வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டு விவகாரம்: நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு- முஸ்லிம்களின் போராட்டம் நிறைவு
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடத்தை அகற்றுமாறு கோரி சாளம்பைக்குளம்
மக்களால் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பகட்டு வந்த போராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது.
வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பவற்றின் குப்பை கொட்டும் இடம் பம்பைமடுவில்
உள்ளதால் அதனருகில் உள்ள புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு
ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடத்திற்கு செல்லும் வீதியை வழி மறித்து
கொட்டகை அமைத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியா நகரசபையினர், பிரதேச சபையினர், வவுனியா பிரதேச செயலாளர், மேலதிக
அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தியும்
போராட்டம் தீர்வு வரும் வரை தொடரும் என போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பவற்றின் குப்பையகற்றும்
பணிகள் 3 நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டு சென்றதன் அடிப்படையில் எதிர்வரும் 31-01-2020 வரை போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்ததுடன்,
தொடர்ந்து அவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், குறித்த குப்பை
கொட்டும் இடத்தை அகற்ற தவறினால் எதிர்காலத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக
தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நிருபர் – வெடியரசன்