யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்காக வவுனியாவில் கொங்கிறீட் பனல் வீடு நிர்மாணிப்பு வட மாகாணத்தில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தொழில் நுட்பத்துடனான கொங்கிறீட் பனல் மற்றும் பயனாளிகளால் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்தொகுதிகளின்
முதல் வீடு வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை மகிழங்குளத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் (21.02)
அடிக்கல் நாட்டி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்
அவர்களின் முயற்சியால் அரச நிதியின் கீழ் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் “நாட்டைக்
கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் மூலம் பிரதமரின் நெறிப்படுத்தலில் சமூக வலுவூட்டல் மற்றும்
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின்
வழிகாட்டலில் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆகியோரின்
வாழ்வாதாரத்திற்காக குறித்த கொங்கிறீட் பொருத்து வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் 650 சதுர அடிகளைக் கொண்டதாக
இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் இவ்வீடுகள் பதினான்கு நாட்களில் இருந்து மூன்று வாரத்திற்குள் பூரணப்படுத்தி மக்களிற்கு
கையளிக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது. வவுனியா மாவட்டச் செயலாளர் சமன் பந்துலசேன அவர்களின்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்
தர்மபால செனவிரட்ன, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் எஸ்.கனகரத்தினம், பிரதேசச்
செயலாளர்கள், திட்டமிடல் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம அலுவலர், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்