மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு

Spread the love

மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு

யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நாளை (22) நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை

ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை (19), மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி, விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இன்று 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை, இந்த தடை உத்தரவு வழங்குமாறு, பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்று தெரிவித்த பொலிஸார், இதனை தடை செய்யுமாறும் கோரியுள்ளனர்.

அத்துடன், நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள், வெள்ளிக்கிழமை (19), இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டோர் மன்றில் முன்னிலையாகவில்லை.

இதனைத் தொடர்ந்து, அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை (22) நடைபெறும் எனவும் அதன் பின்னர் கட்டளை பிறப்பிப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்,
தடை உத்தரவு கட்டளையை நேற்று முன்தினம் (19) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *