யாழில் மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்
யாழில் மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ,யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ்.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கம் நீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்து தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்தன. குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்திய நிலையில் குறித்த இடத்தை நீதிபதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சென்ற பார்வையிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீதிபதி கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக அறிந்தேன்.
ஆகவே கடந்த காலங்களைப் போன்று நீதிமன்ற விவகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை அரசாங்கம் என்ற வகையில் நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்






