
மூடிய விமான நிலையங்கள் பயண எச்சரிக்கை
நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதக்கலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதுதவிர்த்து இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.
சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள், ஊழியர்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக,
இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நோட்டீஸ் டூ ஏர்மேன் என்ற பிரிவின் கீழ் இதற்கான நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ள தகவலில், விமான நிலையங்கள் மூடுதல் என்பது தற்காலிக முடிவு.
தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட விமானநிலையங்களுக்கு வர வேண்டிய பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், வேறு விமான நிலையங்களுக்கு சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களை அணுகும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஆகாசா ஏர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக விமானம் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்துக்கு பயணிகள் வர வேண்டும்.
விமான நிலையத்திற்குள் செல்ல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். விமானத்துக்குள் ஏழு கிலோ வரை எடையுள்ள ஒரு கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளும் விமானத்துக்குள் ஏறுவதற்கு முன்பு இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அசாதாரண சூழலில், அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சோதனைகள் மற்றும் சம்பிரதாயங்களை எதிர்கொள்ள, திட்டமிட்ட பயண நேரத்துக்கு முன்பே விமானநிலையத்துக்கு பயணிகள் வரவேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.
ஆனால், இதனை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. “நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்குள் நுழைவதற்கு முழுமையான தடை இல்லை.
குறிப்பிட்ட சில விமான நிலையங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன” என்று அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.