திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர ,அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றார்.
உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தார்.
மேலும், எழுந்துள்ள நிலைமையால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்






