Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!

ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!

அடக்கி ஒடுக்கி
அன்றாடம் கசக்கி
மகிழ்ந்து திரிந்தவர்
மாளிகை அழுகிறது

கக்கி துப்பி
கழிந்து திரிந்தவர் -தலை
வெட்கி குனியும்
வேளை சிரிக்கிறது

ஆடி பாடி
அன்று மகிழ்ந்த
நாளை கொன்று
நரகம் எறிந்தவர்

கால்கள் நடுங்கும்
காலம் மகிழ்கிறது
வெடித்து ஒழிக்க
வேங்கை வருகிறது

நடித்து திரிந்தாரும்
நாடகம் போட்டாரும்
அடித்து வீசும்
அக்காலம் வந்தது

கடித்து குதறும்
கந்தக துகள்கள்
வெடித்து பறக்கும்
வேளை பிறந்தது

அதர்மம் ஒன்று
அழியும் நாளில்
நீதி ஒன்று
நிமிர்ந்து சிரிக்கிறது

முள்ளி வாய்க்காலின்
முன் எழுந்த அவலத்தின்
கண்ணீர் துளியில்
கரைகிறது அரசு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2022

வன்னி மைந்தன் கவிதைகள்