Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஓடி வா வெள்ளமே கொள்ளையர்கள் காத்திருக்கார்

ஓடி வா வெள்ளமே கொள்ளையர்கள் காத்திருக்கார்

ஊர்கள் தேடி ஓடி வா வெள்ளலையே
ஊதி பெருத்தவன் காத்திருக்கான் …
ஊரழிந்த செய்தி சொல்லி
உருட்ட கோடி பாத்திருக்கான் ……

வாழ்வழிந்த துயர் சூடி நாமழுவோம்
வந்து கை கூப்பி அவன் மகிழ்வான் ….
வேட்டிகளின் சட்டை பை வெள்ளமாகுதே
வெந்த மனம் நொந்து கண்ணீராகுதே ….

அயல் வந்து அரவணைத்து உணவூட்டும்
அவல கணக்கு நாடாள்வார் உயர்வு காட்டும் …
ஓடி வெள்ளம் வடிந்த பின்னே ஊரளுவார்
ஓடி வெள்ளை வேட்டி மனம் மகிழ்வான் …..

நீர் வடிந்த நிலம் கண்டு நாம் கதற
நின்ற வீடு காணா வாய் குழற …..
ஓடி வந்து சேதம் முன் அளப்பான்
ஒன்றுக்கு கோடிகளில் கொள்ளையடிப்பான் ….

கொள்ளை அடி மன்னவர்கள் நாடாள
கொழுத்து உடல் பருத்து அவராட…..
வந்து எங்கள் வீடுடைத்து போ
வாடி அழ நாமும் பார்த்து போ ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -06/12/2018

வன்னி மைந்தன் கவிதைகள்