உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

Spread the love

உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

நெஞ்சுக்குள் நெருக்கமாய் நின்றவரே
நெடுநாளாய் நெஞ்சுக்குரம் தந்தவரே ..
உன் ரேகை பார்த்து உளம் நொந்தேன் …
உன் வலியின் உயிர் அறிந்தேன் …

நேற்றைக்கும் இன்றைக்கும் நீ இருப்பாய்
நினைவிலே என்றும் நீ உதிப்பாய் …
பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையிலான்
பொழிவிலா உடலை ஏன் பறித்தான் …

கண்ணுக்குள் உலா வரும் உன் உடலை
கை தொழுதான் ஏன் பறித்தான் …?
என் செய்தி கேட்டு நீ வீழ்ந்தாய் …?
ஏன் இத்தனை வேகத்தில் நீ மறைந்தாய் ..?

உன்னிடம் கற்றதை சொல்லிடவா …?
உள்ளத்தில் வைத்ததை கொட்டிடவா ..?
மடியாத நம்பிக்கை நான் முகர்ந்தேன்
மணம் வீசும் காதலை யான் உணர்ந்தேன் …

கூணாத உழைப்பை நான் சுவைத்தேன்
குன்றாத வீரத்தை யான் படித்தேன் …
மன்றாட்டம் இல்லா பேச்சை கண்டேன்
மரியாதை பொழிகின்ற அகவை கண்டேன் …

விரைவாக பிடித்த மொழியை கண்டேன்
வீழாது எழுகின்ற வேகம் கண்டேன் …
முடியாது என்ற சொல்லை மறந்தேன் – உன்
முயற்சிகள் கண்டே யான் வியந்தேன் …

அகவையில் நீ வயதானாய்
அகத்திலே நீ உயர்வானாய் …
பிடித்ததை பேசும் பண்பானாய் – நூல்
பிடித்ததில் படைக்கும் படைப்பானாய் …

கண்டவை உன்னில் நூறெனலாம் – யான்
கற்றது தூசென சொல்லிடலாம் …
சொற்ப நேரத்தில் கண்ணுற்றதை
சொல்லிட நாள் ஒன்று போதாது …

ஒரு நாள் உன்னாலே நான் துடித்தேன்
ஒயாத உன் நினைவால் நான் துவண்டேன்..
உன்னரு ஓர் நாள் உட்கார்ந்து
உறவாடிய நாளது பொற்காலம் …..

பிள்ளைக்கு பிள்ளையார் பெயர் வைத்தவா
பிரியமாய் அவனை உளம் கொண்டவா ..
உன்னாலே தவிக்கிறோம் நீ காணாய்
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/07/2019
குறிப்பு –

ஐங்கரன் தந்தையார் துயர் அறிந்து ….
அவர் பாதம் இதனை நான் விரித்தேன் …
நெஞ்சுக்குள் நிற்கின்ற நினைவொன்றின்
நியமான தடத்தில் நான் படைத்தேன் …!

உயிர்த்தே ஒருமுறை
உயிர்த்தே ஒருமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *