கிளிநொச்சியில் கூட்டம் கூடிய டக்கிளஸ்

Spread the love

கிளிநொச்சியில் கூட்டம் கூடிய டக்கிளஸ்

கிளிநொச்சி மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் கௌரவ. டக்ளஸ்

தேவானந்தா அமைச்சர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினை மிகவும்

வினைத்திறனுடையதாக நடாத்துவதற்கான முன்னாயத்த குழு கூட்டம் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தினை ஆரம்பித்து வைத்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினை மிகவும் வினைத்திறனுடையதாக

நடாத்துவதற்காக இக்கூட்டத்தினை கௌரவ அமைச்சர் ஒழுங்குபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும்

மாவட்டத்தினுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் அமைச்சருமாகிய கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறிப்பிடுகையில் இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு

கூட்டத்திற்குரிய முன்னாயத்த குழு கூட்டமாக அமைவதாகவும் முன்னதாக தீர்க்கக் கூடிய பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இக்கூட்டம் நடாத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார். மக்களுடைய கோரிக்கைகள் தன்னிடம் வரும் போது அதற்காக

அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், பங்களிப்பினை அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் பல விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

• கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவினை கரைச்சி மற்றும் அக்கராயன் என இரு செயலக பிரிவுகளாக அமைப்பது தொடர்பான விடயங்கள்.

• கிளிநொச்சி மாவட்டத்தினை இரு வலயக்கல்வி அலுவலகங்களாக உருவாக்குவதற்கான விடயங்கள்.

• கரைச்சிப் பிரதேச சபையின் ஒரு பகுதியினை நகர சபையாக உருவாக்குதலும் கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேசங்களை தனித்தனி பிரதேச சபைகளாக உருவாக்குவதற்கான விடயங்கள்.

• அரச காணிகளில் குடியிருப்பவர்களிற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான விடயங்கள். மற்றும் காணி சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

• கண்டாவளை பிரதேசத்தில் மத்திய வகுப்புத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஆரம்ப உரிமையாளர்கள் அடையாளம் காணப்படாமையினால் குடியிருக்கும் மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பிலான விடயங்கள்.

• வனவளத்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் வயல் நிலங்களை உரியவர்களிற்கு வழங்குதல் தொடர்பான விடயங்கள்.

நீண்டகாலமாக வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சொந்த மாவட்டத்தில் கடமையாற்றக் கூடியவாறான இடமாற்றம் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. மேலும் இலங்கை விவசாய சேவைக்குரியவர்களுக்கான பரீட்சை நடாத்தப்பட வேண்டும் என பிரதி விவசாயப்பணிப்பாளர் கேட்டுக்கொண்டமைக்கு எழுத்து மூலமான அறிக்கை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

• பாதுகாப்பான புகையிரத கடவையில் பணியாற்ற தேவையான உத்தியோகத்தர்களை ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டத்தில் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

• உமையாள்புரத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்கு அருகில் பாடசாலை அமைந்துள்ளது இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்கப்பட வேண்டும் எனும் விடயத்தினை மீளவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கௌரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

• வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளிற்கு அரச வேலைகள் தவிர்த்து சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்.

• நுண்கடன் நிதியளிப்பு முறையினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களிற்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பிலான விடயங்களோடு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுப்பது தொடர்பாக இராணுவத்தினுடைய உதவியினைப் பெற்று தடுக்குமாறு கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் காடழித்தல் என்பதற்கு மேலாக காடு வளர்த்தல் நடவடிக்கையையும் முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள நிர்வாகம் கள் இறக்குமதி செய்வதனை தடுத்து உள்ளுர் உற்பத்தியினை மேம்படுத்துமாறும்

கேட்டுக்கொண்டார். தொடர்ந்து யானைத்தொல்லை மற்றும் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையினை வழங்குமாறு வனவள திணைக்களத்தினையும் விவசாயத் திணைக்களத்தினையும் கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவான அறிக்கையினை

சமர்ப்பிக்குமாறும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய அபிவிருத்திப்பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

• முன்மொழியப்பட்ட கிளிநொச்சி பொதுச்சந்தை கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

• சகல வசதிகளையும் கொண்ட பொது நூலக கட்டட தொகுதியொன்றை உருவாக்குவதற்கு நீண்டகாலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பான தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்ளுராட்சி உதவி ஆணையாளரை கௌரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்தும் இடம்பெற்ற கூட்டத்தில் கிராமிய வீதிகளை புனரமைத்தல் தொடர்பான பிரச்சினையை முன்னுரிமைப்படுத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது பொருத்தமானது எனவும் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான கௌரவ.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தினுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *