இலங்கையில் மருந்து தட்டுப்பாடு

Spread the love

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு

இலங்கையில் சுகாதாரத்துறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்கு பாரிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

இவ்வாறான சூழ்நிலையில சுகாதார அமைச்சு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை என்று சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…

இந்த நேரத்தில், சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களையும் ,விசேட வைத்திய நிபுணர்களையும் இந்த நிர்வாகத் துறையில் இணைக்க முடியும்.

பங்குதாரர்கள் அனைவரும் இதை தமது பொறுப்பாகக் கருதி, கொவிட் காலத்தில் இருந்தே ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றனர். இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.

மருந்து வகைப்படுத்தலில் 14 வகையான மருந்துகள் பிரத்தியேகமாக இனங்காணப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமான மருந்து வகைகள்.

இந்த சந்தர்ப்பத்தில் அவ்வகையான மருந்து வகைகள் நாட்டில் இல்லை என்றும் அவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பேசப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், அந்த 14 வகையான மருந்துகளுக்கும் இப்போதைக்கு தட்டுப்பாடு இல்லை என்று தன்னால் தெளிவாகக் கூற முடியும். இதில் ஒரு வகையான மருந்துக்கு மாத்திரம் தட்டுப்பாடு காணப்பட்டது.

அந்த தட்டுப்பாடும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த மருந்துகளில் 25,000 நாளை நாட்டுக்கு கிடைக்க உள்ளன.

அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் 100,000 மருந்து சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

எனவே, அந்த 14 வகையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறுவது தவறானது. 664 அத்தியாவசிய மருந்துகள் காணப்படுகின்றன.

அவற்றில் 51 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்ததுடன். அவை நேற்றைய தினம் 49 ஆக குறைந்துள்ளது.

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு

பிரச்சினைகள் இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படும். 49 அல்லது 50 வகையான மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் எங்களிடம் இருக்கின்றன.

வைத்தியசாலைக்கு வரும் கடுமையான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படவில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விசேட வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பல பங்குதாரர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டிய அமைச்சர், இதன்போது மருந்துகளை கொள்வனவு செய்வதில் அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

அத்துடன், சுகாதாரத்துறையில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு தாம் தயாரில்லை.

இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உலகெங்கிலும் உள்ள பல நண்பர்கள் இந்த நேரத்தில் பெருமளவில் நன்கொடைகளை வழங்க இணங்கியுள்ளனர்.

நாங்கள் ஆண்டு தோறும் சுமார் 260 மில்லியன் டொலர்களை மருந்து மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கின்றோம்.

இதுவரை பல்வேறு துறைகளில் இருந்தும் 439 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றுள்ளோம். நேற்று அவுஸ்திரேலிய அரசாங்கம் சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவுக்காக மேலும் 50 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது.

அதன் பின்னர் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு கண்டிப்பாக அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் இருந்து மருந்து கொண்டு வர முடியாது என்ற கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அந்த சவாலுக்கு முகம்கொடுக்க நமது நண்பர்கள் உதவியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு 3 மாதங்கள் ஆகும். ஆனால், அது தற்போது 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளன.

இந்த 6 வாரங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் வரைதான் இந்தக் கஷ்டங்கள் இருக்கும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் விசேட வைத்தியர் தொடக்கம் சிற்றூழியர் வரை போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் விசேட வைத்தியர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

தற்போது போக்குவரத்து அமைப்பு சாதகமான நிலையில் உள்ளதாகவும் இந்த வாரத்தில் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதாரத் துறையின் விசேட வைத்திய நிபுணர்கள் தொடக்கம் தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதற்கு
வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

    Leave a Reply