இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் வருவோரின் எண்ணிக்கை அதிகம் – யாழ்அரசாங்க அதிபர்
யாழில் இரண்டாவது கொரோனா அலையினை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும் சுகாதார
திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கொரோனாஅபாயம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் , யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் ஆரம்பத்தில் 16 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில்
மூன்று குடும்பம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும், ஒரு குடும்பம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வருகை தந்தவரின் குடும்பம் என்ற
அடிப்படையிலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் மொத்தமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாடானது சுகாதார திணைக்களம் ஏனைய திணைக்களங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
பொதுமக்களுடைய செயற்பாட்டின் மூலமே யாழில்கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் தற்பொழுது இது சமூகத் தொற்றாக உருவாக கூடிய அபாயம்
காணப்படுவதாக உணரப்படுகின்றது.
இந்த நிலையில் இரண்டாவது அலையாக அதாவது முன்னரோடு ஒப்பிடும்போது நாளாந்தம் அறிக்கையிடப்படுகின்ற புள்ளி
விவரங்களைப் பார்க்கும் போது நோயாளர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது.
யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் மிகவும் விழிப்பாக இருந்து இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . சுகாதார பிரிவினரின்
சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்த்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
பாடசாலைகளுக்கு இன்றிலிருந்து ஒரு கிழமைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்கள் யாவும் சீராக இயங்கி வருகின்றன. எனினும் தேவையுடையவர்கள் மட்டும்
அலுவலகங்களுக்கு வருகைதந்து தங்களுடைய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் . அதே வேளையில் ஏனைய பொது
தொடர்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் தமது அன்றாட
தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் அரசாங்க அதிபர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில் இன்னுமொரு அபாயம் யாழ்ப்பாண மாவட்டத்திலே காணப்படுகின்றது. தற்போது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக
காணப்படுகின்றது. அதாவது நேற்று முன்தினம் கூட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்குரிய சட்ட நடவடிக்கை பொலீஸ் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க வேண்டும். அதாவது உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கு
தெரிந்தவர்களோ இவ்வாறான விடயங்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அருகில் உள்ள கிராம சேவையாளர் அல்லது போலிசார் அல்லது அதற்குரிய அதிகாரிகளுக்கு உடனடியாக
தெரியப்படுத்துங்கள். மேலும் எங்களுடைய யாழ் குடாநாட்டை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது பொதுமக்களுடைய கைகளில் தான் தற்போது இருக்கின்றது சுகாதார சுகாதார
துறையினரின் அறிவுறுத்தலுக்கு ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனை பின்பற்றுவதன் மூலமே
யாழ்ப்பாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேலும் தெரிவித்தார்.






