அமெரிக்கா அரசுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு – கடும் கண்டனம் – பயத்தில் டிரம்ப்
சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களுக்கு நீதி கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான
காவல்துறை மிருகத்தனத்தையும் ஊறிப்போன இனவெறியையும் எதிர்த்து நாள்தோறும் தெருவிலிறங்கிப் போராடும் கிளர்ச்சியாளர்களுக்குத் தோழமை தெரிவித்துள்ளது.
வெள்ளைக் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஆபிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் பிளோய்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கிளர்ச்சிகள் நடந்து
வருகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்கா எனப்படும் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களாகிய ஈழத்தமிழர்கள் மனிதத் தன்மையற்ற அமைப்புசார் இனவெறிக் கொடுமையின் வலியை நன்கறிவார்கள். ஏனெனில் 1948இல்
இப்போது சிறிலங்கா எனப்படும் சிலோன் தீவு பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற நாள் முதல் சிங்கள பௌத்தப்பேரினவாதிகளின் கைகளிலும் பேரினவாத
நிறுவனங்களின் கைகளிலும் அவர்கள் இந்த இனவெறிக் கொடுமையைப் பட்டறிந்தவர்கள்.
ஆண்டாண்டு காலமாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வரும்போதும் அடக்கியொடுக்கப் பட்டவர்களாகவே இருப்பது எப்படி இருக்கும் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கறிவார்கள்.
‘போதும் நிறுத்து!’ என்ற முழக்கத்தோடு தெருவிலிறங்கிப் போராட எவ்வளவு துணிவும் உறுதியும் வேண்டும் என்பதையும் ஈழத் தமிழர்கள் அறிவார்கள். அறுபதுகளிலிருந்து சிறிலங்காவில் இன
பாகுபாட்டுக் கெதிராகப் போராடிய தமிழ் மாணவர்கள் மீது காவல்துறை ஏவிய மிருகத்தனத்தையொட்டித் துணிந்து தெருவிலிறங்கியவர்கள் ஈழத்தமிழர்கள். அந்த நேரத்தில்தான்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு சி, கதிரவேற்பிள்ளை அவர்கள் இலங்கையின் இனவெறியைத் தென் ஆபிரிக்காவில் கண்ட அப்பார்த்தேயிட்
இனவெறியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததோடு ‘சிறிலங்காவில் இனவெறி தோலில் ஒட்டியிருப்பதன்று, அது ஆன்மாவில் ஆழ ஊன்றியிருப்பது’ எனச் சொன்னார்.
அந்நாட்டின் இனவெறிப் பாகுபாடு கல்வித்துறை உட்பட வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பரந்து ஊறிக் காணப்படும் ஒன்று. தரப்படுத்தல் என்ற பெயரிலும் ‘சிங்களம் மட்டும்’ என்ற
சட்டத்தினூடாக வேலை வாய்ப்பு வழங்கலிலும், நிலப் பறிப்பு மூலம் குடியேற்றம் செய்வதிலும் பல வடிவங்களில் இது வெளிப்படுத்தப் படுகிறது. சிறீலங்காவின் இன்றைய ஆட்சி கடந்த வாரத்தின்
போதும் கூட புதைபொருள் ஆய்வு, பாரம்பரியம் பேணல் என்ற பெயர்களில் எல்லாம் புதிய செழுமையான தோற்றம் கொண்ட நிலப்பறிப்பு முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.
மேற்கூறிய அதே ஆன்ம நோய் அமெரிக்காவிலும் உள்ளது. அமெரிக்காவில் இனவெறி அந்நாடு அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கியது போலவே சிறிலங்காவிலும்
உள்ளது. 2017ஆம் ஆண்டு மனிதவுரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் போற்றிக் காத்தல் பற்றிய அப்போதைய சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்கா போய்வந்த பிறகு
‘சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ‘தமிழ் மக்களுக்கு எதிராக அளவுகடந்து’ பயன்படுத்தப்படுகிறது. சிறிலங்காவில்
தமிழர்கள் ‘அரசின் திறமான சித்திரவதைப் பொறியின் தாக்குவிசையைத் தாங்கியுள்ளனர்’ எனக் கூறினார்.
பாகுபாட்டிலிருந்து விடுபடும் உரிமை ஓர் அடிப்படை உரிமை. அனைத்து வகை இனப்பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தம் 1965ஆம் ஆண்டு ஐநா பொதுப் பேரவையால்
இயற்றப்பட்டது. அது கூறுவதாவது: உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம் பறைசாற்றுவது என்னவென்றால், மாந்தப் பிறவிகள் அனைவரும் பிறப்பால் உரிமையும் நிகர்மையும் உடையவர்கள்,
அதில் பொறிக்கப்பட்டுள்ள உரிமைகள், விடுமைகள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள். எவ்வித வேறுபாடும் இல்லாமல், குறிப்பாக இனம், நிறம், அல்லது பிறந்த நாடு
தொடர்பான எவ்வித வேறுபாடும் இல்லாமல் உரித்துடையவர்கள். அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் விரைந்து
ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடைபடிகளும் எடுக்கத் தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் ஒழிப்பது பற்றிய பன்னாட்டு ஒப்பந்தத்தை ஐநா உறுப்பு நாடுகள் இயற்றி 50 ஆண்டுக்கு மேலாயிற்று. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல
நாடுகளில் இனவெறி ஆழ வேரூன்றிப் பரவலாகத் தலைவிரித்தாடுகிறது. அமெரிக்காவில் இனவெறி என்பது சட்டச் செயலாக்கத்தில் மட்டுமல்லாமல், பொது நல்வாழ்வு, பொது வீட்டு
வசதி போன்ற சமூகப் பணியிலும், பெருங்குழுமத் தொழில்வணிகக் களத்திலும், பிறவகையிலும் கூட வெளிப்படுகிறது. கொவிட்-19
நோய்க்கு இரையாகியுள்ள கறுப்பின மக்களின் தகவுமீறிய பெருந்தொகை இந்த உண்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.
