Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் துடை …!

கண்ணீர் துடை …!

வாடாத பூ வொன்று
வாடிய தேனின்று
வறண்டு நிலமும் காய்ந்ததோ -ஆறு
வற்றி இன்று மாண்டதோ

சோலைக் குள்ளே ஆடினாய்
சோராமலே பாடினாய்
யாரு கண்ணு பட்டதோ
யாகம் நின்று போனதோ

நீரின்றி வேருமோ
நிலமும் இனி வாடுமே
உயிரு நீயும் வாடவே
உள்ளம் இங்கு உறங்குமோ

தேராவில் ஆறும்
தேறி இன்று ஓடாதோ
இரணைமடு குளமும்
இதய கதவு திறக்காதோ

நேற்றடித்த காற்றினிலே
நேசக்கிளை உடைந்ததோ
வேதனையில் நீ தவிக்க
வேண்டினார் பார்க்கலையோ

நான் வணங்கும் ஆண்டவரை
நான் உனக்காய் வேண்டுகிறேன்
வேர் பிடித்து எழுந்திடுவாய்
வேகும் விழி துடைத்திடுவாய் ..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 11-01-2022