ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

Spread the love

ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி குற்றச்சாட்டு

ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தைப்பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி.

ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ந் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதையொட்டி இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜோ பைடன் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி, அவர்களது ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

முதலில் ஜோ பைடன் செய்ய வேண்டியது, நமது கூட்டாளிகளுடன், அது தைவானாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், ஜப்பானாக இருந்தாலும் சரி, அவர்களுடைய முதுகெலும்பாக இருப்போம் என்று மறு உறுதி செய்ய வேண்டும். நமக்கு அவர்களும் தேவை.

இரண்டாவது, உலகமெங்கும் நாம் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த (ஆப்கானிஸ்தானில்) தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு ஆள் சேர்ப்பார்கள். அதை நாம் பார்க்க முடியும்.

நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். நமது இணையதள பாதுகாப்பு, பத்திரமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷியா போன்ற நாடுகள் தொடர்ந்து நம் தளங்களில் ஊடுருவுவார்கள்.

ஏனென்றால் நாம் மீண்டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

நாம் சீனாவைப் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி செய்கிறது. (இந்த விமானப்படை தளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.)

சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

நமக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம், நமது கூட்டாளிகளை வலுப்படுத்துவதாகும். அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டும்.

சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *