செல்லப்பா உனை மறவோம் ..!
முரசுமோட்டை ஒன்றியத்தின்
முதலவாது மன்றத்தில்
வந்தமர்ந்த மூத்தவனே -எங்கள் …
மனத் தடத்தில் நீ இருப்பாய் …
சந்தியில வந்து நின்று
சாக்கடையை திறந்தவரை
கண்டு பொங்கி எழுந்தவனே
கள பாடல் தந்தவனே …
மிஞ்சி தமிழ் வையம் எழ
கொஞ்சு தமிழ் நீ குழைத்து
ஏந்த கருவி செய்தவனே
எங்கள் ஆசான் ஆனவனே …
கானகத்தில் அவன் இருந்து
கட்டளைகள் தந்து விட
பாட்டாலே உயிர் தந்த
பா இசை நீ தானே ….
வங்க கடல் இடையினில
வந்து வழி தடுத்துன்னை
சிறை இருத்தி வைக்கையிலும் -நீ
சிறகுடைந்து போகலையே …
மூத்தவனே நீ வந்து
முன் அமர்ந்து மகிழ்வித்தாய்
நெஞ்ச மெல்லாம் மலர்கிறது
உன் நினைவினிலே சுத்துறது …
கண் முன்னே வந்தமர்ந்து
காட்சி தந்த பண்ணவரே
முரசுமோட்டை மாநகரம் -உங்கள்
மூவரையும் மறவாது
தேகம் உடல் வேகையிலும்
தேம்பி விழி கதறையிலும்
கரம் தந்து வலி துடைத்த
காணக் குயில் நீ தானே …
ஓடி வந்து இங்கமர்ந்து
உன்னை பார்க்க வந்ததிந்த
கொஞ்சு தமிழ் பார்த்தாயா
கொள்ளை பிரியம் கண்டாயா …?
வாடாத மலரவனே
வைய தமிழ் மறவானே
எம் நெஞ்சில் நீ இருப்பாய்
என்றும் உன்னை மறவோமே …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/04/2017