வவுனியாவில் 5 பேர் கைது; 9 பேர் மீது வலைவீச்சு! ஆவா குழுவா என விசாரணை
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றின் மீத தாக்குதல் நடத்தி ஆவா குழு என பொறித்தமை தொடர்பில் சந்தேகத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் நேற்று (03.03) மாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் வாளுடன் நடந்து சென்ற 24, 26 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை வவுனியா குற்றம்தடுப்பு பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஓப்படைத்தனர். அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 9 பேரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உஎள்ள வீடு ஒன்றின் முன் கடந்த 29 ஆம் திகதி இரவு 8 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என பொறிக்கப்பட்டிருந்ததுடன், வீட்டு கேற்றும் வாளால் குத்தி சேதமாக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கும் மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப்பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு தலைமையிலான குழுவினர் விரைந்து முன்னெடுத்துள்ள விசாரணைகளின் காரணமாக வேப்பங்குளம் பகுதியில் வாளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இருவரும், வாரிக்குட்டியூர் பகுதியில் 20 வயதுடைய ஒருவரும், திருநாவற்குளம் பகுதியில் 20 வயதுடைய ஒருவரும், குருமன்காடு பகுதியில் ஒருவருமென ஐந்து பேரை கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து மேலும் 9 பேரை பொலிசார் தேடிவருகின்றனர். இவர்களை தடுத்து வைத்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.






