இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், சில்லறை கடை, கோழி கடை தொடர்பாடல் நிலையம் ஆகிய
மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை. பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருள்கள், ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.