மறந்திடாதீங்க தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்கள் -அரசியல்வாதி கொள்ளையடிக்க ஓட்டை போடுங்க
2020 பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில்
அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
வழமையான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பாரிய அளவிலான
மக்கள் பேரணிகள் இடம்பெறாத போதிலும், பிரதேச மட்டத்தில் சிறு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப்
பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய
தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வீடு செல்வதும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2020 பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது
என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி
அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அனுமதிப் பத்திரம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவுத்
திணைக்களம் விநியோகித்த மத குருமாருக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பது
கட்டாயமானது. பாராளுமன்றத் தேர்தலுக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விநியோகித்த தேசிய அடையாள அட்டை
விண்ணப்பத்திற்கான உறுதிப்படுத்தல் பத்திரமும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இதேவேளை பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த
திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.