புலிகள் ஆயுத போராட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் அல்ல- சிவமோகன்நெத்தியடி
வவுனியா அலுவலகம்
12-5-2020
M.A. சுமந்திரன் அவர்களுக்கு பதில்.
கடந்தகால யுத்தம் தமிழர்களிடம் பலாத்காரமாக திணிக்கப்பட்டது. தேசியத் தலைவரின் தலைமையில் வீறு கொண்டு
எழுந்தது.அன்றைய காலத்தில் எத்தனை இனப்படுகொலையை எங்கள் இனம் சந்தித்திருக்கின்றது. 1956,1958,1977,1981, 1983ஜூலை என பல கலவரங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். துடிக்கத் துடிக்க
தாரிலே போட்டு கொலை செய்த வரலாறுகள் உண்டு. நிர்வாணமாக்கி நடுச் சந்தியில் விடப்பட்ட தமிழர்கள் தம்முடய மானம் காக்க ஒரு பஸ் நிலையத்தில் இருந்தபோது கூட மீண்டும்
அவர்கள் எரிக்கப்பட்ட வரலாறுகள் ஆதாரமாகக் இருக்கின்றது. கூட்டு குடும்பமாக காணாமல் ஆக்கப்பட்ட வரலாறுகள்
இருக்கின்றது.கொலை கொள்ளை சித்திரவதை என தமிழர்கள் பட்ட வேதனைகள் தான் சொல்லில் அடங்குமா?
அன்று அகிம்சையே அடக்கம் செய்யப்பட்ட இந்த நாட்டில் யுத்தம் பலாத்காரமாக தான் தமிழரிடையே புகுத்தப்பட்டது.
அப்படி இருக்க ஈழ விடுதலைப் போராட்டத்தையும் தேசியத்தலைவர் அவர்களின் அரசியல் ஆயுதப் போராட்டத்தையும்
எவராலும் மறுக்கமுடியாது. அதனை மறுப்பவன் ஒரு ஈழ தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும். வன்னி மண்ணிலே வானில் இருந்து குண்டு வீசப்பட்டு
பங்கரிலேயே ஒரு நாள் கூட படுத்திருக்காதவர்களுக்கு விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை. யுத்தத்தில் சிதைந்துபோன கால்களை சத்திர சிகிச்சை மூலமாக அகற்றிய பின்னர்
மயக்கத்தில் இருந்து மீண்டெழுந்த அவர்கள் எங்கே என் கால் என்று கேட்கும் போது அதனை அகற்றிய டாக்டரின் மனம் படும் வேதனைகள் இவர்களுக்குப் புரியாது.
முள்ளிவாய்க்காலில் முழுமையாக தமிழினத்தை பறிகொடுத்த வேதனையை அனுபவிக்கும் வாரத்தில் இப்படி ஒரு வசனம் தனிப்பட்ட கருத்தாக கூட சுமந்திரன் அவர்களின் வாயில் இருந்து
வந்திருக்கக்கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தனி நபர்களின் சொத்து அல்ல தேசியத் தலைவரினால்
வடிவமைக்கப்பட்டது. தமிழரின் ஒற்றுமைக்காக அதைப் பாதுகாத்துக் கொண்டு செல்ல வேண்டியபொறுப்பு ஒவ்வொரு தமிழனின் வரலாற்று கடமை. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்
“வருபவன் வருவான் போறவன் போவான் போற்றுபவன் போற்றுவான் தூற்றுபவன் தூற்றுவான்”அதற்காக நாம் அனைவரும்
வரலாறு கடந்து எமது தமிழினத்தின் ஒற்றுமையை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.என்று வைத்தி கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.







