தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு

Spread the love

தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு

தனியார் நிறுவன ஊழியர்களின் போராட்டம் நீடிப்பதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காட்சி
ஸ்ரீபெரும்புதூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது.

தற்போது செயல்படாமல் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்

பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ளது.

இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி உள்ள பெண் ஊழியர்களுக்கு 400 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து தகவலறிந்த பொதுசுகாதார துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளவேடு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் வாந்தி பேதி ஏற்பட்டது தெரிந்தது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரின் நிலைமை குறித்து தெரியவில்லை என்று தனியார் பெண் ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் ஆனால் பெற்றோர்களுக்கு தனியார் நிறுவனம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் மற்ற பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 500 பெண் ஊழியர்கள்
தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

புதுச்சத்திரம் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் போராட்டத்தை கைவிட பெண் ஊழியர்கள் மறுத்ததால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

Leave a Reply