வவுனியா பொலிசாரின் தொடர் வேட்டை: ஆவா குழு என சந்தேகத்தில் மேலும் மூவர் கைது!
வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ள தீவிர விசாரணைகளின் அடிப்படையில் பண்டாரிக்குளம் பகுதியில் வாள்களுடன் நடமாடி வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் ஆவா குழு என பொறித்தமை தொடர்பில் சந்தேகத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் வாளுடன் நடந்து சென்ற 24 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை வவுனியா குற்றத் தடுப்பு பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஓப்படைத்திருந்தனர். அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கடந்த 29 ஆம் திகதி இரவு 8 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் சுவரில் ஆவா குழு என பொறிக்கப்பட்டு வீட்டு கேற்றும் வாளால் குத்தி சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் அடைந்த பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப்பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு தலைமையில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து முன்னெடுத்துள்ள விசாரணைகளின் காரணமாக வாரிக்குட்டியூர், திருநாவற்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் மேலும் மூவர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். அத்துடன் மேலும் 9 பேரை பொலிசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த இளைஞர்களில் மூவர் நேற்று மாலை வவுனியா நகரம் மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் வைது;து கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இதுவரை 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு வாள்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.






