அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது- எடப்பாடி

Spread the love

இந்தியா டுடே பத்திரிகை ‘அடுத்த 5 ஆண்டில் தமிழகம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியதுசென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தியா டுடே பத்திரிகை சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது.

அப்போது அவரது அரசியல் பயணம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

1974-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். அப்போது நான் வளர்ந்து கொண்டு இருந்தேன்.

அந்த காலகட்டத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை எதிர்த்து கட்சி நடத்தி கொண்டு இருந்தார். அதில் இருந்து நான் கட்சியில் தீவிரமாக பணியாற்றினேன்.

எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்தேன். யாரிடமும் எந்த சிபாரிசுக்கும் சென்றது இல்லை.

எனது சொந்த உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். 1989-ல் அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது அம்மா தலைமையிலான அணியை ஏற்று அதில் போட்டியிட்டேன்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனேன். அதிலிருந்து கட்சியில் பல பொறுப்புகளை வகித்தேன். பல வாரியங்களுக்கு தலைவராகவும் பணியாற்றினேன். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் வெற்றி பெற்றேன்.

2011- ஆண்டு அம்மா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றேன். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். அப்போது கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டது. அனைத்து பணியையும் நான் சிறப்பாக செய்து வந்தேன்.

அம்மா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் சேவையை செய்வதுதான் எனது பிரதான பணியாகும். மக்கள் பிரச்சனைகளை நான் முழுமையாக அறிந்துள்ளேன்.

சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்ததால் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவன்.

மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள், அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து வந்துள்ளேன்.

அதனால்தான் மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறேன். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.

தமிழகம் இன்று பல துறைகளில் சாதனை படைத்து பல்வேறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தியதால் மக்களிடம் எனக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு சோதனைகளை சவாலாக எடுத்து தற்போது சாதித்து உள்ளேன்.

மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், அரசியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் புரட்சித்தலைவி அம்மா எனக்கு பயிற்சியை தந்துள்ளார். நான் எனது சொந்த உழைப்பு முயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளேன்.

இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. அரசு தொடர மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்து அதற்கேற்ப பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.

அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணைவதாக கூறுவது தவறு. அவ்வாறு வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.

அ.தி.மு.க.வை எதிரிகளால் வீழ்த்த முடியாது. எதிரிகளின் கனவு பலிக்காது.

அ.தி.மு.க. மூலம் பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைவதாக கூறுவது சரியல்ல. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மாநில திட்டங்கள் நிறைவேறும் என்பதால், மத்திய அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.

அதனால் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்துள்ளன. இதனால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி- குளங்கள் நிரம்பி உள்ளன. இந்த திட்டத்தை மக்கள் அனைவரும் வரவேற்று உள்ளனர்.

உயர்கல்வி படிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிபெற்று தொடங்கி உள்ளோம்.

நாங்கள் போடும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். எங்களிடம் இருந்து கசியும் திட்டங்களை அவரது திட்டங்கள் போல சொல்கிறார்.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் என்னோடு விவாதிக்க தயாரா?

மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் நான் கவனம் செலுத்தியதால் எனக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நான் பயணித்த காலம் மிகவும் கடினமானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடனும் நான் அரசியல் பணி செய்துள்ளேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Home » அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது- எடப்பாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *