Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அழுகுரல் கேட்கிறதா

அழுகுரல் கேட்கிறதா

அந்தி பொழுதில் நந்தி கடலில்
அழுகுரல் கேட்கிறதா?
அவல சாவின் ஆவிகளின்
ஆத்மா துடிக்கிறதா

ஓடிவந்தவர் கூடி நின்றவர்
ஒரு நொடி வீழ்ந்தனரே
ஓடி வந்த கந்தக கூண்டில்
ஓர் நூறாய் கிழிந்தனரே

பகைவர் விட்டு பாவிகள் கொன்றீர்
இது தான் படையெடுப்போ ..?
பகலும் இரவும் மாறி வரும்
பகைமை உணர்வீரா

ஒரு நொடி எங்கள் தமிழர் விழித்தல்
ஓடிடும் பகைமைகளே
ஒரு நாள் எங்கள் அவலம் தரிப்பீர்
ஓடி அழுவீரே

விதைத்தவன் வினையை
விரைவில் அறுப்பான்
விளைச்சல் இது தானே – இந்த
விபரம் தெரிவானே

எங்கள் மண்ணிலே எம்மை அழித்தவன்
எப்படி வாழ்ந்திடுவான்..?
ஏதடா மனிதா நீயெல்லாம் தமிழனா
எப்போ வெடித்திடுவாய்..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 10-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்