புதிய வகை டெங்கு வைரஸுடன் டெங்கு பரவல்
புதிய வகை டெங்கு வைரஸுடன் டெங்கு பரவல் அதிகரிப்பதற்குத் தொடர்பு இருப்பதாகப் பிரதமர் கூறிய கூற்றுகளை சுகாதார வல்லுநர்கள் நிராகரித்துள்ளனர்.
தற்போதைய டெங்கு நோய்ப் பரவல்
தற்போதைய டெங்கு நோய்ப் பரவல் அதிகரிப்பிற்கு, டெங்கு வைரஸின் புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட வகையே காரணம் என்று பிரதமர் ஹரினி
அமரசூரிய மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் கூறிய சமீபத்திய அறிக்கைகளை சுகாதார வல்லுநர்கள் நிராகரித்துள்ளனர்.
அத்தகைய கூற்றுகளை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள எந்த ஆய்வகமும் புதிய டெங்கு வைரஸ் வகையைக் கண்டறியவில்லை என்றும், சமீபத்திய நோய்த்தொற்று அதிகரிப்பிற்கு ஒரு
புதிய வகையே காரணம் என்ற கூற்றுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ டெய்லி மிரர் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
“யாரும், எந்த ஆய்வகமும் ஒரு புதிய வகையைக் கண்டறியவில்லை. அத்தகைய கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்று டாக்டர் பெர்னாண்டோ கூறினார்.
இதற்கிடையில், சிரேஷ்ட ஆலோசக மருத்துவர் டாக்டர் உதிதா விஜேவிக்ரமவும், ஒரு புதிய வகை வைரஸ் இந்த நோய்ப் பரவலுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படும் கருத்துக்களை நிராகரித்தார்.
மாறாக, நோய்ப் பரவல் அதிகரிப்பானது, தற்போது பரவலாக உள்ள டெங்கு வைரஸ் செரோடைப் 2 (DENV-2) உடன் தொடர்புடையது என்று அவர் விளக்கினார்.
செரோடைப்களின் பரவலால் டெங்கு நோய்த்தொற்று
பல்வேறு செரோடைப்களின் பரவலால் டெங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன என்றும்,
அண்மைக் மாதங்களில், முன்னர் ஆதிக்கம் செலுத்திய வகை 3-க்கு பதிலாக வகை 2 அதிகளவில் பரவி வருகிறது என்றும் அவர் கூறினார்.
பலருக்கு வகை 2-க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம் என்பதால், பரவி வரும் செரோடைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் டெங்கு
நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது என்று டாக்டர் விஜேவிக்ரம குறிப்பிட்டார்.
புதிய டெங்கு வைரஸ் திரிபு ஒன்று உருவானதே, அண்மைக் காலங்களில் டெங்கு நோய்த்தொற்றுகள் திடீரென அதிகரித்ததற்குக் காரணம் என்று
பிரதமர் ஹரினி அமரசூரிய கூறியதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வந்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட டெங்கு வைரஸ் திரிபு ஒன்று இலங்கையில் தற்போது நோய் பரவுவதற்குக் காரணமாக அமைந்து,
மக்களிடையே நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரித்து வருகிறது என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனியும் கூறினார்.
இருப்பினும், பரவி வரும் செரோடைப் மாறியிருந்தாலும், நாட்டில் புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட டெங்கு வைரஸ் திரிபு ஒன்று இருப்பதற்கான
உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.







