100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (09.07) காலை யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பரீட்சார்த்தமாக பயணத்திருந்தது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹோ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா – ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.
100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்
இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பரீட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து, மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை அதேவேகத்தில் பயணித்திருந்தது.
குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது. இப் புகையிரதத்தில் புகையிரத திணைக்கள அதிகாரிகளும் பயணித்திருந்தனர்.

இதேவேளை, புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.






