நாளைய சமூகத்தில் எழுகின்ற தலைமைத்துவம் சார்ந்த பிரச்சனைகளை கச்சிதமாக தீர்ப்பதற்கு பாடசாலைகளே உதவுகின்றன: வவுனியா அரச அதிபர்
மாணவர்கள் நளைய சமூகத்தில் தம்மை இணைத்து அதன் பங்காளிகளாக மாறுகின்றார்கள். அப்போது அங்கு எழுகின்ற தலைமைத்துவம் சார்ந்த பிரச்சனைகளை
கச்சிதமாக தீர்ப்பதற்கு பாடசாலைகளே உதவுகின்றன என வவுனியா மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் அதன் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் நடைபெற்ற
மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இந்த மாவட்டத்தின் அரச அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது பொது கூட்டம் ஒன்றில் அதுவும் மாணவர்களுடன் சில மணித்தியாலங்களை கழிப்பதை
இட்டு மகிழ்சியடைகிறேன். மாணவர்களாகிய நீங்கள் இந்தப் பிரதேசத்தில் சிறந்த கல்விமான்களாக வரவேண்டும் என்பதே உங்களது அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களின்
எதிர்பார்ப்பாகும். அத்துடன் சிறந்த தேக ஆரோக்கியத்துடனும் நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு இவ்வாறான விளையாட்டுக்கள் அவசியம் என்பதையும்
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே நீங்கள் வினைத்திறன் மிக்க, நல்ல சிந்தனையுடைய, நல்ல ஆரோக்கியமான மாணவர்களாக வரவேண்டும்.
பொறுமை என்பது எல்லோருக்கும் அத்தியாவசியமான விடயம். விளையாட்டின் போது இரண்டு விடயங்களை பின்பற்றுகிறீர்கள். விளையாட்டின் போது வெற்றி, தோல்வி
வருகின்றது. வெற்றி வந்த போது அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வதுடன் அதனை மட்டுப்படுத்தக் கூடிய மனப்பாங்கை ஏற்றுக் கொள்ளவும், தோல்வி ஏற்படுகின்ற
போது அதனை சகித்துக் கொள்ளக் கூடிய மனப்பான்மையையும் கற்றுத் தருகின்றது. ஆகவே எதிர்கால வாழ்வில் எழுகின்ற பல்pவேறு பிரச்சனைகளை
தீர்த்துக் கொண்டு உங்களை சுதாகரித்து கொண்டு உங்களது வாழ்வை வளம்படுத்தக் கூடிய நிலையை இந்த
பொறுமை ஏற்படுத்துகிறது. விளையாட்டின் மூலம் குருதிச் சுற்றோட்டம் சிறப்பாக இருப்பதால் சிந்தனை வளர்ச்சி ஏற்படுகிறது.
பாடசாலை என்பது தனியே பாடப்புத்தகங்களுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளை மாத்திரம் மாணவர்களுக்கு வழங்கவில்லை. அவர்களுக்கு தேவையான புறவிருத்திச்
செயற்பாடுகளையும் வழங்குகின்றது. அதன் மூலமே இந்த மாணவர்கள் நளைய சமூகத்தில் தம்மை இணைத்து அதன் பங்காளிகளாக மாறுகின்றார்கள். அப்போது அங்கு
எழுகின்ற தலைமைத்துவம் சார்ந்த பிரச்சனைகளை கச்சிதமாக தீர்ப்பதற்கு பாடசாலைகளே உதவுகின்றன எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல்.பி.சந்திரசேகர, வவுனியா தெற்கு வலயப் பிரதிநிதி ஏ.எம்.சுபைர், அயல் பாடசாலை
அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,
வளர்பிறை இளைஞர் கழகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








