இளைஞரில்லா இலங்கை

இளைஞரில்லா இலங்கை
Spread the love

இளைஞரில்லா இலங்கை

யுத்தமொன்று வந்ததனால்
மொத்த உறவும் பறந்தன.
முத்தமிட்ட அன்னை மண்ணைச்
சத்த மின்றிப் பிரிந்தன.

சொத்துப்பத்து ஈட்டவென்றும்
சொந்த நாட்டைத் துறந்தனர்.
நித்திரையை மறந்தங்கே
நித்தம் உழைப்பில் இறந்தனர்.

புத்திஜீவி கல்விமான்கள்
பிற நாடுதேடி ஓடினம்.
பத்தியெரியும் வயிற்றுடனே
பலர் குத்தியிங்கு முறியினம்.

கலைஞர் இளைஞர் கன்னிகளும்
கனடாக் கனவில் மிதக்கினம்.
அலைகள்போல அள்ளுப்பட்டு
அங்கே போக நினைக்கினம்.

இக்கரைக்கு அக்கரையென்று
இருந்ததெல்லாம் பறக்குதாம்.
சக்கரையில்லாப் பொங்கல்போல
சேர்ந்தபிறகு வெறுக்குதாம்.

செத்த வீட்டில் பங்குகொள்ளச்
சொந்தங்களும் இருக்காது.
சுத்தியுள்ள சாமி தூக்கப்
பக்தர்களும் கிடைக்காது.

பெத்தவர்க்குக் கொள்ளிவைக்கப்
பிள்ளை ஒன்றும் இருக்காது.
புத்தருக்கு விகாரைகட்ட – இனி
இங்கு போராட்டமும் நடக்காது.

-பிறேமா(எழில்)-