தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்

Spread the love

தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்

யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக வாக்களித்து தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முன்னைய காலத்தில் நடந்த கேலிக்கூத்தான தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சிலர் தெரிவு செய்யப்பட்டார்கள் என்றும் சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நேற்று (03) வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாகும். இதில் மக்களுடைய தீர்ப்பு என்பது அவசியம். நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நடந்த எந்த ஆட்சி முறைகளிலும் இல்லாத வித்தியாசமான ஆட்சிமுறை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதாவது இராணுவ ஆட்சி இன்று தலை தூக்கியுள்ளது. முன்னர் எப்போதும் இராணுவ ஆட்சி இருந்தது இல்லை. 2015 ஆண்டு நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த ஆட்சி முன்னேற முடியாமல் கவிழ்ந்து பழையபடி முன்னர் ராஜபக்ஷ ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது. ஆனால் பழையபடி ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது என்பதை சரியான விளக்கமாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளது.

அண்ணன் 24 வயதில் பாராளுமன்றத்திற்கு சென்றவர். இப்போது 50 வருட பாராளுமன்ற வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தில்தான் மஹிந்த பயிற்றப்பட்டனர். அவரை ஜனநாயகவாதி என்று யாரும் சொல்லாவிட்டாலும், அவருடைய பயிற்சி முழுவதும் பாராளுமன்றத்தில்தான் இருந்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயிற்சி முழுவதும் இராணுவத்துடன் தொடர்பட்டே இருந்தது.

இராணுவத்திலே கேள்வி கேட்கும் உரிமை கிடையாது, மாற்று கருத்துக்கு உரிமை கிடையாது, கலந்துரையாடலுக்கு உரித்து இருக்காது. கட்டளையிடுவதும் இடப்படும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியதுமே இராணுவத்தின் பயிற்சியில் உள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் இருந்து வந்தவர் இன்று நாட்டில் தலைவராக வந்துள்ளார். அதனால்தான் இன்றைய ஆட்சி முறை இராணுவமயப்பட்டதாக உள்ளது. குறிப்பாக அரச திணைக்களங்கள் மற்றும் செயலணிகளுக்கும் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் நியமிக்கின்றார்.

இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியும் இப்போது இரண்டாக உடைந்து போயுள்ளது.

எனவே அரசை எதிர்க்க சக்தி இல்லாத எதிர்கட்சிதான் நாட்டில் உள்ளது. தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இதுவரை காலமும் ஒரே மாதிரியானதாகத்தான் இருந்து வருகின்றது.

56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஸ்டி தீர்வுக்கே வாக்களித்து வந்தார்கள். சமஸ்டி என்பது நீண்ட கால ஜனநாயக தீர்ப்பாகும். அதில் எந்தவித சலனமும் இடையில் ஏற்படவில்லை. 56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டுமே ஆணைகொடுத்து வந்துள்ளார்கள்.

சமஸ்டி என்பதுதான் மக்கள் தந்த ஆணை. இருப்பினும் 77 ஆம் ஆண்டு தேர்தலின் போது தனிநாட்டுக்கான ஆணையையும் கொடுத்தார்கள். யுத்த காலத்தில் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாத பாரளுமன்றமும் இருந்திருக்கின்றது.

அல்லது கேலிக்கூத்தான் தேர்தல்களில் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் தமது பிரதிநிதிகளை மக்கள் வாக்களித்து தெரிவு செய்யலாம் என்ற சூழ்நிலையில் எங்களுடைய ஒரே நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது அவசியமானது.

இப்போது மாற்று கட்சிகள் என்று சொல்லி பலர் முன்வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இதனால் மாற்று அணி ஒன்று வேண்டும் என்று கூறி வருகின்றவர்களின் எதிர்பார்ப்பு தமக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்பது முழுமையான பொய்யான பிரச்சாரமாகும். விசேடமாக கடந்த 5 ஆண்டில் ஒரு அரசியல் தீர்வினை கொண்டுவருவதற்கு முயற்சித்தோம்.

அதிகாரப்பரவல் தொடர்பில் அனைத்து கட்சிகளும் இணங்கிய வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு நிறைவேறாவிட்டாலும், அது முக்கியமான மயில் கல்லாகும். மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு விடிவு பெற்றுக் கொடுத்துள்ளோம்.

குறிப்பாக இராணுவத்திடம் இருந்த ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் சில மாதங்களுக்குள்ளேயே 3 இல் 2 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

முழு நாட்டையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது மற்றைய பிரதேசங்களில் நிகழாத அபிவிருத்திகள் வடக்கு, கிழக்கில் நடந்துள்ளன. சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டது. பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு பலவிதமான அபிவிருத்திகள் இங்கு நடத்திருக்கின்றன.

பல விடயங்கள் இன்னும் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது என்பதும் உண்மை. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று சொல்வது முழுமையான பொய்யாகும். இனிவரும் காலத்தில் விசேடமாக ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

குறிப்பாக தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மீட்சியாகும். மக்களுக்கு அரசியல் தீர்வு வரும் வரைக்கும் காத்திருக்காமல் சுய மரியாதையுடன் வாழ வேண்டும்.

இவ்வாறு வாழ வேண்டுமாக இருந்தால் மக்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தி நிற்கக் கூடாது. அப்படியான மாற்று பொருளாதார கட்டமைப்பை கொண்டு வருவதற்கு பல முன்னெடுப்புக்களை செய்துள்ளோம்.

தேர்தலுக்கு பின்னர் அத்திட்டங்களை அமுல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதில் முக்கியமான விடயமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.

இளைஞர்களுக்கு வேலை இல்லாதுவிட்டால் அவர்கள் வெளிநாட்டிற்குத்தான் போவார்கள். அரசியல் தீர்வை கவனிக்கும் போது சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காக வேலை செய்வோம்.

இவற்றை செய்ய வேண்டுமானால் நாங்கள் பலமான அணியாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். வேறு அணிகளுக்கு வாக்குகள் போகுமாக இருந்தால் அவை வீணாகவும், சிதைவடைந்து போகும் வாக்குகளாகும் என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை 10 ஆசனங்களுக்கு அடக்கிவிட்டு ஏனைய கட்சிகளில் இருந்து ஒருவர் இருவர் பாராளுமன்றத்திற்கு சென்றால் அதைவிட பலவீனமான சூழல் என்று ஒன்று இருக்க முடியாது.

எனவேதான் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும். என்றார்.

Leave a Reply