ஜெனீவா விவகாரம் தேசிய பிரச்சினை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Spread the love

ஜெனீவா விவகாரத்தை தேசிய பிரச்சினை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

ஜெனீவா விவகாரத்தை, அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய பிரச்சினையாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசியல் நோக்கங்களை விடுத்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண காரியமல்ல என்றும் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 பிரேரணையைச் செயற்படுத்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்தார்.

உள்ளகப் பொறிமுறை ஊடாக ஒரு சில விடயங்களை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், ஜெனீவா விவகாரத்தை, எதிர்த் தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண விடயமல்ல என்றும் கூறினார்.

சர்வதேச நீதிமன்றக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்றும், ஆகவே இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்றும் கூறினார்.

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் அதிகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என்றும் பாதுகாப்புச் சபைக்கே இவ்வதிகாரம் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்ட அவர், பாதுகாப்புச் சபையில், சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் என்பதால், சர்வதேச நீதிமன்ற விவகாரம் சாத்தியமற்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *