ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் தெற்குப் பொலிஸ் வலயங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்
மேலும் பல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19
தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் நேற்று இரவு அறிவித்தது.
இதற்கமைவாக ஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்
ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அது தற்சமயம் நடைமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துவகைகளை கொள்வனவு
செய்வதற்காக வாரத்திற்கு இரண்டு நாட்கள் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.
கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்.
காலை 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை வர்த்தக நிலையங்கள் திறந்திருக்குமென கொவிட்-19 தொற்றுப் பரவலைத்
தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் நேற்று இரவு அறிவித்தது.