செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு ,யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 39ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய அகழ்வில் அருகருகே
காணப்பட்ட இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் உள்ளிட்ட 13 எலும்பு கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
அத்துடன், சில எலும்பு கூடுகள் குவியல் நிலையில் காணப்பட்டதுடன், சில எலும்பு கூடுகள் மண்டையோடுகள் இல்லாத நிலையிலும் அடையாளம் வெளிப்பட்டுள்ளன.
குவியல் நிலையில் காணப்பட்ட எலும்பு கூடுகளுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதால், மேலதிக ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பான
முழுமையான தகவல்களை வெளியிட முடியும் என சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஏற்கனவே வெளிப்பட்ட எலும்பு கூடுகளில் 3 சிறுவர்களுக்குரியவை உட்பட 4 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 93 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 467 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 444 எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







