வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்
நாட்டில் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், வரலாற்றில் முதன்முறையாக கல்விக்கு என்று அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு:
- முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேலை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
- முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது.
- தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது.
- பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5,000 இலிருந்து ரூபா 7,500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4,000 இலிருந்து ரூபா 6,500 ஆக அதிகரிக்கவும் 4,600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது






