ரணிலுக்கு மனோ கடிதம் – தீர்வு கிடைக்குமா

Spread the love

ரணில் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் மனோ கணேசன் எழுதிய கடிதம் ,உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை.

உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும்

பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி, கோதுமை வாங்க பணமுமில்லை. கடைகளில் பொருளுமில்லை.

இதனால் ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம்.

இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.

விவசாய அமைச்சின் அனுசரணையும் இவர்களுக்கு வழங்க சொல்லுங்கள். இந்நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை தொழிலாளர்கள்

பயிரிட்டு தங்கள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் பங்களிப்பை வழங்க முடியும் என தமிழ்

முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கோரியுள்ளார்.

தனது கோரிக்கை கடிதத்தில் தமுக தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, நுவரெலியா, கொழும்பின் அவிசாவளை, பதுளை, இரத்தினபுரி,

கண்டி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை ஆகிய மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள்

வருமானமின்றி நிர்க்கதி நிலையில் ஏற்கனவே பெருந்துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னமும் சில

மாதங்களில், உண்ண உணவின்றி நம் நாட்டில் பட்டினி சாவை சந்திக்க கூடியவர்களாக கணிக்க கூடியயோர் பட்டியலில் முதன்மை நிலையில் இருப்போர் இவர்களே.

“தொழிலாளர்கள்” என்ற அடையாளத்தால் இவர்களுக்கு முறையாக சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. கிடைக்காத சம்பள கணக்குகள் காரணமாக

இவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே இல்லை என்ற போலி புள்ளி விபரங்கள் காரணமாக இவர்களுக்கு நியாயம் எப்போதும் கிடைப்பதில்லை. உண்மையில் கீழே ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் இந்த மக்களே வறுமை கோட்டுக்கு வாழ்கிறார்கள்.

மானிய விலையில், கோதுமை மாவு தருகிறோம், மண்ணெண்ணெய் தருகிறோம் என்று காலத்துக்கு காலம் சொல்லப்பட்டாலும் கூட எதுவும் உருப்படியாக கிடைப்பதில்லை.

ஆகவே தோட்டங்களில் அடாத்தாக கிடக்கும் தரிசு காணிகளை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை

வேண்டுகிறேன். இந்த நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை கடும் உழைப்பாளிகளான இந்த உழைக்கும் மக்கள் பயிரிட்டு தங்கள் வீட்டு

தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்.

விவசாய அமைச்சின் அனுசரணையும் வழங்க பணிப்புரை விடுக்கும்படி கோருகிறேன். அவ்வாராயின் குறுகிய காலத்தில் பயன் தரும் உணவு பயிர்களை

பயிரிட உரிய ஆலோசனைகளையும், ஒத்தாசைகளையும் அவர்களால் பெற முடியும். நான் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் வரும் பிரதேச செயலாளர்களை அழைத்து

அவசர கலந்தாலோசனையை ஏற்பாடுமாறு அன்புடன் கோருகிறேன்.

தோட்ட பிரதேசங்களில் நிலவும் வரலாறு காணாத அசாத்திய வறுமை காரணமாக

அங்கே தங்களது ஆட்சியின் கீழ் பட்டினி சாவுகள் நிகழ முன்னர் இதை நீங்கள் செய்வீர்களாயின் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *