Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை ஏன் கைது செய்தாய் …?

என்னை ஏன் கைது செய்தாய் …?

அலை வீசும் கடலா நீ
அதில் ஓடும் மீனா நீ
எதுவென்று சொல்லாயோ
என் மனதை வெல்லாயோ …?

பாய் விரிக்கும் புல்வெளியில்
பனி துளியாய் வீழ்பவளே
உதயமாய் நான் விடிய
உருண்டோடி மறைவதெங்கே ..?

தெருவெல்லாம் பூவெய்தி
தேவதைகள் நடக்கையில
உனை மட்டும் என் விழிகள்
ஊர்வலமாய் தொடருதடி

கன்ன குழி பேரழகே
காவியத்தின் ஓரழகே
உள்ளத்தில் எனை மட்டும்
உயிரே சிறை வைக்காயோ ..?

உன் மூச்சு சுவாசத்தில்
உயர் மேகம் கருக்கட்டி
மழை வந்து கொட்டுதடி
மார்கழியாய் தாக்குதடி

இயற்கையே உன்னிடத்தில்
இன்று சரண் ஆகுதடி
நடமாடும் மனிதனடி
நான் காதல் செய்யேனோ …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 10-02-2021