சிறிலங்காவும் அமெரிக்காவும் எதில் வேறுபடுகின்றன என்றால், அமைதியான போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்திய வரலாற்றைக்கொண்ட ஒருசில நாடுகளில்
அமெரிக்காவும் ஒன்று என்பதிலாகும். நாடு உருவாக்கப் பட்டதிலிருந்தே இது தொடங்கி விட்டது. பாஸ்டன் தேநீர்
விருந்துதான் அமெரிக்கப் புரட்சிக்கு உந்துதல் ஆயிற்று. பிற்பாடு 1960களில் குடியியல் உரிமைகள் இயக்கத்திலிருந்துதான் 1964ஆம் ஆண்டின் குடியியல் உரிமைகள் சட்டம் பிறந்தது. 1960களில்
ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள் இயக்கம்தான் ஓரினப்பாலியல் சமுதாயத்தினர் காவல்துறையால் மிருகத்தனமாக
நடத்தப்படுவதில் மாற்றங்கள் ஏற்படச்செய்தார்கள், அத்துடன் அண்மையில் அது திருமண நிகர்மையைக் கொண்டுசேர்த்தது.
ஜார்ஜ் பிளோய்டு கொலையானது அமெரிக்காவில் இனவுறவுகளில் ஒரு திருப்புமுனையைக் குறிப்பதாகும். கைப்பேசிகளில் படம்பிடிக்கப்பட்ட அந்த மனிதத்தன்மையற்ற செயல்
உலகெங்கிலும் கிளர்ச்சிகளைப் பற்ற வைத்தது. இளைஞர்கள் 1960களில் முன்னுக்கு நின்றது போலவே, இப்போதும் டிக்டாக்,
ஸ்னப்ஷாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இடுகைகளிட்டு இந்த கிளர்ச்சிகளின் முன்னணிப்படையாகத் திகழ்கின்றனர்.
அமெரிக்காவில் இரண்டாம் தலைமுறை ஈழத்தமிழர்கள் பலரும்கூட இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வரக் கண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது.
நடப்புக் கிளர்ச்சிகளும் அதேபோன்ற சமூக மாற்றம் நோக்கிய நடைபடிகளுக்கு வழிகோலக் கூடும் என்பதற்கான அறிகுறிகள்
தென்படுகின்றன. சில இடங்களில் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து காவல்துறை அதிகாரிகள் மண்டியிட்ட நிகழ்வு இப்படி
நம்பிக்கையூட்டும் படியான ஓர் அறிகுறியாகும், துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நேற்றைய துன்பகரமான அட்லாண்டா பொலிஸ் மற்றொரு நிராயுதபாணியான கறுப்பின
மனிதனை சுட்டுக் கொன்றது இந்த நம்பிக்கையைத் குறைப்பதோடு மேலும்; பணி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. எனவே, காங்கிரஸ் உறுப்பினர்கள்,
பொலிஸ் கமிஷனர்கள் மற்றும் அனைவருமே பொலிஸ் நடத்தை சீர்திருத்தங்களை; செய்வதற்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும். மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுப்பது மட்டுமே
மக்களின் உயிரை மதித்து பாதுகாப்பதைக் காட்டுகிறது. ஆனால், இனவெறி என்பது அமெரிக்கச் சமுதாயத்தில் உள்ளோடியிருக்கிற ஒன்றாய் இருப்பதால் சட்டச் சீர்திருத்தத்தின் ஊடாக மட்டும்
மெய்யான நீடித்த மாற்றம் மெய்ப்படச் செய்து விட முடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட விரும்புகிறது.
தனிமனிதர்களின் மனநிலையிலும் பரவலான மாற்றம் ஏற்பட வேண்டும்.
ஆகவே ஒவ்வொரு மனிதரும் தன்னுணர்வில்லாத காழ்ப்பெண்ணங்களை வெளிப்படுத்தத் தேவையான தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அழைக்கிறது. ஒவ்வொருவரும் வீட்டுப் படி தாண்டாமலே இதைச் செய்து கொள்ள முடியும். எப்போதோ நடந்திருக்க வேண்டிய பண்பாட்டு மாறுதலை இப்போதாவது செயற்படுத்த
ஒவ்வொருவரும் முயற்சி செய்வது இன்றைய அடிப்படைத் தேவையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






