
பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன் பருத்தித்துறையில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த வாரமே காய்ச்சல் தொடர்பாக சுகாதார பிரிவினரால் மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,
மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.
சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.
இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.
மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.