்னவல பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்று (19) காலை வீட்டுக்கு வந்த கணவரே இவ்வாறு தூ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் எரிந்து அழிந்த 7 கடைகள்
தீயில் எரிந்து அழிந்த 7 கடைகள்
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட உடபுஸ்ஸலாவை நகரில் நேற்று (19) மாலை ஏழு கடைகள் தீபிடித்து முற்றாக எரிந்துள்ளதாக.உடபுஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பல வருடகாலமாக இந்த கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்ததாகவும், இவ் இடம் தொடர்பாக வழக்குகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், வலப்பனை பிரதேச சபைக்கு சொந்தமான இடத்தில், இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், குறித்த இடத்தை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என
அறிவித்தல் விடுக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றி முட்கம்பி வேலிகளையும் பிரதேச சபை அமைத்திருந்தது.
எனினும் இதனையும் மீறி, தற்காலிக கடைகளை அமைத்து தமது நாளாந்த வர்த்தகத்தை குறித்த கடைகளின் உரிமையாளர்கள் முன்னெடுத்து வந்ததுடன்,
முறையான மின்சார இணைப்பையும் இவர்கள் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த இக்கடைகள் நேற்று (19) மாலை திடீரென தீப்பற்றி எறிந்து முற்றாக எறிந்து நாசமாகியுள்ளதுடன், பாரிய
நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை உடபுஸ்ஸலாவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வாய்ச் சண்டை முற்றல் – எதிராளி அடித்து கொலை
வாய்ச் சண்டை முற்றல் – எதிராளி அடித்து கொலை
.காங்கேயனோடையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் காங்கேயனோடை வாவிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் காங்கேயனோடை 13யைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43வயதுடைய உதுமாலெவ்வை முகம்மட் இல்பான் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவம் இடம் பெற்ற இடத்தினை பார்வையிட்டார்.
இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியாசலைக்கு சென்று அங்கு உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனைகளை மேற் கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரான காங்கேயனோடையைச் சேர்ந்த கையூம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் எனவும் அன்மையிலேயே இவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
மாத்தளை- கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவைப் பார்க்கச் சென்ற சிறுவனே இதுவரை வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவன் இறுதியாக சாம்பல் நிற டீசேர்ட்டும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மாத்தளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ள சிறுவனின் பெற்றோர், சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலிருக்கும் பொலிஸ்
நிலையத்துக்கோ அல்லது 070-7778940 என்ற அலைபேசிக்கோ அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நோய் பரவல் -சிவப்பு வலயமாக மாறிய மட்டக்களப்பு
.நோய் பரவல் – சிவப்பு வலயமாக மாறிய மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருப்பதாகவும், 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும் அத்தோடு அதில் நான்கு போர் மரணத்தை தழுவியிருந்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த டெங்கு நோயின் பரம்பலில்
முக்கிய விடயமாக காணப்படுவது டெங்கு நுளம்பை அழித்தல் என்னும் விடையத்தில் நாங்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதெனவும், அதிலும் குறிப்பாக
மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டொங்கு நோயாளர்களை இனங்கண்டிருப்பதால், முக்கியமாக நகரப்பகுதிகளில் டெங்கு நுளம்பை அழிக்கும் செயற்பாட்டை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாக இருப்பதாக
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் இதன்போது தெரிவித்துள்ளார்.







