கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

Spread the love

கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகுமென்றும், அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

பெரும்பாலானவை சுதந்திரமான சுயநிர்வாக நிறுவனங்களாகவும் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாமைக்குக் காரணமில்லை என்றும் குறிப்பிட்டதோடு, இதைச் சாத்தியமாக்குவதற்கான சட்டக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்றால், அதைச் செய்ய முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள், பட்டங்களை விற்கும் கல்விக் கடைகள் என்ற பழைய ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை என்பதோடு, பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

“காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல் மேம்பாட்டு முகாமைத்துவம், தொழில்நுட்ப விஞ்ஞானம், சமூகவியல், இணை சுகாதார விஞ்ஞானம் மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1,408 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இவர்களில் கலாநிதிப் பட்டதாரி ஒருவரும் பட்டப் பின்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா ஆகியோரும் அடங்குவர். இதன்போது, 1,180 பேர் தமது முதல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த இராணுவப் படை அதிகாரியாக கெடட் அதிகாரி எஸ்.எச்.ரொத்ரிகோ, சிறந்த கடற்படை அதிகாரியாக லெப்டினன் எஸ்.டி.கருணாசேன, சிறந்த விமானப்படை அதிகாரியாக பறக்கும் அதிகாரி எஸ்.கே.எஸ்.ருக்ஷான், அதிசூர அதிகாரியாக லெப்டினன் எல்.டி.ஐ.லியனாரச்சி ஆகியோர், ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம், 1981இல் நிறுவப்பட்டது. 2009ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அது முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டில் சிவில் மாணவர்களுக்கும் பட்டக் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தற்போது, முப்படை மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலாநிதிப் பட்டம் மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பாடநெறிகளை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமாக பொதுநலவாய அமைப்பின் பல்கலைக்கழக சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply