மக்கள் காணிகளை அபகரிக்கும் காட்டு வாசிகள் – களத்தில் குதித்த சிறிதரன் எம்பி
வனவளத் திணைக்களத்தினரால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள ஜெயபுரம் மக்களின் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி!
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயபுரம் வடக்குப் பகுதியில், ஏறத்தாழ அறுபது குடும்பங்களுக்குச் சொந்தமான மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிகளை
வனவளத் திணைக்களத்தினர் எல்லைப்படுத்தியுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, நேற்றுமுன்தினம் குறித்த காணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திக்குவில், எத்தாவில், சுண்ணாவில், தும்புருவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1965 ஆம்
ஆண்டிலிருந்து திக்குவில் குளத்தை நீர் மூலமாகக் கொண்டு மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காலத்துக்குக்காலம் நடைபெற்ற இடப்பெயர்வுகளின் பாதிப்புக்களை
எதிர்கொண்டு, இறுதியாக 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறியதிலிருந்து இன்றுவரை அம்மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த காணிகளை எல்லைப்படுத்தியுள்ள வனவளத்
திணைக்களத்தினர் அக்காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாதென மக்களைத் தடுத்து வருகின்றனர்.
ஆனால் அதே பகுதியில் தனது தந்தையாருக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி உள்ளதாகக்கூறி, காடழித்து நிரந்தர அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுவரும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களத் தனவந்தர் ஒருவருக்கு எதிராக வனவளத் திணைக்களத்தினர் எவ்வித எதிர்ப்பு
நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமக்கு காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்களால்
முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நேற்றைய தினம் (2021.09.12) நேரில் சென்று குறித்த காணிகளைப் பார்வையிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்புவதன் மூலம் காணிகளை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இதன்போது, பூநகரி பிரதேசசபையின் ஜெயபுரம் வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் சந்திரபோஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஜெயபுரம் வட்டார அமைப்பாளர்
திரு.செல்வராஜ் குமாரவேல், ஓய்வுநிலை அதிபர் திரு.இரவீந்திரன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது









