நேபாளத்தில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – 14 உடல்கள் மீட்பு

Spread the love

நேபாளத்தில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – 14 உடல்கள் மீட்பு

விமானம் விழுந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானம் சுற்றுலா நகரான பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். நேற்று காலை 10.15 மணிக்கு இதுபோல சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்சாம் நகருக்கு புறப்பட்டது.

விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள சிப்பந்திகள் என 22 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது.

விமானம் எந்த இடத்தில் விழுந்தது, எப்படி விபத்து ஏற்பட்டது என்பது பற்றி நேபாள ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். இதற்காக ராணுவ வீரர்கள், மீட்பு குழுவினர் விமானம் விழுந்த பகுதியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இன்று நேபாள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாராயண் சில்வால்

தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானம் விழுந்த இடம் தெரியவந்துள்ளது.

சனோஸ்வர், தசாங் 2, முஸ்டாங் பகுதியில் எங்கள் மீட்பு படையினர் விமான பாகங்களை கண்டுபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

விமானம் விழுந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அங்கு விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இதுபோல விபத்தில் பலியானவர்களின் உடல்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. என்றாலும் பலியானவர்களின் உடல்களை தேடும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்தவர்கள் யார்-யார்? என்ற பட்டியலை விமான நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்களும் மகாராஷ்டிர
மாநிலம் பூனாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர்,
குழந்தைகள் தனுஷ் மற்றும் ரித்திகா என தெரியவந்துள்ளது.
இவர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.

    Leave a Reply